Wednesday, May 27, 2009

எம்மனசு புரியலையா - கவிதை

எஞ்சோகம் கேக்குதாடி - யின் தொடர்ச்சி

தென்னங்கீத்து கட்டி வச்சு
குளிப்பாட்டி நான் இருக்க
நீ இடுக்கு வழி பாத்தபடி
என் மனசுக்குள்ள நுழஞ்சியே

புத்தம் புது சீலையிலே
தண்ணி கொண்டு போகயிலே
குறுக்காலே நீ மறிக்க
கொடமெல்லாம் உருண்டோடும்
மனசெல்லாம் தடம் மாறும்

மொத்தமா வேணுமுன்னு
நீ கேட்ட நேரமெல்லாம்
முத்தத்தோட நான் போனேன்
இப்ப மொத்தமா வந்திருக்கேன்
எடுத்துக்கன்னு நான் சொல்ல
எடுத்துக்கிற நீ இல்ல

நடக்காத கல்யாணத்துக்கு
நூறு தேதி குறிச்சோமே
பொறக்காத பிள்ளைக்கு
பேரு நூறு வச்சோமே
திருவிழா கூட்டத்திலே
மாமா நீ என் பக்கத்திலே
புள்ளையோடு போவோமுன்னு
கனவெல்லாம் கண்டோமே
வெறும் கனவாக போச்சுதே

மனசார உன்ன நெனச்சு
வேறொருத்தன் கை பிடிச்சு
காணாம போவேன்னு
காலனோட போயிட்டியா

கட்டான காவல் ஒடச்சு
காட்டுவழி ஓடிவந்தேன்
கனவோட ஓடிவந்தேன்
இப்ப கனவெல்லாம் மண்ணாச்சே
நெனப்பெல்லாம் வீணாச்சே
என் மனசு புரியாம
தப்புன்னு தெரியாம
சடுதியிலே செத்துட்டியே

அடங்காத ஆசையோட
அழியாத காதலோட
மண்ணுக்குள்ளே கெடக்கியே
இந்த பொண்ணுகுள்ளே நீயிருக்க
இந்த பொண்ணுக்கினி யாரிருக்கா

வத்தாத காதலோட
வக்கனயா வாழ்வோமுன்னு
கதை பேசி சிரிச்ச மச்சான்
ஆவியா நீ வந்து
பாவி என்ன தேடாத
உன் பக்கத்துக்கு குழியிலே தான்
பொணமாக கெடப்பேன் நான் .

Friday, May 22, 2009

பிரிதலை புரிதல் - சிறுகதை

சந்தோஷ் அந்த பள்ளிக்கு ஆறாம் வகுப்பில் சேர்ந்திருந்தான். தந்தையின் பணி மாற்றல்களால் பல பள்ளிகளில் படிக்க நேர்ந்தாலும் பல நண்பர்களை சம்பாதித்ததில் அவனுக்கு மகிழ்ச்சியே. அப்படி தான் அவன் புதிதாக சேர்ந்த அந்த பள்ளியை நினைத்து பலவித கனவுகளோடும் எதிர்பார்ப்புகளோடும் வந்திருந்தான்

முதல்நாள் வகுப்பில் இவன் நுழையும் முன்னமே மாணவர்கள் அவர்களின் தோழர்களுக்கு அருகில் இடம் பிடித்து கதை பேச தொடங்கியிருந்தார்கள். சந்தோஷிற்கு முதல் பெஞ்சில் தான் இடம் கிடைத்தது. ஆசிரியர் வந்து அனைவரின் பெயரையும் கேட்டு பின் அவரவரை பற்றி சொல்ல சொன்னார். சந்தோஷ் எல்லோருடய பெயரையும் நோட்புக்கில் குறித்து வைத்து கொண்டான். இன்டெர்வெல்லில் வலிய போய் பேச தொடங்கினான்.


