Saturday, August 28, 2010

கண் மணியே பேசு - 6


சாவித்திரி ஒரு வித குழப்பத்துடன் காத்திருந்தாள் .

ஆனால் அந்த குழப்பத்தில் ஒரு தெளிவு இருந்தது .

கணேஷை எதிர்பார்த்து காத்துக்கொண்டே இருந்தாள். அவளின் எதிர்பார்ப்பை வீணாக்காமல் கணேஷ் வந்து சேர்ந்தார்.

"என்னங்க ரொம்ப சோர்வா இருக்கீங்க. எதாவது பிரச்சனையா? "

"இல்ல அந்த சரக்கு கொண்டு போன லாரி சம்பந்தமா தான் பேசிட்டு இருந்தேன் "

"ஆமா மறந்துட்டேன். அந்த பிரச்சனை எல்லாம் சுமுகமா முடிஞ்சுதா ? "

"அது எல்லாம் ஓவர். ஆமா அந்த தலைசுத்தி கண் மணி உருட்டி மறுபடி கனவு எதாவது வந்துச்சா "

"இல்லங்க. அதுக்கப்புறம் எதுவும் வரல"

"நல்லது. சரி நீ சாப்பிட எதாவது எடுத்து வைம்மா "

"நீங்க டைனிங் டேபிளுக்கு வாங்க. நான் எல்லாத்தையும் எடுத்து ரெடியா தான் வச்சுருக்கேன்"

கணேஷ் முகம் கழுவி டைனிங் டேபிள் வந்தபோது உணவுடன் சொத்து பத்திரங்கள் அவரை வரவேற்றன .

"சாவித்திரி.. இது என்ன பத்திரம் எல்லாம் இங்க இருக்கு "

"என்னங்க மறந்துட்டீங்களா.. நீங்க தான இத எல்லாம் எடுத்து வைக்க சொன்னீங்க நான் எதுக்குனு கேட்டாலும்
நீங்க சரியா பதில் சொல்லல"

"வாட். நான் ரெடி பண்ண சொன்னேனா? "

"ஆமாங்க. வக்கீல் ராமநாதன கூட வர சொன்னீங்களே "

"என்னம்மா குழப்புற "

குழம்பிய நிலையில் ராமநாதனை தொடர்பு கொண்ட போது அங்கு தான் வந்து கொண்டிருப்பதாக கூறி துண்டித்தார். துண்டித்து கணேஷின் நிலையை மேலும் குழப்பமாக்கினார்.

கணேஷுக்கு இது துளி கூட விளங்கவில்லை. சொத்து சம்பந்தமாக கடந்த இரண்டு நாட்களில் பேசியதாக நினைவில்லை. ஆனால் அன்று காலை அலுவலகத்தின் ரகசிய அறையில் நடந்தது மட்டும் உண்மை என புரிந்தது . அவர்களை மீண்டும் சந்தித்தால் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்று தெரிந்தது.

"மிஸ்டர் கணேஷ் நிர்மலா செத்தது உங்க விஷத்துனால தான்னு எங்களுக்கு தெரியும் "

"சத்தியமா நான் க்ளோரோபார்ம் தான் குடுத்தேன். அவ அதுல சாக சான்ஸ் இல்ல"

"நீங்க யூஸ் பண்ணது க்ளோரோபார்ம் பாட்டில் தான். ஆனா அதுக்குள்ள இருந்தது க்ளோரோபார்ம்னு உங்களுக்கு நிச்சயமா தெரியுமா"

"அது .. வந்து.. "

"மிஸ்டர் கணேஷ் நீங்க ஒண்ணு புரிஞ்சுகோங்க. நீங்க எங்கள கண்டு பயப்பட வேண்டிய அவசியம் இல்ல. உண்மையா சொல்ல போனா உங்கள பெரிய ஆபத்துல இருந்து காப்பாத்த தான் இங்க வந்தோம்"

"என்ன ஆபத்து . அப்புறம் என்னை காப்பாத்துறதுல உங்களுக்கு என்ன லாபம்"

"லாபம் இருக்கு, ஆனா அது என்ன. நாங்க யாருன்னு கேக்காதீங்க. இந்த நேரத்துல அத நீங்க தெரிஞ்சுகறது உங்களுக்கும் நல்லது இல்ல எங்களுக்கும் நல்லது இல்ல"

