Wednesday, April 29, 2009

உவமானங்களின் தோல்வி

வானத்தை
மேகத்தை
பூக்களை
மொட்டுகளை
கடலை
அலையை
இரவை
நிலவை
நட்சத்திரத்தை
ஆதவனை
தாமரையை
மலையை
மழையை
கடவுளை
வானவில்லை
அதிகாலையை
அந்திமாலையை
பனித்துளியை
பட்டாம்பூச்சியை
தேனை
மானை
மீனை
மெல்லினத்தை
வல்லினத்தை
அமுதை
அமிர்தை

விட்டுவிடுங்கள் உங்கள் கவிதைகளிலிருந்து
அவை தோற்று துவண்டிருக்கின்றன
என்னவளிடம்

Tuesday, April 21, 2009

இன்று கற்பனை விடுமுறை

நீ இல்லாத காட்சிகளை என் கண்கள்
இமைகளோடு போராடி
விருப்பமின்றி பார்க்கிறது

கூடு விட்டு கூடு பாயத்துடிக்கும் என் இதயம்
காதல் மந்திரங்களை நீ மறந்ததால்
என் கூட்டுக்குள் விருப்பமின்றி துடிக்கிறது

உன் வாசம் தேடும் என் சுவாசம்
தோல்வியான தேடல்களுக்கு பின்
நீ இல்லாத காற்றை விருப்பமின்றி அனுமதிக்கிறது

உன் குரலின் ஓசையை தேடும் என் செவி
மௌனத்தின் சப்தத்திலும் உன்னை தேடி
நீ இல்லாத ஒலிகளை விருப்பமின்றி உள்வாங்குகிறது

காதலின் மறுப்பையே தாங்கிய என் மனம்
உன்னை காணாத சோகத்தை தாங்க முடியாமல்
இன்று விடுமுறை கேட்கிறது

நீ இல்லாத நாளை கவிதை எழுதியாவது
மறப்போம் என்று எழுத எத்தனித்து
அறியக்கண்டேன் நீ இல்லாததால்
இன்று கற்பனை விடுமுறை



Thursday, April 16, 2009

கெட்டு வாழ்ந்தவன் - சிறுகதை

எப்படியாவது அரசியல் கத்துக்கனும்ன்றது தான் என்னோட லட்சியம். அதுக்கு தான் என் அக்கா புருஷன் மூலமா எப்படியோ இந்த கட்சில சேந்துட்டேன். தெனமும் பத்து பேரோட சுமோல சுத்தறது தான் வேல. எதுக்கு சுத்றோம் எங்க போறோம்னுல்லாம் யாரும் கேக்கிறது இல்ல. கத்துகுட்டியான நான் மூச்சே விடறதில்லை. செல நேரம் போயிட்டு இருக்கும் போது அவசரமா ஒன்னுக்கு முட்டும் அப்ப கூட வெளில சொன்னதில்ல. சுத்தி இருக்றவனுங்கள பாத்தா எனக்கே பயமா இருக்கும், ஒவ்வொருத்தனும் ஒடம்ப கண்ணா பின்னானு ஏத்தி வச்சுக்கிட்டு அருவாகம்போட தான் சுத்துவானுங்க. என் கிட்டயும் ஒரு அருவா குடுத்தானுங்க ஆனா எதாவது பிரச்சனைனா எல்லாரையும் முன்னாடி வுட்டுட்டு நான் சுமோகுள்ளேயே பதுங்கிடுவேன். அந்த கூட்டத்திலையும் ஒரு நல்லவர் இருந்தாரு, அவரு பேரு பக்கிரி. ஆளு நெறைய பேர வேட்டிருக்காருனு பேசிகிட்டிருந்தோ சொல்லோ கேட்டேன். ஏதோ நம்ம மேல ஒரு சின்ன கரிசனம் அவருக்கு நானும் அத யூஸ் பண்ணி கொஞ்சம் க்ளோஸ் ஆயிட்டேன்.

