சனீஸ்வரனின் நலனுக்காக ஒரு ஜோசியர் என்னை திருநள்ளாறு செல்ல சொன்னார். சரி அப்படி என்ன தான் திருநள்ளாரில் விசேஷம் என பார்ப்பதற்காக வெள்ளி இரவு காரில் பயணித்தேன். பாண்டிச்சேரியில் கார் பஞ்சர். அடக்கடவுளே ஆரம்பமே இப்படியா என்று நினைத்த போது தான் மற்ற கடவுள்களுக்கு தடங்கல் வந்தால் தான் கெட்ட சகுனம் சனீஸ்வரன் தடங்கலுக்குரிய கடவுள் என்பதால் இதை நல்ல சகுனம் என் மனதை தேற்றி கொண்டு கிளம்பினேன். சீர்காழி வரை சாலைகள் பரவாயில்லை அதற்கு பிறகு சாலைகள் இருந்திருந்தால் பரவாயில்லை. காரைக்கால் வரை பெயரளவில் மட்டுமே சாலை இருந்தது அதுவும் ஒரு பஸ் செல்ல கூடிய அளவே. இதில் வேடிக்கை என்னவென்றால் சீர்காழியில் ரெண்டு நபர்கள் நின்று கொண்டிருந்தார்கள் அவர்களிடம் காரைக்கால் போவதற்கு வழி கேட்டேன். ஒருவன் சார் நேரா போய் லெப்ட் போங்க என்றன் இன்னொருவன் ரைட் என்றான். சரி ரைட்! தண்ணியில உளறியதை நிராகரித்து கொஞ்ச தூரம் சென்று ஒரு காவலரிடம் கேட்டு சென்றேன். ஒரு வழியாக பத்திருபது பேரிடமாவது வழி கேட்டு திருநள்ளாறு வரும்போது மணி 2:30AM.
திருநள்ளாரில் நுழையும் போதே ஒருவன் அறை (தங்குவதற்கு) வேண்டுமா என்றான் . அவன் காண்பித்த ஹோட்டல் நல்லா இல்லையென்று ஒரு கெஸ்ட் ஹவுஸ் கூட்டி போனான். அது கெஸ்ட் ஹவுஸ் இல்லை ஒரு சாதரண ரெண்டு பெட்ரூம் வீடு தான். வெள்ளி இரவு மட்டும் அது வாடகைக்கு விடப்படும் என புரிந்தது. வீட்டுகாரர்கள் ஹாலில் தூங்குவார்கள். எப்படில்லாம் யோசிக்குறாங்க பாருங்க. ஒரு நாளைக்கு வாடகை ஐநூறு ரூபாய். அந்த நேரத்தில் அவனிடம் பேரம் பேச திராணியில்லாததால் உடனே சென்று தூங்கி விட்டேன். சூரிய உதயத்திற்கு முன் எழுந்து அந்த குளத்தில் ஜோசியர் முழுக்கு போட சொல்லியிருந்தார் (அவருகென்ன கூறிவிட்டார் அகப்பட்டவன் நானல்லவா) . 5 மணிக்கு அலாரம் மட்டும் விழித்து கொள்ள நான் நன்றாக தூங்கி ஐந்தே முக்காலுக்கு எழுந்தேன். சூரியன் வெளியே வரலாமா வேண்டாமா என்று பட்டிமன்றம் நடத்தி கொண்டிருக்கும் போது வெளியில் ஓடி வந்து கொஞ்சம் நல்லெண்ணெய் சீயக்காய் , ஷாம்பூ, ஒரு கருப்பு துணி (இது எதற்கு என எனக்கு தெரியாது) வாங்கி கொண்டு குளத்திற்கு ஓடினேன். கூட்டத்திற்கிடையில் எண்ணையை தேய்த்து எட்டி பார்த்த போது வெறும் ஜட்டியுடன் ஆண்கள் குளித்து கொண்டிருந்தார்கள் பக்கத்திலேயே பெண்களும் நின்று கொண்டிருந்தார்கள். அதெப்படி இந்த மாதிரி இடத்துல மட்டும் எந்த அருவெருப்பும் காமிக்க மாட்டேங்கிறீங்க. கோயிலுக்கு வந்தா ஆபாச காட்சிகளெல்லாம் கண்ணுக்கு தெரியாதா. ஒரு சராசரி மனுஷனான என்னால் அப்படி பார்க்க முடியவில்லை. எல்லாம் ஆபாசமாக தான் தெரிந்தது.
