Friday, December 23, 2011

கனா காணும் கனவுகள்

அவளின் நம்பர் வாங்கி மொபைலில் ஸ்டோர் செய்து உறங்கியது தான் தெரியும். காலையில் வராத அந்த குட் மார்னிங் மெசேஜுக்கு டான் என எழுந்து மொபைல் பார்த்தேன்.சினிமா காதல்கள் சினிமா திருமணங்கள் நிஜ வாழ்வில் நடக்காதென உறைத்தது. ஆனால் மீண்டும் மனம் அந்த கனவுகளை காணாமல் போவதில்லை என்று தோன்றியது. சில யாதர்த்த எண்ணங்கள் கனவுகளோடு தான் இருக்கும் போல்.

முந்தைய இரவில் சேமித்த அந்த 20 டிராப்ட் மெசேஜ்களை அழித்துக்கொண்டே இன்று அவள் அனுப்புகிறாளோ இல்லையோ நான் கண்டிப்பாக அனுப்ப வேண்டுமென முடிவெடுத்தேன்.


வழக்கமான அந்த பொழுதில் வாழ்க்கையின் அவசியங்களுக்கு அவசரமாக பயணித்து கொண்டிருக்கும் மக்கள் வெள்ளத்திற்கு இடையில் சிக்கி கொண்டிருந்தாலும் நொடிக்கொரு
தடவை மொபைல் பார்க்க தவறவில்லை. மெசேஜ் அல்லது அழைப்பு வந்தால் என்ன செய்வது வராவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணங்கள் மட்டுமே மனதில்
ஓடி கொண்டிருந்தது .

நேற்று தான் அவள் அறிமுகமானாள் .

மன்னிக்கவும் .

அறிமுகபடுத்தபட்டாள் .

பார்த்த உடன் பிடித்து போகும் வசீகரம் நிறைந்திருந்தாள் .
பள்ளி. கல்லூரி. வேலை. இத்தனை கட்டத்தையும் கடந்து பெற்றோர் பார்க்கும் ஒருவனை பார்க்கும் அளவிற்கு அவள் வந்திருக்கிறாள் என்றால் நம்பமுடியவில்லை.

ஒரு வேலை காதல் தோல்வியாய் இருக்குமோ இல்லை பெற்றோர் வற்புறுத்தலால் வந்திருப்பாளோ. எண்ணமெல்லாம் எதிர்வாதம் போட்டுகொண்டிருக்க கண்கள் ஏனோ இவள் தான்
இனி என காட்டி கொடுத்து கொண்டிருந்தது. அது கவனிக்கபட்டும் கொண்டிருந்தது.

பட்டிகாட்டான் பார்த்த மிட்டாய் கடை போலில்லை, கடவுள் பார்த்த பக்தன் போல.

இந்த உலகில் இது வரை பூத பூதிரத பூக்களை விட அவள் அழகு.

நான் பார்த்த பார்த்திராத பூக்களையெல்லாம் விட அவள் அழகு.

நான் பிறந்த புண்ணியம் அவள் பிறந்த அன்றே பூர்த்தியானது.

அர்த்தமற்ற வாழ்வை ஒரு நொடி பொழுதில் அர்த்தமாக்கினாள்

கண்கள் பார்க்கும் காட்சிகள் அனைத்திலும் நிறைந்திருந்தாள்

இனி இவள் தான் என பார்த்த நொடியில் மனதின் அதனை குழப்பங்களுக்கும்
முடிவு கட்டினாள் .


பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தது. எனக்கோ ஒரிருவர்த்தை பேசினால் போதும் போல் இருந்தது அவளிடம். இத்தனை வருடம் உபயோகபடுத்தபடாத தைரியம் அனைத்தையும் வரவேற்று பெண்ணிடம் பேச வேண்டும் என்றேன். சலசலப்புகள் அமைதியாகி மீண்டும் சலசலப்புகள் துவங்கியது. சந்தேகத்துடன் அனுமதிக்கப்பட்டேன் .

என் கண்கள் அவளை பார்க்க அவள் கண்களோ தொலையாத ஒன்றின் தேடலில் ஈடுபட்டு கொண்டிருந்தன. என் கேள்விகள் அனைத்தும் மீண்டும் எழ, அவளிடம் பதில்கள் எழ சிரமப்பட்டன .