இப்படியாக ஒரே வாரத்தில் எல்லோருடனும் பேசி நண்பன் ஆனான். பள்ளி நேரம் தவிர அருகில் இருக்கும் மைதானத்தில் விளையாடியும் எல்லா மாணவர்களுக்கும்மிக நெருக்கமானான். வகுப்பில் பெண்கள் மாணவர்களிடம் அதிகம் பேசுவதை தவிர்த்து கொண்டிருந்ததும் இவன் வந்த பிறகு மாறியது. காலாண்டு தேர்வு நெருங்கி கொண்டிருந்த்தது. விளையாட்டுகளுக்கு ஒய்வு கொடுத்து விட்டு அனைவரும் படிப்பதில் தீவிரமாயினர். சந்தோஷ் முதல் முறையாக அவன் வகுப்பு மாணவர்களுக்கு குரூப் ஸ்டடியை பழக்கினான். பெரும்பாலான நேரங்களில் சந்தோஷின் வீட்டிலேயே அது நிகழ்ந்தது. அப்போது அவனின் தாயார் தரும் பலகாரங்களும், பழரசமும் மேலும் பல மாணவர்களை குரூப் ஸ்டடிக்கு ஈர்த்தது.

தேர்வு தொடங்கியது.தேர்வில் இவனிடம் பென்சில் கடன் கேட நண்பனை காபி அடித்தானென ஆசிரியர் அடிக்க போக இவன் அதை தெளிவு படுத்தி அவனை விடுவிக்க பிரயத்தனபட்டது அனைவருக்கும் பிடித்திருந்தது. விடுமுறையின் எண்ணங்கள் தேர்வுகளை வேகமாக துரத்தியது. சந்தோஷ் தன் சொந்த ஊருக்கு ஒரு வாரம் போய் வருவதாக கூறி கிளம்பினான். மற்றவர்கள் ஒரு வார விடுமுறையில் எங்கே வெளியூர் செல்வது என்று உள்ளூரிலிலேயே விளையாடி பொழுதை கழிக்க தீர்மானித்தனர்.

விடுமுறை முடிந்து மறுபடியும் பள்ளிக்கூடம் திறந்த போது எல்லோர் மனதிலும் மற்றவர் விடுமுறையை கழித்த விதம் பற்றி கேட்கும் ஆர்வம் தளும்பியிருந்தது. குறிப்பாக வெளியூர் சென்ற சந்தோஷின் கதைகளை கேட்பதில் குறியாய் இருந்தார்கள். சந்தோஷ் கொஞ்சம் தாமதமாக தான் வந்தான். இம்முறை வலிய வந்து பேசியவர்களிடம் கூட அவன் பேசவில்லை. நண்பர்களின் ஆர்வம் இப்போது குழப்பமாக மாறியிருந்தது. அதற்குள் வகுப்பாசிரியர் வந்து பாடத்தை துவங்கியதால் மேற்கொண்டு எதுவும் பேச முடியாமல் பாடத்தில் லயிக்க தொடங்கினர். மதிய உணவு இடைவேளையின் போது சந்தோஷ் நெருங்கி வந்தவர்களிடம் எரிந்து விழுந்தது எல்லோரின் குழப்பத்தையும் வெறுப்பாக மாற்றிகொண்டிருந்தது. காரணமில்லாமல் சண்டை போடும் அளவுக்கு என்ன நடந்தது. குரூப்பாக சென்று அவனிடம் கேட்க சென்றவர்களுக்கு சந்தோஷின் நடவடிக்கைகள் வியப்பு கலந்த ஆத்திரத்தை வரவைத்தன. என்ன தான் பிரச்சனை என அவனிடம் கேட்க வகுப்பில் ஒரு பெண்ணை தேர்வு செய்து கேட்டு வா என அனுப்பினர். அடி வாங்காத குறையாக அழுது கொண்டே திரும்ப வந்தாள் அவள்.

சந்தோஷின் இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் இவன் ஏன் இந்த பள்ளிக்கு வந்தான் என அந்த வகுப்பு முழுவதும் மனதுக்குள் கேள்வி கேட்டு கொண்டிருந்தது. அரையாண்டு தேர்வு வந்து கொண்டிருந்த நேரத்தில் சந்தோஷ் மொட்டை தலையோடு வந்தான். என்னடா மொட்டை என நக்கல் செய்தவனுக்கு கன்னத்தில் விழுந்தது. குரூப் ஸ்டடி செய்த கூட்டம் இப்போது சந்தோஷை எதிர்பார்க்காமல் வேறொர் இடத்தில் படித்தனர்.