"சரி. எனக்கு தெரிஞ்சதெல்லாம் இது தான். நிர்மலாவ மிரட்டி இன்னும் எங்களுக்கு எதிரா எதாவது ஆதாரம் இருந்தா வாங்க தான் வர சொன்னேன் . ஆனா விஷயம் கை மீறி போய்டுச்சு "

"இல்ல கணேஷ்.. கை மீறி போல. கை மீறி போக வைக்கப்பட்டிருக்கு. உங்களுக்கு எதிரா ஒரு கூட்டம் செயல்பட்டுட்டு இருக்கு. அத பத்தி நாங்க விலாவரியா அப்புறம் சொல்றேன். நீங்க ஒடனே வீட்டுக்கு போங்க"

"ஏன் .. எதுக்கு . அப்ப இந்த பிணம் "

"அத நாங்க பாத்துக்றோம். உங்கள காப்பாத்த பாண்டிச்சேரில இருந்து இத கொண்டு வந்தோம் , இங்க இருந்து அப்புறபடுத்துறதா கஷ்டம். நீங்க உடனே வீட்டுக்கு போங்க. அங்க நடக்க போற விஷயங்கள் உங்களுக்கு கொஞ்சம் தெளிவ ஏற்படுத்தும் "

அவர்கள் கூறியது கணேஷ் மனதில் ஓடி கொண்டிருந்தது. அந்த காலிங் பெல் ஓசை அந்நினைவை கலைக்கும் வரை.

"என்னங்க வக்கீல் வந்துட்டாரு போல"

"சரி இரு நான் போய் பாக்றேன் "

கதவை திறந்த கணேஷ் இளமாறனை கண்டு திகைத்தார் .

"இது யாரு? அதோ கேட் பக்கத்துல வக்கீல் வந்துட்டார் பாருங்க" இளமாறனை கண்டு திகைத்த சாவித்திரி வக்கீல் ராமநாதனை கண்டதும் சாந்தமடைந்தாள் .

"ஹலோ.. மிஸ்டர் கணேஷ். எப்படி இருக்கீங்க.. போலீஸ் இங்க என்ன பண்றாங்க" இரு கேள்விகளை கேட்டு கணேஷை பார்த்த ராமநாதனை சாவித்திரி வரவேற்று உள்ளே கொண்டு போனாள் .

கணேஷ் ஏற்கனவே இருந்த குழப்பத்தில் ராமநாதன் சாவித்திரியிடம் ஒரு வித அன்னியோன்யம் இருப்பதை கவனிக்கவில்லை.

இளமாறன் நடந்தவைகளை உள்வாங்கி கொண்டு தன் கம்பீர குரலில் வந்த வேலையை பார்க்க துவங்கினார்.

"யு ஆர் அண்டர் அரெஸ்ட்" கர்ஜித்தார்.

"சார்.. நான் என்ன பண்ணேன்" கணேஷ் முகத்தில் அப்பாவித்தனத்தை காட்டிகொண்டிருந்தார் .

"உங்கள இல்ல மிஸ்டர் கணேஷ். அவங்கள " இளமாறனனின் பார்வை கணேஷை கடந்து சென்றது.

(திகில் தொடரும்)

Saturday, August 21, 2010

கண் மணியே பேசு - 5


கணேஷை வரவேற்க அந்த ரகசிய அறைக்குள் பிணத்துடன் காத்திருந்தனர் அந்த நான்கு கண்களுக்கு சொந்தகாரர்கள்.

"என்ன மிஸ்டர் கணேஷ் எங்கள இங்க எதிர்பார்கலல?"

"நீங்க..நீங்க... யாரு? நான் இதுக்கு முன்னாடி பாத்ததே இல்லையே "

"பயப்படாதீங்க கணேஷ். நாங்க உங்களுக்கு வேண்டியவங்க தான்"

"வேண்டியவங்களா? "

"பின்ன. போலீஸ் கிட்ட நீங்க கொலை செஞ்ச நிர்மலாவோட பிணம் சிக்காம இருக்க நாங்க தோண்டி எடுத்துட்டு வந்து உங்கள காப்பாத்துணோமே. அப்ப நாங்க உங்களுக்கு வேண்டியவங்க தான? "

"நிர்மலாவ நான் கொலை பண்ணேனா?"