"பிடிச்சிருக்கா "

"எதா இருந்தாலும் வீட்ல பேசிக்கோங்க "

"நான் உன் வீட்டோட வாழ போறதில்ல. நீ சொல்லு "

"எனக்கு இப்படியெல்லாம் பேசத்தெரியாது . நீங்க வீட்லயே பேசிக்கோங்க "

"வீட்ல வற்புறுத்துறாங்களா ?"

"இல்ல "

"அப்ப பிடிச்சிருக்கா? "

" ......"

மனது லேசானது. சூழல் அவளை பேச விடாமல் தடுத்துகொண்டிருப்பது புரிந்தது. மீண்டும் தைரியத்தை வரவழைத்து கெஞ்சி கூத்தாடி நம்பர் பரிமாற்றம் நடந்தது .
நிச்சயம் அவளிடம் பேச வேண்டும். இவள் தான் இனி என முடிவெடுத்திருந்தாலும் பேசினால் நல்லது என உள்ளுணர்வு அடம்பிடித்து கொண்டிருந்தது.

நிகழ்காலம். அவளின் அழைப்பிற்காக காத்திருந்து காத்திருந்து காய்ந்து போனது தான் மிச்சம்.

மொபைலில் அத்தனை அவசரமாக மெசேஜ் டைப் செய்யும் விரல்களுக்கு அதை அனுப்ப மட்டும் தைரியமில்லாமல் அன்றைய பொழுதும் அர்த்தமில்லாமலே கழிந்தது. தலையணையும் மொபைலின் நெருக்கமும் கூடிகொண்டே போனது.

நாளைய பொழுது நல்லது நடக்கும் என அன்றும் நம்பிகையுடன் உறங்கினேன். கனவுகள் எல்லாம் அவள்.

விடிந்தது.

அன்றைய விடியல் விசேஷமானது. போன் எஸ்எம்எஸ் ஒலி அடித்தது . குட் மார்னிங். அவளின் மெசேஜ்.

அதை பார்க்கும் முன்னே அம்மாவின் அலறல் .

"டேய்! எழுந்திருடா. இன்னைக்கு பொண்ணு பாக்கபோணும்ல " .

Saturday, October 8, 2011

என் சாளரம் - 1

கனவுகள் இலவசம்
என் கனவுகளெல்லாம் அவள் வசம்.

ஒற்றை புன்னகையில் கற்றையாய்
என் உயிரை அள்ளி சென்றவள்.

நித்தம் நித்தம் என் கற்பனையில்
கருவாகி பிறப்பவள்.

தஞ்சமாக என் நெஞ்சில் புகுத்திட
நான் தேடும் பிஞ்சு நெஞ்சவள்.

என்னில் ஊற்றெடுக்கும் ஒவ்வோர்
வார்த்தைக்கும் அர்த்தமானவள்.

அழகுகளை படைக்க பிரம்மன்
படைத்த அளவுகோல் அவள்.

திமிரான அழகுகள் ஏராளம்
இவளோ அழகால் திமிறவைத்தவள்.

வாழ வெறுத்த அனைவருக்கும்
வாழ்க்கை பிடிக்கவைத்தவள்.

ஒரே பார்வையில் இதயத்தில்
ரத்த வறட்சியை உண்டுவிப்பவள்.

அறிவியல் மறந்த பல
ரசாயன மாற்றங்களை உருவிப்பவள்.


களவாட நினைக்கும் நேரம்
களவுகொடுப்பவளுக்கு தெரியாது .
காதலை தவிர.

கற்பனைகள் வறண்டு போகாது
நீ என் கண்முன்னே இருக்கும்வரை.

என்னவளாகாவிடினும்.

Sunday, February 13, 2011

விடிவில்லா இரவு - சிறுகதை

அர்த்தமற்ற இரவின் அர்த்தஜாம நேரத்தில் கன்னத்தில் ஜில்லென்று மோதிய அந்த ஒற்றை காற்று மனதின் தெளிவுகளை நீக்கியது . மீண்டும் அந்த ஒற்றை காற்றிற்காக காத்திருந்து தோற்ற போது தான் அந்த நிகழ்வின் முக்கியத்துவம் உரைக்க ஆரம்பித்தது .