அவர் தான் எனக்கு அரசியல் குரு. என்னனே தெரியாத அரசியல எனக்கு கத்து கொடுத்தது அவரு தான். அதுனால அவர நான் குருன்னு தான் கூப்டுவேன். அதிலயும் தொண்டனாவும் குண்டனாவும் இருக்கிறது எப்படின்னு அவர் சொல்லும்போது எனக்கு ஏன்டா இங்க வந்தோம்னு இருந்துச்சு. உயிர் மேல ஆச இருந்தாலும் அத காட்டிக்ககூடாதுன்னு சொன்னாரு. எல்லாம் புரிஞ்ச மாதிரி மண்டைய மண்டைய ஆட்னேன். எங்க நெருக்கத்த பாத்து குரூப்குள்ள கசமுசனு பேசிகிட்டாங்க. ஆனா நான் அத பத்திலாம் கவலைப்படாத மாதிரி நடிச்சேன். பின்னே குரு சொல்லிருக்காருல்லா பயம் இருந்தாலும் காட்டிக்க கூடாதுன்னு. எனக்கு எங்க குரூப்ல இருக்கறவங்களே என்ன போட்டு தள்ளிடுவாங்கலோனு எப்பவுமே கொஞ்சம் பயம் இருந்துச்சு. காரணம் என் குருவுக்கு கட்சில ஏதோ பதவி தர போறதா கேள்வி. எங்க நேத்து வந்த பய நான் இந்த நெருக்கத்த யூஸ் பண்ணி கட்சில சீக்கிரம் முன்னுக்கு வந்துடுவனோனு பயபுள்ளங்களுக்கு ஒரு பயம்.

கொஞ்ச நாள் வெறும் பிர்யாணி சரக்கு தூக்கம் அப்படினே போச்சு. பெரிய சோலி எதுவும் தலிவருகிட்டேந்து வரல. எனக்கு குரு அவரோட கதைய சொல்ல சொல்ல யாரையாவது குத்தனும் போல இருந்துச்சு. இத குரு கிட்ட சொன்ன சொல்லோ சிரிச்சாரு. வேணும்னா என்ன குத்துனாரு. அவர் சொன்னவொடனே என் கண்ணுலே தண்ணி நின்னுடுச்சு. சும்மா தாண்ட சொன்னேன்னு சிரிச்சாரு. ஆனா அதுக்கப்புறம் குரு என்ன அவர் தம்பி மாதிரி நடத்தினாரு.

அன்னைக்கொருநாள் எல்லாரும் செம காண்டா சுமோல கிளம்பினாங்க . என்னனு போமோது தான் சொன்னனுங்க. தலிவர கூட்டதிலேர்ந்து எதிர்கட்சிகாரன் யாரோ திட்டிடானாம் அதுனால அவன தூக்க போரோம்னானுங்க. மனசுக்குள்ளே சந்தோசம் கலந்த பயம் இருந்துச்சு. அதுக்கென்ன தூக்கிடுவோம்னு சொல்லிட்டு சிரிச்சேன். ஏதோ கிறுக்குபயல பாக்றமாதிரியே பாத்தனுங்க.

ஒரு எடத்துல வண்டி திடீர்னு நின்னுச்சு. பாத்தா அவனுங்களும் தயாரா தான் இருந்திருக்கானுங்க. எல்லாரும் ஆளுகொரு அருவாவோட இறங்கினோம்.நான் குருவுக்கு பின்னாடியே போனேன். குரு பாக்றவன் கையிலே கழுதுலேல்லாம் வெட்டினாரு. நான் விழுந்தவனுங்கலல்லாம் வெட்டிட்டே போயிட்டுருந்தேன். திடீர்னு ஒருத்தன் சைட்ல இருந்து குருவ வெட்ட வந்தான். எனக்கு என்ன தோனுச்சுனே தெரில அருவாளோட அவன் மேல பாஞ்சு கழுத்துல வெட்னேன். இப்ப அந்த எதிர்கூட்டத்த காணோம். அப்புறம் தான் தெரிஞ்சுது நான் வெட்னவன் தான் அந்த கூட்டத்துக்கே தலிவனாம். குரு என்ன அப்படியே கட்டி பிடிச்சு நான் சீக்கிரம் முன்னுக்கு வந்துடுவேன்னு சொன்னாரு. எல்லார் முன்னாலையும் அத கேட்க ரொம்ப பெருமையா இருந்துச்சு.

குரு தலிவர் கிட்ட கூட கூட்டிட்டு போய் இவன் தான் வெட்னான். ரொம்ப தைரியசாலி நமக்காக எத வேணாலும் செய்வான்னு என்ன கேட்காமலே என் உசிர உயில் எழுதி குடுத்தாரு. ஆனா இவளவு சீக்கிரம் இந்த அளவுக்கு பேரு கெடைக்கும்னு சத்தியமா நெனைக்கல. இந்த சம்பவத்துக்கப்புறம் எங்க குரூப்ல எனக்கு தனி மரியாதை. இப்ப யாரும் என்ன முன்ன விட்டு பின்னாடி பேசுறதில்ல. வணக்கம்லாம் கேக்காமலே கெடச்சுது. இந்த நேரத்துல தான் எனக்கு கட்சி யூனிபார்ம் கெடச்சுது. யூனிபார்ம்னா வெள்ள வேட்டி சட்டை தாங்க. அதுவரைக்கும் லுங்கியோட சுத்திட்டிருந்த எனக்கு இந்த வேஷ்டி கொஞ்சம் மண்டகனத்த குடுத்துச்சு .