தேர்வு நேரத்தில் சந்தோஷ் தன் அருகில் யாரவது அசைந்தால் கூட ஆசிரியரை கூப்பிட்டு இவன் காபி அடிக்கிறான் என கூறினான். ஆரம்பத்தில் இவன் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து அவன் கைகாட்டியவர்களை அடித்த ஆசிர்யர்கள் தினமும் இவன் அதை செய்யவே அவனை கண்டித்தனர். தேர்வு முடிவதற்குள் அங்கு அநேகமானவர்களின் எதிரியாக மாறிவிட்டிருந்தான் அவன். மறுபடியும் விடுமுறை நாட்கள். இப்போது சற்று நீளமான விடுமுறை. சந்தோஷ் இம்முறை சென்னைக்கு போவதாக செய்தி வந்தது. மற்றவர்கள் அவனை பற்றி அக்கரையின்றி விளையாட்டையும் விடுமுறையையும் எண்ணி இருந்தனர்.

நாட்கள் நகர்ந்து பள்ளிக்கூடம் தொடங்கியது. இம்முறை சந்தோஷ் ஒரு வாரம் ஆகியும் வரவில்லை. பள்ளியை விட்டு சென்றுவிட்டதாக ஆசிரியர் கூற அனைவர் முகத்திலும் ஆச்சர்யம் கலந்த ஒரு மகிழ்ச்சி.

மொட்டை தலை சந்தோஷ் சென்னை கேன்சர் இன்ஸ்டியூடுட்டில் ஒரு நர்ஸிடம் உரையாடிகொண்டிருந்தான்.

"உன் ஃப்ரெண்ட்ஸ்லாம் நீ ஸ்கூலுக்கு வரலனு தேட மாட்டாங்களா"

"தேட மாட்டாங்க.. கண்டிப்பா தேட மட்டாங்க " .

நர்ஸுக்கு அதன் அர்த்தம் புரியவில்லை. சந்தோஷின் கண்களில் நீர் வடிந்து கொண்டிருந்தது.



Thursday, May 14, 2009

எஞ்சோகம் கேக்குதாடி

நித்தம் நித்தம் நாம் படிச்ச
புத்தம்புது ராகமெல்லாம்
சத்தம் கித்தம் போடாம
சடுதியில சாகுதடி

மிச்சம் கிச்சம் இல்லாம
நாம் கொடுத்த முத்தமெல்லாம்
எச்சி கூட காயாம
கன்னத்துல கரையுதடி

நேத்து வச்ச மீன் கொழம்பும்
பதுக்கி வச்ச பழயசோறும்
நீ கொண்டு வருகயிலே
உன பாக்கயிலே பசி தீரும்
நீ ஊட்டயிலே ருசி மாறும்

மோட்டுவளை நீ குத்த
மறுபடியும் நான் முந்த
வேணா வேணான்னு
நீ சொன்ன கதையெல்லாம்
அந்த கருவைக்கு தெரியுமடி

கம்மாகரையிலே
நீ குளிக்கும் அழகெல்லாம்
கண்குளிர நான் பாக்க
கல்லெல்லாம் போதையானு
அத மறந்து உன பிடிக்க
கம்மாகரை காமகரையானதெல்லாம்
சடுதியிலே மறந்துடுச்சா


பத்திரமா நா வரஞ்ச
சித்திரமா நீ இருந்த
கடல் முழுங்கி துப்பும் சூரியனா நீ தெரிஞ்ச
கடன்கார பாவி என்ன கவிதையெல்லாம் எழுத வச்ச
இப்ப கவிதையெல்லாம் நெறய இருக்கு
பாவிமக நீ இல்லயே