மே மாத இரவின் மெல்லிய வியர்வை துளிகள் நெற்றியில் பூத்திருந்த நேரத்தில் அந்த ஒற்றை காற்று இதமாக இருந்ததே தவிர கிலியை உண்டு பண்ணவில்லை. ஆனால் இப்பொது உடலின் இதமான பாகங்கள் எல்லாம் வியர்வையில் குளித்து கொண்டிருந்தன.

இத்தனை நாளில் தனிமை வருத்தியதே தவிர பயமுறுத்தவில்லை. இன்றைய இப்போதைய தனிமை அப்படியல்ல. முகம் தெரியாத ஒருவரை கூட நொடிபொழுதில் நண்பனாக ஆக்கிக்கொள்ள துடிக்கும் தனிமை. இல்லை.பயம்.

கண்கள் அங்கும் இங்கும் இருளில் இருட்டை துழாவியது .

தூரத்தில் கண்ணுக்கு தென்படாத ஐஸ் வண்டியின் மணிசத்தம் கேட்டது. சற்று நேரத்திற்கெல்லாம் நான்கைந்து நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டது. ஆனால் அதுவும் கண்ணுக்கு தென்படவில்லை.

இது யாரோ வேண்டுமென்று காட்டும் விளையாட்டோ என்றும் தோன்றியது. ஆனால் இந்த விபரீத விளையாட்டுகளை நிகழ்த்தும் அளவிற்கு இன்னும் நண்பர்கள் சேரவில்லை. எதிரிகளும் தான் .

திடீரென்று ஒரு ஆட்டோ வரும் சத்தம் கேட்டது .

ஆட்டோவும் கண்ணுக்கு தெரிந்தது. கை நீட்டும் முன் அது நின்றது . போகும் வழியில் இறக்கி விடுவேன் என அவன் கூறியதை மறுக்கும் நிலையில் நான் இல்லாததால் மறுக்காமல் அமர்ந்தேன்.

ஆட்டோ இன்னொரு இருட்டு சந்தில் நின்றது. இறங்குமாறு கண்ஜாடை காட்டினான். பணம் கைமாறியது. முகம் பதியவில்லை. இறங்கி எந்த இடம் என யோசித்த வேளையில் ஆட்டோ போனதே தெரியவில்லை. சப்தமும் வந்ததாக தெரியவில்லை.

அத்தனை இருளிலும் அவன் இறக்கி விட்ட இடம் என்னவென்று மட்டும் திடீரென புரிந்தது.காரணம் புரியவைத்தது காட்சி அல்ல. வாசனை. நாற்றமேன்றே சொல்லலாம். ஆம். பிணங்களின் நாற்றம். எரிந்து முடிக்கும் நிலையில் இருக்கும் பிணம் போலும். வாசனை குறைந்து கொண்டே வந்தது .

இப்போது பயம் இல்லை. ஒரு விதமான சந்தோஷம் இருந்தது. காரணம். நான் இறங்கியது சுடுகாடு. சுடுகாட்டில் சந்தோஷத்திற்கு காரணம். வெட்டியான் நிச்சயம் அங்கு இருக்க வேண்டும். எரிந்து போன உடலில் சாம்பலையும் மிச்சமான எலும்புகளையும் எடுக்க அவன் நிச்சயம் காத்திருக்க வேண்டும்.

அந்த காம்பவுண்ட் சுவரை ஒட்டியே ஓடினேன். கதவு திறந்திருந்தது. இங்கு திருட பொக்கிஷமா இருக்கிறது கதவை பூட்டுவதற்கு.

எதிர்பார்த்தபடி வெட்டியான் இருந்தான். நல்ல போதையில். அவனருகில் சென்று நின்றேன். அவன் பேசும் நிலையில் இல்லை. போதை தலைக்கேறி சரிந்திருந்தான். உலுக்கி பார்த்தும் பயனில்லை. வெளியில் தனிமையில் செல்ல மனம் ஒத்துழைக்கவில்லை. இவனுடன் இருந்து காலையில் செல்லலாம் என முடிவெடுத்தேன்.