"போதும் மிஸ்டர் கணேஷ். நிர்மலாவ மயக்குறதுக்கு யூஸ் பண்ண க்ளோரோபார்ம்ல விஷம் கலந்து அவள நீங்க கொலை பண்ணது எங்களுக்கு தெரியும்"

"வாட் நான்சென்ஸ்"

"நீங்க அந்த பழிய உங்க ஆட்கள் மேல போட முயற்சி செஞ்சது கூட எங்களுக்கு தெரியும் "

"நீங்க நல்லா கற்பனை பண்றீங்கன்னு நினைக்றேன். உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம். உங்களுக்கு இப்ப என்ன வேணும் "

"மிஸ்டர் கணேஷ் எங்களுக்கு என்ன வேணும்னு நாங்க அப்புறம் சொல்றோம். ஆனா நீங்க தப்பு செய்யலன்னு மட்டும் சொல்லாதீங்க. நிர்மலா பிணத்த போலீஸ் பிடிச்சு போஸ்ட் மார்டம் செஞ்சா எல்லாம் தெரிஞ்சிடும்"

"தாராளமா செய்ங்க. நிர்மலா மூச்சு திணறி செத்தானு தான் வரும் "

"கணேஷ், உங்களுக்கு இன்னும் பல விஷயங்கள் புரியலன்னு நினைக்றேன்"

---------------------------

பாண்டிச்சேரி .

"சார், அவங்கள அப்பவே பிடிச்சிருக்கலாமே ஏன் விட்டுட்டு இப்ப அந்த பசங்கள பிடிக்க போறோம் "

"எல்லாம் ஒரு காரணமா தான் கண்ணையன். அங்கேயே அவங்கள பிடிச்சிருந்தா நமக்கு அவங்க அங்க வந்ததுக்கான உண்மையான கரணம் தெரியாம போயிருக்கும்" இளமாறன் பதிலில் ஒரு திட்டம் உருவாகியிருந்தது தெரிந்தது.

"அப்ப அவங்க வந்தது அவங்க சொன்ன காரணத்துக்காக இல்லையா? "

"நிச்சயமா இல்ல. அந்த டெலிபோன்ல வந்த தகவல் படி எதோ புதைக்க தான் தோண்டிருக்காங்க. ஆனா இவுங்க சொன்ன சுண்டக்கஞ்சி கதை நம்பும்படியா இல்லை"

"அப்ப அவரோட ஆட்கள புடிச்சு உண்மைய விசாரிச்சிடலாமா? "

"அது ரொம்ப ஈஸி இல்ல. இத லத்தியால செய்றத விட புத்தியால செஞ்சா தான் உண்மை தெரியும் "

"சார்! சார்!. அவனுங்க வண்டி அங்க நிக்குது பாருங்க"

"கண்ணையன், நீங்க போய் அவனுங்கள கூட்டிட்டு வாங்க. நான் இங்க நிக்றேன் "

"சரி சார்"

அந்த கும்பல் போலிசை சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. சாமர்த்தியமாக ஒரு பெரும் சிக்கலில் இருந்து நழுவியதாக நினைத்து கொண்டிருந்தார்கள். அந்த நினைப்பில் மூழ்கி இருந்தவர்களை கண்ணையனின் குரல் சற்றே பயமுறுத்தியது.

"டேய் . எல்லாரும் வெளிய வாங்க. சப்-இன்ஸ்பெக்டர் சார் கூப்டுறாரு"

"ஏன்? எதுக்கு? .. நாங்க என்ன செஞ்சோம்"

"பதில் சொன்னா தான் வருவீங்களா. வாங்கடா" கண்ணையனின் உருட்டலில் சப்தம் மொத்தமாக அடங்கியது.

"சார், எதுக்கு சார் எங்கள கூப்டீங்க" கும்பலின் தலைவன் பாண்டி தான் முதலில் பேசினான்.

"எதுக்கா.. தெரியாத மாதிரி கேக்றீங்க. ஒரு பொண்ண புதைச்சிட்டு அப்புறம் ஏதும் தெரியாத மாதிரி என் கிட்டே கதை சொல்லிட்டு போனீங்க" இளமாறன் போட்டு வாங்க முயன்றார்.

"என்ன சார் சொல்றீங்க. நாங்க புதைச்சோமா? . நீங்க அங்க தான் செக் பண்ணீங்களே சார். பிணம் ஏதும் கிடைக்கலையே "

"சமாளிக்கிறதா நெனச்சுட்டு பொய் சொல்லிட்டே போகாத. மாட்னா அப்புறம் வெளிய வர முடியாத அளவுக்கு ஆய்டும்"

"சார் சும்மா மிரட்டாதீங்க. நீங்க என்ன கேட்டாலும் இது தான் என் பதில்"

"நிச்சயமா?"