குளத்தை பற்றி சொல்ல வேண்டுமென்றால் இங்கு முழுக்கு போட்டா தான் எல்லா கெட்டதும் வரும், அப்பேர்பட்ட சாக்கடை அந்த குளம். இதுல வேற குளிக்கிற எல்லாரும் குளிச்ச துணிய அப்படியே தண்ணில வேற விடறாங்க. நான் முதலில் சொன்ன அந்த கருப்பு துணிய அதுல விட்டுட்டு மானத்தோடு வெளியில் வந்தேன். இந்த குளத்தில் குளித்துவிட்டு மறக்காமல் ஒரு ரெண்டு தடையாவது நல்ல தண்ணிரில் குளித்து விடுங்கள்.
அடுத்து கோவிலுக்குள் சென்று அர்ச்சனை. அந்த நேரத்திலேயே கூடம் அதிகமாக தான் இருந்தது. பெரும்பான்மையான கோவில்களை போல் வலது கையில் அர்ச்சனை தட்டை குடுத்து விட்டு இடது கையை நீட்டும் பூசாரிகளுக்கு பணத்தை கொடுத்துவிட்டு அந்த எண்ணத்தோடேயே சனி பகவானை பார்த்துவிட்டு வெளியில் வரும்போது மணி 7:31AM. ஒரு வழியா ஏழரை முடிஞ்சதுனு நினைத்து சிரித்தேன்.
அடுத்து பத்து பேருக்கு அன்னதானம் செய்ய வேண்டும். யாரிடம் கேட்டலும் அருணாச்சலா ஹோட்டல் தான் நல்ல ஹோட்டல் என்று சொல்லியதால் அங்கு சென்று பத்து பொங்கல் வாங்கி வெளியில் இருந்த பிச்சைகாரர்கள் பத்து பேருக்கு கொடுத்தேன். இத்தனை திடகாத்திரமான பிச்சைகாரர்களை நான் பார்த்ததே இல்லை. இவர்கள் யாரும் நிச்சயமாக விளிம்புநிலை மனிதர்கள் அல்ல. திருநள்ளாரில் அன்னதானத்தை ஒரு பரிகாரமாக எல்லாரும் செய்வதால் அங்கே பிச்சைகாரர்களுக்கு சாப்பாட்டு பஞ்சம் இல்லை. ஆனால் இது சனிக்கிழமை மட்டும் தான். மற்ற நாட்களில் அங்கு ஈக்காக்கை இருக்காது. இங்கு இன்னொன்றையும் சொல்ல வேண்டும். அதில் ஒரு பிச்சைகாரர் ஏன் தம்பி சாப்பாடு மட்டும் தரீங்களே தட்சணை குடுக்க கூடாதா என கேட்டார். என்ன கொடுமை சார் இது, எல்லாரும் சாப்பாட்டுக்கு தான் பிச்சை எடுப்பாங்க. இவருக்கு சாப்பாட்டுக்கு மேல காசும் குடுக்கணுமாம்.
மறுபடியும் மதியம் ஒரு அன்னதானம் செய்யவேண்டும். ஓட்டலில் ஒருவர் ஒரு பிச்சைகாரருக்கு டோக்கன் வாங்கி தந்து அவரை ஓட்டலுக்குள்ளே அமர்ந்து சாப்பிட சொல்லலாமா என்று கேட்டார். ஓட்டல்காரர் அதற்கு மறுத்து காரணத்தையும் சொன்னார். அவர்கள் எப்போதும் தண்ணி அடித்து கொண்டிருப்பார்கள் என்றும் போன முறை ஒருவரை உள்ளே அனுமதித்து அவர் செய்த கலாட்டாவில் சாப்பிட வந்த மற்ற எல்லோரும் வெளியேறிவிட்டனர் என்றும் சொன்னார். அட கடவுளே இது வேறயா . மீண்டும் ஒரு பத்து பேருக்கு (அதே ஆட்கள் தான் உணவு வாங்கி கொடுத்துவிட்டு வந்தேன். என்ன தம்பி தட்சணை இல்லையா என்று மீண்டு அதே ஆள் கேட்டார். வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு நடந்தேன்.
சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு ஒரு அபிஷேகம் செய்ய வேண்டி இருந்ததால் ஒரு ஐந்து மணிக்கு கோவிலுக்கு சென்று அபிஷேக டிக்கெட்(Rs.250) வாங்கி சென்றமர்ந்தேன். பல காட்சிகள் கண் முன்னே நிகழ்ந்து கொண்டிருந்தன. காசை வாங்கி கொண்டு முன் வரிசையில் நேரே அனுமதிக்கும் காவலாளி , கரை வேட்டிகள் அதிகாரத்தால் உள்ளே நுழைவது , அய்யர்களுக்கு தெரிந்தவர்கள் உள்ளே நுழைவது இதில் எதிலும் சேராத என்னை போன்று அமைதியாய் அமர்ந்திருக்கும் மக்கள். காசே தான் கடவுளடா அந்த கடவுளுக்கும் இது தெரியுமடா. ஒரு வழியாக அபிஷேகம் ஆரம்பித்தது. உட்கார இடமில்லாமல் கால்கள் மரத்து முட்டி இடித்து அதை பற்றி நினைத்து கொண்டே சனீஸ்வரன் நிர்வாணபடுத்தபட்டு குளிப்பாட்டபடுவதை பார்த்து கொண்டிருந்தேன். பக்தியால் கோவிலுக்கு கூட்டம் சேர்வதை தான் இது வரை பார்த்திருக்கிறேன் இங்கு பயத்தால் பெருங்கூட்டம் சேர்ந்திருப்பதை பார்க்க வியப்பாக இருந்தது. வெளியில் வரும் போது மணி 6:30PM.
இன்னும் பத்து பேருக்கு அன்னதானம் செய்து விட்டு கிளம்ப வேண்டியது தான் என்று நினைத்த எனக்கு ஒரே திகைப்பு. நடக்க கூட இடமில்லாத அந்த கோவில் தெரு இப்போது வெறிச்சோடி இருந்தது. ஒரு கடை, ஒரு பிச்சைகாரர் கூட இல்லை. இருந்த ஒரே ஓட்டலும் மூடி கிடந்தது. அப்போது தான் புரிந்தது சனீஸ்வரனின் நிலைமை, வாரத்தில் ஒரு நாள் மட்டுமே அவன் ராஜா மத்த நாட்களில் அவனை கண்டு கொள்ள நாதியில்லை. அன்னதானம் குடுத்தே ஆக வேண்டுமென்பதால் அங்கிருந்த காவலரிடம் எங்கேயாவது பிச்சைகாரர்கள் இருப்பார்களா என்று கேட்டேன் .அதற்கு அவர் உணவாக நீங்க வாங்கி கொடுத்தால் அதை அவர்கள் பெரும்பாலான நேரம் குப்பை தொட்டியில் தான் போடுவார்கள் கொடுப்பதானால் காசாக குடுங்கள் என்றார். தேடி பார்த்தும் எங்கும் பிச்சைக்காரர்கள் இல்லை.
கடமைக்கு செய்யும் இந்த அன்னதானத்தை ஒரு மறுவாழ்வு மையத்தில் சென்னையிலே செய்திருக்கலாமென நினைத்தேன்.
இந்த பயணம் என் பெற்றோர்களின் வற்புறுத்தலால் மட்டுமே. எனக்கு இதில் நம்பிக்கை கொஞ்சமும் இல்லை. பெரும்பாலோனரை போல வெறும் 'Oh my god' 'அடக்கடவுளே' என சொல்லும் போது மட்டும் கடவுளை கூப்பிடும் ஒரு சராசரி முக்கால் நாத்திகன் நான் . அந்த கால்வாசி ஆத்திகம் முழு நாத்திகனாக மாற முடியாத காரணத்தால் மட்டுமே ஒட்டிக்கொண்டிருக்கிறது.