Thursday, May 14, 2009

எஞ்சோகம் கேக்குதாடி

நித்தம் நித்தம் நாம் படிச்ச
புத்தம்புது ராகமெல்லாம்
சத்தம் கித்தம் போடாம
சடுதியில சாகுதடி

மிச்சம் கிச்சம் இல்லாம
நாம் கொடுத்த முத்தமெல்லாம்
எச்சி கூட காயாம
கன்னத்துல கரையுதடி

நேத்து வச்ச மீன் கொழம்பும்
பதுக்கி வச்ச பழயசோறும்
நீ கொண்டு வருகயிலே
உன பாக்கயிலே பசி தீரும்
நீ ஊட்டயிலே ருசி மாறும்

மோட்டுவளை நீ குத்த
மறுபடியும் நான் முந்த
வேணா வேணான்னு
நீ சொன்ன கதையெல்லாம்
அந்த கருவைக்கு தெரியுமடி

கம்மாகரையிலே
நீ குளிக்கும் அழகெல்லாம்
கண்குளிர நான் பாக்க
கல்லெல்லாம் போதையானு
அத மறந்து உன பிடிக்க
கம்மாகரை காமகரையானதெல்லாம்
சடுதியிலே மறந்துடுச்சா


பத்திரமா நா வரஞ்ச
சித்திரமா நீ இருந்த
கடல் முழுங்கி துப்பும் சூரியனா நீ தெரிஞ்ச
கடன்கார பாவி என்ன கவிதையெல்லாம் எழுத வச்ச
இப்ப கவிதையெல்லாம் நெறய இருக்கு
பாவிமக நீ இல்லயே

சந்தையிலே அப்பனோட
நீ வந்த நேரமெல்லாம்
வேசம் போட்டு வளவிஎல்லாம்
தொட்டு தொட்டு போட்டு விட்ட
அந்த சுகம் தேடுதடி
மனசு கெடந்து நோகுதடி

வண்டிக்கார முருகேசன்
கருவயிலே நம பாத்து
சவுக்கால என மாத்தி
பிரிச்சி உன்னை இழுக்கையிலே
மண்டையிலே அடிச்ச அடி
நினைவு தப்பி போச்சுதடி
உன் நெனைப்பு மட்டும் மாறலடி

மழை பெஞ்சி நான் முழிக்க
கண்ணுமூடி ஓடினதெல்லாம்
உன் வீட்டு சந்தியிலே
திண்ணையிலே ஊர்கூடி
என ஒதுக்கிவச்ச சேதியெல்லாம்
தெரியாம போச்சுதாடி

காத்துவாக்குல வந்த கல்யாண சங்கதிய
அழுது சிருச்சு கொழம்பி தவிச்சேன் எங்கதிய
சத்தியமா உனக்கு மட்டும் தான்னு
நீ செஞ்ச சத்தியமெல்லாம்
நம்பி தொலச்ச வெள்ளந்தி என்ன
கழுத்தறுத்து கழுத்துதாலி வாங்கப்போக
மனசுனக்கு வந்துசசாடி

நீ சொல்லி நான் விட்ட சாராயம்
வெசம் கலந்து அத குடிச்சு
நா வெட்டுன குழியில போய் விழுந்து
காத்து வந்து மணல் மூடி
சவமாக கெடக்குதேன் நா
நீ கட்டுனவன் கைபிடிச்சு
சந்தோஷமா வாழ்ந்துக்கோடி ....

6 comments:

VISA said...

Wonderful.
//கடல் முழுங்கி துப்பும் சூரியனா நீ தெரிஞ்ச
கடன்கார பாவி என்ன கவிதையெல்லாம் எழுத வச்ச
இப்ப கவிதையெல்லாம் நெறய இருக்கு
பாவிமக நீ இல்லயே//

I love these lines.

மனுநீதி said...

நன்றி விசா.

வால்பையன் said...

அண்ணே நீங்க சினிமாவுக்கே பாட்டெழுதலாம் சந்தம் அருமையா வருது உங்களுக்கு!

கோர்த்து விட்டுடட்டுமா!

மனுநீதி said...

அருண் நான் உங்கள விட சின்னவன். அண்ணே வேண்டாமே :)

இந்த வாட்டி எழுதுனதுல தான் சந்தம் ஓரளவுக்கு வந்திருக்கு. உங்க பாராட்டுக்கு நன்றி.

உங்களுக்கு சினிமால தொடர்புகள் அதிகமா?.. சும்மா தான் கேக்றேன் .

வால்பையன் said...

அன்பா வாலுன்னு கூப்பிடுங்க!
அருண் வேண்டாம்!

மனுநீதி said...

சரிங்க வால் :)

Post a Comment

நல்லதோ கெட்டதோ ஏதாவது சொல்லிட்டு போங்க :)