மீண்டும் சில்லென கன்னத்தில் ஒரு காற்று அடித்தது. பயம் தொற்ற துவங்கி தோற்றது. அருகில் துணைக்கு இவன் இருப்பதால்.

அசந்த நேரத்தில் தூங்கியிருப்பேன் போலும். சற்று நேரத்திற்கெல்லாம் மீண்டும் கன்னத்தில் ஒரு ஒற்றை காற்று. ஆனால் இப்போது அதில் ஜில் இல்லை. ஆனால் கண் திறந்து பார்க்க தோன்றவில்லை. முடியவில்லை என்றும் சொல்லலாம்.

விடிந்தது. காற்று அளவுக்கு மீறி ஜில்லென வீசிக்கொண்டிருந்தது.

வெட்டியான் என் சாம்பலையும் எலும்புகளையும் அள்ளி கொண்டிருந்தான்.

பயம் காற்றில் இல்லை மனதில் தான். தாமதமாக புரிந்தது.

Saturday, October 16, 2010

இரப்பு - சிறுகதை


தினமும் கடந்து போகும் அந்த சாலையில் அன்று மட்டும் புதிதாக ஒரு பிச்சைகாரர் முளைத்திருந்தார். அங்கிருந்த பிச்சைகாரர்களில் பத்தோடு பதினொன்றாக இருந்தாலும் அவர்களை விட இவர் சற்றே மாறுபட்டிருந்தார். கண்களில் இந்த நிலைக்கு தான் வந்துவிட்டோமே என்ற வருத்தம் நிறைந்து இருந்தது. ஆனாலும் அங்கிருந்த மற்ற பிச்சைகாரர்களின் செயல்களை நேரிடையாக பார்த்ததால் இவரின் மேல் உடனடியாக பரிதாபம் வந்துவிடவில்லை.


மற்ற பிச்சைகாரர்களை பற்றி முதலில் பாப்போம். அந்த சாலையில் வழியே நான் அடிக்கடி போவதுண்டு. அப்படி ஒரு நாள் அந்த வழியே போகும் போது தான் முதல் முறை அதை கண்டேன். அருகில் இருந்த ஒரு சந்தில் கஞ்சா புகைத்து கொண்டிருந்தனர் அதில் சிலர். மற்றொரு நாளை காலையில் டாஸ்மாக் திறக்க அங்கு காத்திருந்தனர். பசிக்கு பிச்சை எடுப்பதே தவறென நினைப்பவன் நான். இதில் தன் சுகத்திற்காக பிச்சை எடுக்கும் இந்த இழிவு மனிதர்களை பார்த்த மாத்திரத்தில் முடிவெடுத்தேன் இனி எக்காரணம் கொண்டும் யாருக்கும் பிச்சை போட கூடாதென.


அந்த அந்த புதியவரை கண்ட போது அவர் என்னை நோக்கி கை ஏந்தி பிச்சை கேட்டார். ஆயிரம் பேர் அவரை கடந்து சென்று கொண்டிருந்தாலும் அவர் நான் பார்க்கையில் முதல் முறையாய் என்னிடம் தான் கை ஏந்தினார். நான் அவரை பார்த்ததை அவர் நான் உதவ போகிறேன் என்று புரிந்திருக்க வேண்டும். ஆனால் மற்றவர்களை போல் நானும் முகத்தை மறுபக்கம் பார்த்து கொண்டு கடந்த போது அவர் முகம் சுருங்கியிருக்க வேண்டும்.


அன்றைய அலுவலக பொழுது மிக மெதுவாக நகர நினைவெல்லாம் அந்த பிச்சைகாரர் மேல் தான் இருந்தது. வெளியூரில் இருந்து வந்து பணமில்லாமல் பிச்சை எடுக்க துணிந்திருப்பாரோ இல்லை பிள்ளைகள் ஒதுக்கி வைத்து வேறு வழி இல்லாமல் வந்திருப்பாரோ. ச்சே ஒரு ரெண்டு ருபாய் கொடுத்திருக்கலாமோ? இப்படி மனவருத்தம் ஏற்பட்டிருக்காதே. மற்ற பிச்சைகாரர்கள் ஏதோ தொழில் செய்வதை போல அங்கு அமர்ந்திருக்க இவர் மட்டும் உடல் கூசி கூனி அமர்ந்திருந்தது மனதை பிசைந்தது. மற்றவர்களின் குரலில் இருந்த சோகம் முகத்தில் இல்லை. இவரிடமோ முகத்தில் இருந்த சோகம் குரலில் இல்லை.

