Saturday, January 16, 2010

மனச்சுவடு - 3

அவள் ஓரக்கண் பார்வையின் பாதிப்பு விலக ஒரு வாரம் பிடித்தது. அதன் பிறகு அவள் என் கவனத்தை அவள் பக்கம் திருப்ப அடிக்கடி பல முயற்சிகள் எடுத்தது எனக்கு மட்டும் அப்பட்டமாய் தெரிந்தது. ஆனால் இன்னொரு முறை நானே பேச முற்பட்டு மூக்குடைபடும் நிலையில் நான் இல்லை, அவளாகவே பேசட்டும் என்ற பொய் வீராப்பில் காத்திருந்தேன்.

அந்த நாளும் நெருங்கியது. ஆனால் அது நெருங்க ஒரு மாதத்தை விழுங்கியிருந்தது.

கேண்டீனில் ஒரு நாள் காபி எடுக்க நான் சென்ற பொது அவளும் நூல் பிடித்தாற்ப்போல் பின்னால் வந்தாள். அன்று தனிமையில் பேச ஏதுவாக கேண்டீனில் யாரும் இல்லை. மனதிற்குள் திட்டங்கள் வகுக்கபட்டு கொண்டிருந்த வேளையில் குயில் கூவியது. அது எக்ஸ்க்யூஸ் மீ என கூவியது. கட்டை அருகில் இருந்தும் மின்சாரம் பாய்ந்த நிலையில் செய்வதறியாது , சொல்வதறியாது இருந்த நிலையில் மீண்டும் குயில் கூவியது. "கொஞ்சம் தள்ளி நிக்கிறீங்களா நான் காபி எடுக்கணும்" . இப்போது ஒரு விளக்குமாற்று கட்டு தானே வந்து என்னை அடித்து சுயநினைவை மீட்டு தந்தது.

அவள் காபியுடன் ஒரு டேபிளில் அமர்ந்தாள், துணைக்கு செல்போனை எடுத்துக்கொண்டாள். நான் காபியோடு இன்னொரு டேபிளில் அமர்ந்தேன். தனிமையில் அவள் பேசினாள். செல்போனின் மறுமுனையில் யார் என்ற கேள்வி மட்டும் என் மனதில் திரும்பத்திரும்ப ஓடிகொண்டிருந்தது. அன்று தனிமையில் பேச ஏதுவாக கேண்டீனில் யாரும் இல்லை. ஆம் அவள் தனிமையில் யாருடனோ பேச கேண்டீனில் யாரும் இல்லை. தடையாக இருந்த என்னை மட்டும் கண்ணாடியின் பிம்பத்தில் கோபாமாக பார்த்து தெறித்து கொண்டிருந்தாள். நான் விலகுவதாக இல்லை . அவளை விட அவள் உரையாடலின் சாராம்சம் என்னை அங்கே உட்கார வைத்தது. பல விஷயங்களை உணர வைத்தது. அந்த உரையாடலை நான் கேட்க வேண்டும் என்றே அவள் உரக்க பேசி கொண்டிருந்ததும் புரிந்தது.

"டீ நகர் போகணும் . முகூர்த்த பட்டெல்லாம் எடுக்கணும் அப்புறம் நகை வாங்கணும். தாலி செயினும் அன்னைக்கே வாங்கிடலாமா.. அப்புறம் " அவள் பேச பேச என் மூச்சு சீர்கெட்டு மனது கனக்க
தொடங்கியிருந்தது.

அவள் உரையாடல் முடிந்து என்னை கடக்கும் போது அதே ஓரவிழி பார்வை.

இம்முறை எனக்கு புரிந்தது அது ஆசையாக பார்க்கும் பார்வை இல்லை ஒரு மனதை வெற்றிகரமாக நோகடித்த ஒரு சாடிஸ்டிக் பார்வை.

ஒரு நொடியில் மிக அருகிலும் அடுத்த நொடிய நினைக்க முடியாத தூரத்திலும் ஒருவரை நிறுத்தி பார்க்க கண்டிப்பாக காதலில் விழுந்திருக்க வேண்டும். விழுந்து எழுந்து மீண்டும் விழுந்திருக்க வேண்டும்.

(தொடரும்)

Tuesday, January 5, 2010

மனச்சுவடு - 2

நான் பார்ப்பதை அவள் பார்த்ததை சிந்தனையில் விட்டு அகற்ற முடியாமல் பேச முடிவு செய்தேன். அவள் பார்வைக்கு ஆயிரம் அர்த்தங்கள் நானே என் மனதிற்கு கற்பித்தேன் . எல்லா ஆண்களின் எண்ணத்தை போல அனைத்தும் எனக்கு சாதகமாகவே யோசித்தேன்.

எப்படி பேச. என்ன பேச , எங்கு தொடங்க , எங்கு முடிக்க மீண்டும் கேள்விகள் முளைத்தன. ஆனால் பேச வேண்டும் என்ற தீர்மானம் மட்டும் எல்லா கேள்விகளையும் முறியடித்து வென்றது. மிக தவறான வெற்றி இது. சில நேரங்களில் சில முடிவுகள் தோற்பதே நல்லது. தோல்வியை விட நிச்சயம் வெற்றி நமக்கு தான் என்ற எண்ணத்துடன் பங்கேற்காமல் பார்த்து கொண்டிருப்பதும் சுகம் தான்.

பெயரளவில் என்னை யாரென்றே தெரியாத அவளுடன் பெயரை முதலில் தெரியப்படுத்தி அறிமுகம் செய்து கொண்டு பேச முற்பட்டிருக்க வேண்டும். கற்று தெரிந்த பாடம் இது. நிராகரிக்க படுவேன் என்ற எண்ணத்துடன் பேசினேன் , கடிதத்தில்.

வராத பதில் கடிதத்தை எதிர்பார்த்து காத்திருந்தேன். அது படிக்கப்பட்டு கிழிக்கப்பட்டு இருக்குமோ இல்லை படிக்கபடாமலே கிழிக்கப்பட்டு இருக்குமோ , மேற்கொண்டு அவளிடம் பேச முயற்சிகள் எடுக்கலாமா வேண்டாமா என்ற யோசனையிலே ஒரு மாதம் கழிந்தது. அவளும் அடிக்கடி செல்போனோடு ஒதுங்குவது முட்டுகட்டைகளை அடுக்கி கொண்டே போனது. மறுக்கப்பட்டதை மறக்க நினைத்து இந்த பழம் புளிக்கும் என வட்டாரத்தில் பேச்சுக்கள் எழ வைத்தேன். நாளைடவில் கண் எதிரில் அவள் இருந்தாலும் மறந்தே போனேன்.

மறந்தே போனேன் அந்த நொடி வரை, எல்லா மனமுடிச்சுகளையும் ஒரு நொடியில் அவிழ்த்துபோட்ட அந்த நொடி வரை , அஸ்தனமான சூரியனும் எட்டி பார்க்க எழுந்து வர துடித்த அந்த நொடி வரை, களைந்திருந்த பிச்சைகாரனை தேடி வந்த தர்மம் போன்ற அந்த நொடி வரை, அழுதுதுடிக்கும் குழந்தை மிட்டாய் பார்த்து சிரிக்கும் அந்த நொடி வரை.

பக்கம் சென்ற அவள் ஓரகண்ணால் எனை பார்த்து சிரித்த அந்த நொடி வரை.

(தொடரும்)