Tuesday, January 5, 2010

மனச்சுவடு - 2

நான் பார்ப்பதை அவள் பார்த்ததை சிந்தனையில் விட்டு அகற்ற முடியாமல் பேச முடிவு செய்தேன். அவள் பார்வைக்கு ஆயிரம் அர்த்தங்கள் நானே என் மனதிற்கு கற்பித்தேன் . எல்லா ஆண்களின் எண்ணத்தை போல அனைத்தும் எனக்கு சாதகமாகவே யோசித்தேன்.

எப்படி பேச. என்ன பேச , எங்கு தொடங்க , எங்கு முடிக்க மீண்டும் கேள்விகள் முளைத்தன. ஆனால் பேச வேண்டும் என்ற தீர்மானம் மட்டும் எல்லா கேள்விகளையும் முறியடித்து வென்றது. மிக தவறான வெற்றி இது. சில நேரங்களில் சில முடிவுகள் தோற்பதே நல்லது. தோல்வியை விட நிச்சயம் வெற்றி நமக்கு தான் என்ற எண்ணத்துடன் பங்கேற்காமல் பார்த்து கொண்டிருப்பதும் சுகம் தான்.

பெயரளவில் என்னை யாரென்றே தெரியாத அவளுடன் பெயரை முதலில் தெரியப்படுத்தி அறிமுகம் செய்து கொண்டு பேச முற்பட்டிருக்க வேண்டும். கற்று தெரிந்த பாடம் இது. நிராகரிக்க படுவேன் என்ற எண்ணத்துடன் பேசினேன் , கடிதத்தில்.

வராத பதில் கடிதத்தை எதிர்பார்த்து காத்திருந்தேன். அது படிக்கப்பட்டு கிழிக்கப்பட்டு இருக்குமோ இல்லை படிக்கபடாமலே கிழிக்கப்பட்டு இருக்குமோ , மேற்கொண்டு அவளிடம் பேச முயற்சிகள் எடுக்கலாமா வேண்டாமா என்ற யோசனையிலே ஒரு மாதம் கழிந்தது. அவளும் அடிக்கடி செல்போனோடு ஒதுங்குவது முட்டுகட்டைகளை அடுக்கி கொண்டே போனது. மறுக்கப்பட்டதை மறக்க நினைத்து இந்த பழம் புளிக்கும் என வட்டாரத்தில் பேச்சுக்கள் எழ வைத்தேன். நாளைடவில் கண் எதிரில் அவள் இருந்தாலும் மறந்தே போனேன்.

மறந்தே போனேன் அந்த நொடி வரை, எல்லா மனமுடிச்சுகளையும் ஒரு நொடியில் அவிழ்த்துபோட்ட அந்த நொடி வரை , அஸ்தனமான சூரியனும் எட்டி பார்க்க எழுந்து வர துடித்த அந்த நொடி வரை, களைந்திருந்த பிச்சைகாரனை தேடி வந்த தர்மம் போன்ற அந்த நொடி வரை, அழுதுதுடிக்கும் குழந்தை மிட்டாய் பார்த்து சிரிக்கும் அந்த நொடி வரை.

பக்கம் சென்ற அவள் ஓரகண்ணால் எனை பார்த்து சிரித்த அந்த நொடி வரை.

(தொடரும்)

0 comments:

Post a Comment

நல்லதோ கெட்டதோ ஏதாவது சொல்லிட்டு போங்க :)