"நிச்சயமா சார்"

"எங்க ஆளுங்க கணேஷ பிணத்தோட புடிச்சிருகாங்கனு சொன்னா கூடவா "

இளமாறனின் சற்றும் எதிர்பாராத அந்த பதிலில் அனைவருமே திகைத்தனர்.

கண்ணையன் ஆச்சர்யத்தில். மற்றவர்கள் அதிர்ச்சியில்.

அடுத்து வரும் வார்த்தைகள் தங்கள் வாழ்கையையே தீர்மானிக்கும் என பாண்டிக்கு புரிந்தது.

(திகில் தொடரும்)

Saturday, August 14, 2010

கண் மணியே பேசு - 4


கணேஷின் கார் வீட்டை சென்றடைந்த நேரம் நிர்மலாவின் பிணம் அவர் அலுவலகத்தில் இறக்கப்பட்டு கொண்டிருந்தது.

சாவித்திரி சலனமில்லாமல் உறங்கிகொண்டிருந்தாள் .

கணேஷுக்கு இரவு விடியாமல் நீண்டு கொண்டே போவது போன்ற உணர்வு ஏற்படிருந்தது. யோசித்து கொண்டே உறங்கிபோனார்.

காலையில் சாவித்திரி குளித்து முடித்து காபியுடன் வந்து அவரை எழுப்புகையில் இரவு நடந்தது எல்லாம் மனதிற்குள் தோன்றவில்லை.

சாவித்திரியின் கண்கள் ஆனால் ஏதோ பதிலை எதிர்பார்த்து கொண்டிருந்தது கணேஷிற்கு புரிந்தது .

"போலீஸ்கு காசு குடுத்து லாரிய ரிலீஸ் பண்ணிடேம்மா "

சாவித்திரி திருப்தி அடையவில்லை. "அத பத்தி சொல்ல வரலங்க. நேத்து நீங்க போனப்புறம் மறுபடியும் அந்த பொண்ணு பத்தின கனவு வந்துச்சு "

காபி எழுப்பி விடாத உணர்வுகளை சாவித்திரி எழுப்பிவிட்டாள்.

"கனவுல என்னமா வந்துச்சு. அந்த பொண்ணு பிணத்த தோண்டி எடுத்தாச்சா "

"அது தான் நான் முன்னாடியே சொன்னேனே. போலீஸ் பிணத்த தோண்டி எடுத்துட்டாங்க"

"போலீசா?" கணேஷ் இரவு நடந்ததை நினைத்து பார்த்து குழம்பினார்.

"ஆமாங்க போலீஸ் தான் . இப்ப பிணத்த எதோ ஒரு பாக்டரிக்கு கொண்டு போனாங்க"

"பாக்டரியா? பேரு எதாவது தெரிஞ்சுதா? "

"இல்லங்க. பாத்தா நம்ம பாக்டரி மாதிரி தெரிஞ்சுது "

"என்னது நம்ம பாக்டரியா ?"

"இல்லங்க .. இருக்காது .. எனக்கு தான் நம்ம பாக்டரி நல்லா தெரியுமே.. பாக்க அப்படி இருந்துச்சு ஆனா அந்த இடம் நான் இது வரைக்கும் பாத்ததே இல்ல "


"சரி சரி. விடு. நமக்கென்ன. நம்ம கவலைப்பட வேண்டிய விஷயமா என்ன" கணேஷின் பதிலில் கவலை இருந்தது.

"ஆமாங்க. நீங்க சொல்றதும் சரி தான்" சாவித்திரி ஒரு வினோத புன்னகையுடன் விஷயத்தை முடித்தாள்.

கணேஷின் பாக்டரியின் எல்லா இடத்தையும் சாவித்திரிக்கு காட்டியதில்லை. ரகசியமான அந்த ஒரு பகுதியை சாதரணமாய் யாரும் கவனித்திட முடியாது. சாவித்திரியும் கவனித்ததில்லை அவரிடம் அதை பற்றி கேட்டதும் இல்லை. ஆனால் அவள் கனவில் பார்த்ததாக கூறியது அந்த ரகசிய பகுதியை போல இருந்தது. அவசரமாக அங்கு கிளம்பினார்.