சாயந்திரம் கண்டிப்பாக அவரிடம் ஒரு பத்து ருபாய் குடுக்க வேண்டும். முடிவு எடுத்ததே மனதிற்கு ஆறுதலாக இருந்தது.

அந்த ஆறுதல் நாளை வேகமாக ஓடியது. என்றுமில்லாத ஒரு விதமான புதிய மனநிலையில் இருந்தேன். அது வருத்தமா இல்ல சந்தோஷமா என்று சொல்ல தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக உதவிக்காக ஏங்கும் ஒரு பிச்சைகாரனின் தட்டில் விழும் பத்து ரூபாய்க்கு அவன் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சியில்லை. அதற்கு ஈடான ஒரு உணர்வு கையில் பணமிருக்கும் போது தோன்றது போலும்.

அவசரமாக அந்த பிச்சைகாரர்களை கடந்த அந்த பெரியவரை நெருங்கும் போது அவர் உறங்கி கொண்டிருந்தார். நின்று எழுப்பி காசு போட தோன்றவில்லை. அங்கு நடந்து பொய் கொண்டிருக்கும் அனைவரும் நான் அவரை எழுப்பி காசு கொடுப்பதை பார்ப்பார்கள் என தோன்றியது. அந்த பத்து பிச்சைகாரர்களை விட்டு அவருக்கு மட்டும் தேடி பிடித்து பிச்சை போடுவதை மற்ற பிச்சைகாரர்கள் எப்படி எடுத்து கொள்வார்கள். மன குழப்பத்தோடு நிற்காமலே சிந்தித்து கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். காலையில் கண்டிப்பாக அவருக்கு காசு போட வேண்டும். உறங்கி கொண்டிருந்தாலும் எழுப்பியாவது போட வேண்டும். முடிவெடுத்தேன்.

இரவு அன்று மட்டும் கழிவேணா என முரண்டு பிடித்தது. எப்போது உறங்கினேன் என தெரியாது ஆனால் விடிந்த உடன் மறக்க வாய்ப்பில்லாமல் முதலில் தோன்றியது அவருக்கு போட வேண்டிய அந்த பத்து ரூபாய் தான். மெதுவாக சாலையை அடைந்தேன். பத்து ருபாய் தாளை மேல் பையில் எடுத்து வைத்தேன். நிச்சயம் அவர் நான் பத்து ருபாய் கொடுத்தவுடன் வாழ்த்துவார். இன்றைய நாள் ஒரு நல்ல காரியத்துடன் துவங்க போகிறது. மனது பெருமிதப்பட்டது.

ஆனால். காணவில்லை. அந்த பெரியவரை காணவில்லை. அவசரமாக பக்கத்தில் இருந்த பிச்சைகாரரை விசாரித்தேன். அவரின் பதில் அத்தனை சப்தத்தையும் மௌனமாகியது அத்தனை கூட்டத்திலும் என்னை தனிமையாக்கியது .

"அவரா தம்பி. நேத்து முழுக்க இங்க இருந்தாரு. கெஞ்சி கேட்டாலே பிச்சை கெடைக்க மாட்டேங்குது. அவரு கேக்றதுக்கு யோசிச்சிட்டு இருந்தா எங்க பிச்சை விழும். பசியோடவே படுத்தாரு. நாங்க குடுத்தாலும் வாங்கிக்காம அழுதிட்டே கெடந்தாரு. அப்புறம் ரவைக்கு உசிரு போய்டுச்சு. போலீஸ் வந்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய்ட்டாங்க. கொஞ்சம் சாப்பிடிருந்தா உசிராவது தங்கியிருக்கும் "