சந்தையிலே அப்பனோட
நீ வந்த நேரமெல்லாம்
வேசம் போட்டு வளவிஎல்லாம்
தொட்டு தொட்டு போட்டு விட்ட
அந்த சுகம் தேடுதடி
மனசு கெடந்து நோகுதடி

வண்டிக்கார முருகேசன்
கருவயிலே நம பாத்து
சவுக்கால என மாத்தி
பிரிச்சி உன்னை இழுக்கையிலே
மண்டையிலே அடிச்ச அடி
நினைவு தப்பி போச்சுதடி
உன் நெனைப்பு மட்டும் மாறலடி

மழை பெஞ்சி நான் முழிக்க
கண்ணுமூடி ஓடினதெல்லாம்
உன் வீட்டு சந்தியிலே
திண்ணையிலே ஊர்கூடி
என ஒதுக்கிவச்ச சேதியெல்லாம்
தெரியாம போச்சுதாடி

காத்துவாக்குல வந்த கல்யாண சங்கதிய
அழுது சிருச்சு கொழம்பி தவிச்சேன் எங்கதிய
சத்தியமா உனக்கு மட்டும் தான்னு
நீ செஞ்ச சத்தியமெல்லாம்
நம்பி தொலச்ச வெள்ளந்தி என்ன
கழுத்தறுத்து கழுத்துதாலி வாங்கப்போக
மனசுனக்கு வந்துசசாடி

நீ சொல்லி நான் விட்ட சாராயம்
வெசம் கலந்து அத குடிச்சு
நா வெட்டுன குழியில போய் விழுந்து
காத்து வந்து மணல் மூடி
சவமாக கெடக்குதேன் நா
நீ கட்டுனவன் கைபிடிச்சு
சந்தோஷமா வாழ்ந்துக்கோடி ....

Sunday, May 10, 2009

நிலா நீ வானம் காற்று - பொக்கிஷம் பட பாடல்

படம்: பொக்கிஷம்
இசை: சபேஷ்-முரளி
பாடியவர்கள் : விஜய் யேசுதாஸ் , சின்மயி
பாடலாசிரியர் : யுக பாரதி
பாடலுக்கான சுட்டி: நிலா நீ வானம் காற்று


நிலா நீ வானம் காற்று மழை
என் கவிதை மூச்சு இசை
துளி தேனா மலரா திசை ஒளி பகல்

நிலா நீ வானம் காற்று மழை
என் கவிதை மூச்சு இசை
துளி தேனா மலரா திசை ஒளி பகல்

தேவதை அன்னம் பட்டாம்பூச்சி
கொஞ்சும் தமிழ் குழந்தை
சிணுங்கல் சிரிப்பு முத்தம்
மௌனம் கனவு ஏக்கம்
மேகம் மின்னல் ஓவியம்
செல்லம் ப்ரியம் இம்சை

இதில் யாவுமே நீதான் எனினும்
உயிர் என்றே உனை சொல்வேனே
நான் உன்னிடம் உயிர் நீ என்னிடம்
நாம் என்பதே இனிமேல் மெய் சுகம்

நிலா நீ வானம் காற்று மழை
என் கவிதை மூச்சு இசை
துளி தேனா மலரா திசை ஒளி பகல்

அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா
அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே
அன்புள்ள ஒளியே அன்புள்ள தமிழே
அன்புள்ள செய்யுளே அன்புள்ள இலக்கணமே
அன்புள்ள திருக்குறளே அன்புள்ள நற்றினையே
அன்புள்ள படவா அன்புள்ள திருடா
அன்புள்ள ரசிகா அன்புள்ள கிறுக்கா

அன்புள்ள திமிரே அன்புள்ள தவறே
அன்புள்ள உயிரே அன்புள்ள அன்பே
இதில் யாவுமே இங்கு நீதான் என்றால்
என்ன தான் சொல்ல சொல் நீயே
பேரன்பிலே ஒன்று நான் சேர்ந்திட
வீண் வார்த்தைகள் இனி ஏன் தேடிட

நிலா நீ வானம் காற்று மழை
என் கவிதை மூச்சு இசை
துளி தேனா மலரா திசை ஒளி பகல்

அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா
அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே

Thursday, May 7, 2009

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை (அங்காடி தெரு)

படம்: அங்காடி தெரு
இசை: விஜய் ஆண்டனி, G.V.பிரகாஷ் குமார்
பாடியவர்கள் : வினித் ஸ்ரீநிவாஸ், ரஞ்சித், ஜானகி ஐயர்
பாடலாசிரியர் : நா. முத்துகுமார்
பாடலுக்கான சுட்டி : அவள் அப்படி ஒன்றும் அழகில்லை

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை


அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை
அவளை படித்தேன் முடிக்கவில்லை
அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை
இருந்தும் கவனிக்க மறுக்கவில்லை

அவள் நாய்க்குட்டி எதுவும் வளர்க்கவில்லை
நான் காவல் இருந்தால் தடுக்கவில்லை
அவள் பொம்மைகள் அணைத்து உறங்கவில்லை
நான் பொம்மை போலே பிறக்கவில்லை


அவள் கூந்தல் ஒன்றும் நீளம் இல்லை
அந்த காற்றில் தொலைந்தேன் மீளவில்லை
அவள் கைவிரல் மோதிரம் தங்கவில்லை
கை பிடித்திடும் ஆசை தூங்கவில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை

அவள் பட்டுப்புடவை என்றும் அணிந்ததில்லை
அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை
அவள் திட்டும் போது வலிக்கவில்லை
அந்த அக்கறை போலே வேறில்லை


அவள் வாசல் ரோஜா வாசமில்லை
அவள் இல்லாமல் சுவாசமில்லை
அவள் சொந்தம் பந்தம் எதுவுமில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை

Saturday, May 2, 2009

பேருந்தில் ஒரு பாடம்

சென்னை பேருந்து நிலையத்திலிருந்து அந்த திருச்சி சொகுசு பேருந்து கிளம்பும் போது என்னையும் சேர்த்து பத்து பேர் இருந்தனர். ஆனால் தாம்பரம் எட்டும் போது பேருந்து நிரம்பியிருந்தது. ஜன்னலோர இருக்கையை எடுத்து கொண்ட நண்பணோடு பேசிக்கொண்டும் பேருந்தில் விடியோவை அவ்வபோது பார்த்து கொண்டும் இருந்ததால் சகபயணிகளை அவர்கள் ஏறும்போது கவனிக்க தவறினேன்.  

பேருந்தை இப்போது கண்களால் அளந்ததில் கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு யாரும் இல்லையென நினைத்த போது தான் ஒரு வினோத சிரிப்பு எனது இடப்புற இருக்கையில் இருந்து எழுந்தது. அருகிலிருந்த அனைவருக்கும் இப்போது அந்த சிரிப்பின் சொந்தக்காரன் காட்சிபொருளாக மாறிவிட்டிருந்தான். ஆனால் இது சில நிமிடங்களுக்கு தான். பின்னர் தத்தம் கடமைகளுக்குள் சிரமப்பட்டு ஈடுபடுட்டு கொண்டனர். எனக்கும் எங்கே அவனை பார்த்தால் நம்மை ஏதாவது செய்து விடுவானோ என்ற சராசரி பயம் இருந்தது. விடியோவில் படம் பார்ப்பதை போல் ஓரகண்ணால் அவனை பார்த்தேன். வாயில் புன்னகை தவிர எதையும் அறியாமல் இருந்தான். மனது சற்று கனத்திருந்தது.  

திடீரென்று அவன் எழுந்து அம்மா கிட்ட போணும் அம்மா கிட்ட போணும் என சிணுங்க ஆரம்பித்தான். பின்னிருக்கையிலிருந்து அவனது தந்தை சிரமப்பட்டு இதோ கொஞ்ச நேரத்துல போயிடலாம் என சமாதானப்படுத்த அவன் திரும்பி அமர்ந்த போது சாந்தமில்லாத அவன் முகம் அத்தனை பேர் பார்த்ததிலும் சங்கடப்படாமல் இருந்தது .  