அடுத்த வாரம் நடக்குற கட்சி மீடிங்க்ள குருவுக்கு ஏதோ பெரிய பதவி தர போறதா பேசிகிட்டாங்க. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. அன்னைக்கு தண்ணி அடிக்கும்போது குரு ரொம்ப பீல் பண்ணி சொன்னாரு. இந்த மாதிரி ஒரு பதவிக்கு தான் இத்தன வருஷமா காத்துகெடந்ததாவும் அதுக்காக எத்தனை பேர் கை கால் தலைய வெட்டினார்னும் சொல்லசொல்லோ நெஞ்சு அடச்சுது. குரு அழுது நான் மொத மொறயா பாக்குறேன். குருவ சமாதான படுத்தும்போது நான் தான் இனிமே இந்த குரூப்கு தலிவனு சொன்னாரு. சத்தியமா சரக்குனால இல்லீங்க நெஜமாலுமே வானத்துல பறக்குற மாதிரி இருந்துச்சு.

மீடிங்க்கு இன்னும் ஒருவாரம் இருந்துச்சு. நானும் குருவும் கடைக்கு போய் நல்ல வேட்டி சட்டைலாம் எடுத்துகிட்டோம். பின்ன இந்த கட்சி மீடிங்க்கு எல்லா பெரிய தலைங்களும் வரும். அவுனுங்களுக்கு நாம மனசுல நிக்கற மாதிரி தெரிஞ்சா தான் பின்னாடி எதாவது செய்வானுங்க . கட்சில எவளவு பெரிய ரவுடியா இருந்தாலும் அந்த மீடிங்க்கு வரவனுங்க கிட்ட ரொம்ப பவ்யமா நடந்துக்கணும். எல்லார் கிட்டயும் நம்மள மாதிரி ஒரு குரூப் இருக்கும் அதுனால எதாவது எகிறன உன்ன தூக்கிட்டு போய்ட்டே இருப்பானுங்க. அவர் பெரியாள வந்தா எனக்கு பாத்து எதாவது செய்றேன்னு சொன்னார். குரு அன்னைக்கு நெறைய கத்துகொடுத்தார். குருவ விட எனக்கு அவர் பொறுப்பேக்றத பாக்கணும்னு ரொம்ப ஆசையா இருந்துச்சு.

அடுத்த ஒரு வாரம் தண்ணி அடிச்சே கழிஞ்சுச்சு. குருவும் நானும் இன்னும் நெருக்கமானோம். அன்னைக்கும் தண்ணி அடிச்சிட்டு பீச் பக்கம் போலாம்னு கெளம்பினோம். இன்னும் ரெண்டு நாள்ல கட்சி மீட்டிங். குரு ரொம்ப சந்தோஷமா இருந்தார்.

நான் தான் வண்டிய ஓட்டினேன். நேரா நான் மொத மொத குருவ காப்பாத்துன அந்த எடத்துக்கே போனேன். பின்ன என் அரசியல் வாழ்க்க தொடங்குன எடமாச்சே. எங்கடா வந்த்ருகோம்னு குரு கேட்டார். அவர கைத்தாங்கலா எறக்கி கீழ கூட்டியாந்து அருவாளால ஒரே போடா போட்டேன். மன்னிச்சுருங்க குரு உங்களுக்கடுத்து அந்த பதவி எனக்கு தாணு நிச்சயமா தெரியும். ஆனா அதுக்காக இன்னும் வருசக்கணக்கா கஷ்டப்ற அளவுக்கு எனக்கு பொறுமை இல்ல. என் தோள்பட்டை பக்கத்துல அருவாவால கீரிவுட்டேன். சட்டை மொத்தமும் ரத்தம்.

உள்ளயும் வெள்ளயும் பயம் இல்லாம தலிவர் கிட்ட சொல்லவேண்டியத ஒரு தடவை சொல்லிபாத்துகிட்டேன்.

Saturday, April 4, 2009

ஒரு சாக்கடை நீரோடையாகிறது

வழக்கம் போல் ராகவன் கணேஷை வசைபாடி கொண்டிருந்தார். திருட்டுத்தனமாக அவர் பையில் இருந்து பணம் எடுத்துவிட்டு இப்போது இல்லையென்று சாதிக்கும் கணேஷ் அதை கவனித்ததாக காட்டிகொள்ளாமல் அம்மா காமாட்சி கையால் டிபன் சாப்பிட்டு கொண்டிருந்தான்.  