சாவித்திரி அவரை தடுக்கவில்லை. அந்த வினோத புன்னகையும் அவளை விட்டு விலகியிருக்க வில்லை. கணேஷ் சென்று வெகு நேரம் ஆகியும் புன்னகை மாறவில்லை.



கணேஷ் அலுவலகத்துக்கு சென்று அருகில் இருக்கும் பாக்டரிகுள் நுழைந்தார் . நேராக அந்த ரகசிய அறைக்குள் சென்றார். அறை என்பதை விட அது பரந்து கிடக்கும் பூமி என்றே சொல்லலாம். எப்படியும் நான்கு அல்லது ஐந்து கிரௌண்ட் பரப்பு இருக்கும். மண்தரை. ஆங்காங்கே மண் குவியல்கள் . வெளியில் இருந்து பார்த்தால் வெறும் சுவர் போல தான் தெரியும் ஆனால் அந்த சுவருக்கு அந்த பக்கம் செல்ல படிகட்டுடன் கூடிய ஒரு ரகசிய வழி இருபது கணேஷுக்கு மட்டும் தான் தெரியும். அல்லது அவருக்கு மட்டும் தான் தெரியும் என்பது கணேஷின் அனுமானம் .

கணேஷ் படியில் அந்த அறைக்கு செல்ல ஆயத்தமானார்.

அங்கு காத்திருக்கும் பயங்கரங்களை அறியாமல்.

(திகில் தொடரும்)

Sunday, August 1, 2010

கண் மணியே பேசு - 3


கணேஷின் மனதின் ஓட்டத்திற்கு காரும் ஈடு கொடுத்ததால் முதலில் அந்த இடத்திற்கு சென்றார். அவர் சென்ற ஐந்தாவது நிமிடம் அவரது ஆட்களும் வந்தனர்.

நேரம். பன்னிரெண்டே முக்கால் .

அவருக்கு முன்னர் அங்கு வந்து சென்ற நான்கு கண்களையும் அங்கு வரப்போகும் போலீஸ் பற்றியும் கணேஷ் அறிந்திருக்கவில்லை.

"டேய் வாங்க தோண்ட ஆரம்பிப்போம். என் பொண்டாட்டி கணக்கு படி போலீஸ் வர இன்னும் ஒரு மணி நேரத்துக்கு மேல இருக்கு"

"என்ன பாஸ் சொல்றீங்க. போலீஸ் வராங்களா. எங்களுக்கு ஒண்ணுமே புரில"

"அதெல்லாம் அப்புறம் சொல்றேன். முதல்ல தோண்டுவோம் வா"

அனைவரும் தோண்டுவதற்கு ஆயத்தமானார்கள்.

பாதி தோண்டி முடித்த நிலையில் அந்த பெண்ணின் பிணம் இருப்பதற்கான அறிகுறி ஏதும் இல்லை.

"டேய்.. இடம் கரெக்ட் தான? "

"நிச்சயமா இதே இடம் தான் பாஸ். ஆனா அதுக்குள்ள பொணம் எங்க போயிருக்கும்னு தான் புரில"

"பிரச்சனை பெருசா ஆய்ட்டே இருக்கு டா "

"பாஸ் . பாஸ் . போலீஸ் வண்டி வருது" நொடியில் அனைவரையும் கிலி ஆட்கொண்டது.

கணேஷ் உறைந்திருந்தார்.

"இந்த நேரத்துல ..இங்க எல்லாரும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க" இளமாறன் மிரட்டலில் அனைவரும் அதிர்ந்தனர்.

"அது வந்து சார். வண்டி ரிப்பேர் ஆய்டுச்சு அதான் நிறுத்தி பாத்துட்டு இருக்கோம்" கணேஷ் சமாளிக்க முற்பட்டார்.

"அங்க என்ன பள்ளம் நோண்டுன மாதிரி இருக்கு" இளமாறன் தொடர்ந்தார்.

"அது ..... அது...." கணேஷ் திணறினார்.

"கான்ஸ்டபல் நீங்க அங்க போய் செக் பண்ணி பாருங்க"

"சார் என் பேரு கணேஷ். நான் மெட்ராஸ்ல பெரிய பிசினஸ் மேன். நீங்க என்ன சந்தேகபடுறது நல்லா இல்ல. நாங்க எல்லாரும் கடலூர் போயிடு இருக்கோம். நடுவுல இந்த பசங்க இங்க சுண்டக்கஞ்சி புதைச்சு வச்சிருகாங்கனு ஆசைப்பட்டு தேடிட்டு இருந்தாங்க அதான் பள்ளம்"

"அப்படியா சரி எல்லாரும் ஸ்டேஷன் வாங்க. அங்க பேசலாம்"

தூரத்தில் கான்ஸ்டபல் குரல் கேட்டது.