இந்த சலசலப்பில் அருகில் இருப்பவர்கள் உறங்காமல் இருப்பதே உசிதம் என முடிவெடுத்து படத்தில் கண்களையும் இவனில் காதுகளையும் பதித்து கொண்டார்கள். அப்போது தான் கவனித்தேன். அவன் நல்ல உயரம் வயது எப்படியும் 25 இருக்கும் ஆனால் அந்த வயதிற்கேற்ற முறுக்கு உடலில் இல்லை. தங்கை, அண்ணன் மற்றும் தந்தையுடன் பயணம் செய்கிறான். எப்போதும் ஏதோ சிந்தனையிலே இருந்தான். தாயை தேடுகிறானா இல்லை தன்னையே தேடுகிறானா தெரியவில்லை. இப்போது செங்கல்பட்டு தாண்டி பேருந்து விரைந்து கொண்டிருந்தது. கண்டக்டர் டிக்கெட் கொடுக்க தொடங்கினார். எனக்குள் இவனிடம் அவர் வரும்போது என்ன நடக்கும் என்ற ஒரு உள்ளகுறுகுறுப்பு.  

"தம்பி டிக்கெட் " கண்டக்டர் முடிப்பதற்குள் ஹிஹிஹி என அவன் சிரித்தான். எதிர்பார்த்தபடி அவர் முகம் மாறியிருந்தது. அதற்குள் அவனது தந்தை திருச்சிக்கு நாலு டிக்கெட் வாங்கினார். கண்டக்டர் வாய் வரை வந்த கேள்வியை கேட்கமாலே அடுத்த இருக்கைக்கு தாவினார். அவனை பற்றி கண்டக்டர் ஏதாவது சொல்வார் என எண்ணியிருந்த கூட்டம் ஏமாற்றத்தில் மீண்டும் விட்டவற்றை தொடர திரும்பியது .  

மதிய சாப்பாட்டுக்கு வழக்கம் போல ஓட்டுனர் நடத்துனரின் நண்பன் பயணிகளின் எதிரியான அந்த விழுப்புரம் அருகிலுள்ள ஹைவே உணவகத்தில் பேருந்து நின்றது. நான் இரண்டு பிஸ்கட் பாக்கெட்டும் தண்ணியும் வாங்கிக்கொண்டு அவனை பார்க்காத மாதிரி பார்த்துக்கொண்டே வந்தமர்ந்தேன். அவனது குடும்பம் இப்போது கட்டி வந்திருந்த சாப்பாட்டை பங்கு போட்டு சாப்பிட்டு கொண்டிருந்தது .அண்ணன் தங்கை தந்தை என மாறி மாறி அவனுக்கு ஊட்டி கொண்டிருந்தனர். எனக்கு வயிறும் மனதும் நிறைந்தது . அவன் அண்ணனை அப்போது தான் கவனித்தேன் இவனை போலவே இருந்தான். பின்னர் அவனை கை கழுவ இறக்கி விட்டு கூட்டி வரும்போது தான் தெரிந்தது இருவரும் இரட்டையர்கள். விதியின் விளையாட்டு. அவனை போலவே அச்சு அசலா இருக்கும் ஒரு சராசரி மனிதன் இவனோ இப்படி புத்தி சுவாதீனம் இல்லாமல்.ச்சே.என்ன படைப்புடா.  

இடையில் அவன் சிறுநீர் கழிக்க வேண்டுமென கூற அவன் தந்தை பேருந்தை நிறுத்த சொன்னார். அவர்கள் இறங்கி மீண்டும் ஏறுவதற்குள் பேருந்தில் சலசலப்பு . திருந்தாத ஜென்மங்கள். வாயிருந்தும் வாய்விட்டு வருகிறதென்று கூறாமல் அடக்கி கொண்டு அமர்ந்திருக்கும் இவர்களிடம் எல்லாவற்றையும் வெளிப்படையாய் கூறிய அவன் மிக உயரத்தில் இருந்தான்.

முன்னிருக்கையில் தலைசாய்த்து உறங்க முயற்சித்த போது அங்கு மெல்லிய குரலில் இருவர் பேசிகொண்டிருந்தனர்.  

"இந்த மாதிரி மூளை வளர்ச்சி இல்லாதவங்கள இப்படி பஸ்ல கூட்டிட்டு சுத்தலாமா? எல்லாருக்கும் எடஞ்சல் பாருங்க. பேசாம வீட்லயே கட்டி வச்சுருக்க வேண்டியது தான" . உறக்கம் முற்றிலுமாக தெளிந்து கோபம் தலைக்கேறிகொண்டிருந்தது. இது வரை பேருந்தில் அவன் யாரையும் தொந்தரவு செய்யவில்லை அவன் சிரிப்பதை, பேச முற்படுவதை தொந்தரவாக கருதவில்லை. அப்படியிருக்க இவர்கள் பேச்சு இவர்களை விட அவன் பரவாயில்லை என தோன்ற வைத்தது .


அடுத்து அவன் என்ன செய்வான் என்ற சிந்தனை மனது முழுவதும் நிறைந்திருக்க அவன் எழுந்து அவன் முன்னிருந்த காலி இருக்கையில் அமர முற்பட்டான். பக்கத்துக்கு இருக்கையில் இருந்தவன் "ஏய் இங்கெல்லாம் உட்கார கூடாது போய் உன் அப்பாகிட்ட உட்காரு" என்றான். இவன் முகம் குழம்பியது. அதில் வருத்தத்தை தேடி தோற்றேன். அவர்களது வாழக்கையில் சந்தோசம் துக்கம் இரண்டையும் அதிக வேறுபாடின்றி பார்க்கும் பக்குவம் இருப்பதாக தோன்றியது. பிச்சைகாரர்களையும் பணக்காரர்களையும் வேறுபடுத்தி பார்க்க தெரியாத அந்த அறியாமை எல்லோருக்கும் இருந்தால் நன்றாக இருந்திருக்கும். இப்போது மீண்டும் அம்மாவிடம் போகணும் என்றான். எந்த மனநிலையில் இருந்தாலும் தாய்பாசம் ஒன்று தான். அன்று எனக்கு பல ஞானோதயங்கள் கற்றுகொடுத்து போதி மரமாக அவன் தெரிந்தான் .

பேருந்து இப்போது திருச்சியை நெருங்கி கொண்டிருந்தது. அப்போது அவனின் தந்தை "தம்பி சேலம் போறதுக்கு எங்க எறங்கனும். இங்க வழியில இறங்கின மாறி போலாம்னு சொன்னாங்க" என்றார் .

எனக்கு தெரியாததால் கண்டக்டரை கேட்க சொன்னேன். கண்டக்டரை கேட்ட போது வழக்கம் போல் அருகில் இருந்த அனைவரும் வழி சொல்ல ஆரம்பித்தனர். இவர் சற்றே குழிம்பினார்.  

கண்டக்டர் "நீங்க எங்க தான் போகணும் சொல்லுங்க" .  

"குணசீலம்"  

இப்போது வழிசொன்ன அனைவரும் அமைதியை மட்டுமே உதிர்த்தார்கள் . சந்தேகத்திற்கிடமில்லாமல் அனைவர் மனதும் இப்போது கலங்கியிருக்கும் .  

கண்டக்டர் அடுத்த 5 நிமிடத்தில் ஒரு இடத்தில அவர்களிடம் வழி சொல்லி இறக்கிவிட்டார்.  

"ஏன் சார் அவன் அம்மாவையும் கூட்டிட்டு வந்திருந்தா உதவியா இருக்கும் இல்ல "  

"இருந்திருந்தா கூட்டிட்டு வந்திருப்பேன் சார் ". மகனின் கையை பிடிப்பதில் கவனத்துடன் இருந்த அவர் கண்டக்டர் உட்பட அனைவரையும் ஊமையாக்கி விட்டு சென்றார்.

அவனிருந்த வெற்றிருக்கையை ஏக்கத்துடன் ஏறிட்டேன். கண்ணில் நீர் என்னையறியாமல் எட்டிப்பார்த்தது.