"என்ன கண்ணையன் எதாவது கெடச்சுதா "

"பள்ளத்துல ஏதும் இல்ல சார். ஆனா ஒரு பேப்பர் கேட்குது. லெட்டர் மாதிரி இருக்கு. இருட்டுல என்ன எழுதிருக்குனு தெரில"

"சரி இங்க கொண்டு வாங்க கார் லைட் வெளிச்சத்துல படிப்போம்"

கணேஷுக்கு அந்த வேளையிலும் வியர்த்து வழிந்து கொண்டிருந்தது. அவரது ஆட்களுகோ என்ன நடக்கிறது என்று விளங்கவில்லை. ஆனால் கணேஷ் இருக்கும் வரை பிரச்சனை இல்லை என மட்டும் நம்பினார்.

இளமாறன் லெட்டரை வாங்கி காரின் முன் நின்று படிக்கச் தொடங்கினார். கணேஷின் இதயத்துடிப்பு நொடிக்கு மூன்று முறை அடித்துகொண்டிருந்தது.

இளமாறன் கையில் கடிதம். சாவித்திரி சொன்னது போலவே.

"கண்ணையன் கார் ஹெட் லைட்ட ஆன் பண்ணுங்க "

கண்ணையன் உடனே ஆன் செய்ய இளமாறன் கடிதத்தை படிக்க தொடங்கினார்.

"அன்புள்ள காதலி ப்ரீத்திக்கு ... இது எதோ லவ் லெட்டர் மாதிரி இருக்கு".

கணேஷ் நீண்ட நேரம் கழித்து சுவாசிக்க தொடங்கியிருந்தார்.

திடீரென அவர் பார்வை இளமாறனின் கையை கவனித்தது. இளமாறன் கையில் கடிகாரம் இல்லை.

அவர் எண்ணத்தை கேட்டது போலவே கான்ஸ்டபல் கண்ணையன் கேட்டார்.

"சார் கைல வாட்ச் இருந்ததே காணும் "

"நான் தான் ஜீப்லையே கழட்டி வச்சுட்டு வந்தேன். சரி வெறும் லவ் லெட்டர் தான். காத்துல பறந்து வந்திருக்கு. Mr.கணேஷ் உங்க கார்டு குடுத்துட்டு போங்க. நான் வேற எதாவது தேவைன கால் பண்றேன்"

கணேஷ் கார்டை குடுத்து அவரிடம் விட்டு விடைபெற்றார். தற்காலிகமாக.

"டேய் நீங்க பாண்டிச்சேரிலயே இருங்க. மேற்கொண்டு என்ன பண்ணனும்னு நான் சொல்றேன். நான் உடனே வீட்டுக்கு போகணும் இல்லனா என் பொண்டாட்டிக்கு சந்தேகம் வந்துரும்"

"சரி பாஸ்"

கார் சென்னைக்கு விரைந்தது.

பிணம் எங்கே போனது. சாவித்திரி சொன்னது போல லெட்டர் இருந்தது ஆனால் இன்ஸ்பெக்டர் கையில் கடிகாரம் இல்லையே. லெட்டரும் எதோ லவ் லெட்டராக போய் விட்டது. இரண்டு மணிக்கு வர வேண்டிய போலீஸ் ஒரு மணிக்கே ஏன் வந்தது. போலீஸ் ஸ்டேஷன் வர வேண்டும் என முதலில் சொன்ன இளமாறன் பின்னர் விட்டது ஏன். அனைத்தும் புதிராகவே இருந்தது

கணேஷ் யோசித்து கொண்டிருந்த நேரம் இன்னொரு காரில் அந்த நான்கு கண்களின் சொந்தகாரர்கள் பயணித்து கொண்டிருந்தனர்.

இருவரும் போலீஸ் உடையில். கையில் டைட்டன் கடிகாரம் நேரத்தை ஒட்டி கொண்டிருந்தது. பையில் ஒரு கடிதம். வண்டியில் நிர்மலாவின் உடல்.

(திகில் தொடரும்)