"சம்பாதிக்க நான் இருக்கிறதுனால தான இவளோ ஆட்டம் போடற. என்னைக்காவது நான் செத்து போனா தான் உனக்கெல்லாம் பொறுப்பு வரும்" ராகவன் கோபமாக அலுவலகம் செல்வதற்காக வெளியேறினார்.  
"அம்மா அந்த சட்னிய கொஞ்சம் போடு" கணேஷ் கேட்கும் போது காமாட்சி இன்னும் ராகவன் கூறிய வார்த்தைகளில் இருந்து மீளவில்லை.  
"உன்னை தான கேட்கிறேன்" கணேஷ் சற்று கோபமாக கேட்ட போது நினைவு கலைந்து இப்படி பொறுப்பில்லாமல் இருக்கும் அவனை நினைத்து கவலைப்பட்டு கொண்டே சட்னியை வைத்தாள்.  
ராகவன் இன்னும் ஆறு மாதத்தில் ரிடையர் ஆக போகும் கவர்ன்மென்ட் சர்வன்ட். குறளகத்தில் தான் வேலை. தன் வாழ்நாள் முழுக்க சம்பாதித்ததை சேமித்து ஊருக்கு வெளியில் இந்த வீட்டை கட்டுவதற்குள் அவருக்கு பாதி உயிர் போய்விட்டது. சேமிப்பெல்லாம் வீட்டில் கரைத்திருந்த அவர் ரிடைர்மன்ட் பணத்தை வைத்து வீட்டை நடத்தி கொள்ளலாம் பின்னர் கணேஷ் வேலைக்கு சென்று சம்பாதித்தால் நிம்மதியான வாழ்க்கை என் திட்டம் போட்டிருந்தார். அவனோ கல்லூரி கடைசி வருடம் படிக்கிறான் என்று தான் பெயர் அத்தனை அரியர்கள் வைத்து அதை முடிக்கும் எண்ணமே இல்லாத மாதிரி சுற்றிக்கொண்டு திரிகிறான். தன் பேச்சையும் கேட்காமல் எந்த கவலையுமில்லாமல் அலையும் அவனை பார்க்கும் போது நம் வளர்ப்பு சரியில்லையோ என் குற்ற உணர்வில் தினமும் காமாட்சியிடம் புலம்புவார்.  

கணேஷ். கல்லூரி படிப்பதே வாழ்கையை என்ஜாய் பண்ணுவதற்கு தான் என்ற கொள்கையோடு வாழ்பவன். நம்மூர் அரசியல்வியாதிகள் மாதிரி என்றால் அந்த கொள்கையில் இருந்து எப்போதோ விலகி இருப்பான். ஆனால் அதை விடாப்பிடியாக பிடித்திருக்கும் இவன் யார் சொல்லியும் திருந்துவதாக தெரிவதில்லை. அரசியலுக்கு சரிப்பட்டு வரமாட்டான். எப்படியோ தட்டு தடுமாறி ஓரிரு சப்ஜெக்டில் பாஸ் செய்து மொத்தம் இருபது அரியர்களுடன் கடைசி செமஸ்டரை எதிர்நோக்கி இருந்தான். தவறு. கடைசி செமஸ்டர் அவனை எதிர்நோக்கி வந்து கொண்டிருந்தது. நண்பர் வட்டாரம் எல்லா கெட்ட பழக்கங்களையும் அக்கறையுடன் கற்றுகொடுத்திருந்தது. ஆனால் வழக்கம் போல் அந்த வட்டாரம் பரிட்சைகளில் பேப்பர் சேஸ் செய்தாவது பாஸ் செய்து விடுவார்கள். அந்த சாமர்த்தியத்தை மட்டும் கணேஷுக்கு கற்றுகொடுக்க மறந்துவிட்டார்கள் போலும். காரணம் கணேஷ் அவர்களிடம் விலக ஆரம்பித்தது தான். அதற்கு காரணம் காதல். இவனுக்கு அது ஒன்று தான் குறைச்சல் என் நீங்கள் கேட்பது புரிகிறது . அதெப்படி தான் இந்த மாதிரி கேரக்டர் உள்ளவர்களுக்கெல்லாம் காதலி கிடைக்கிறார்கள் என்று தெரியவில்லை.  

கல்லூரி அட்டண்டன்சை விட சினிமா தியேட்டர் அட்டண்டன்சுக்கு முக்கியத்துவம் கொடுத்தான். கூட்டம் இல்லாத படங்களுக்கு தான் இவன் ஆதரவு. மொழித்தடையும் அடிக்கடி உடைத்தெறிந்தான். காரண விளக்கம் தேவையில்லையென நினைக்கிறேன். 
நாளொரு படமும் பொழுதொரு பார்க்கும் சுற்றி திரிந்து அவன் மாதந்திர செலவுகள் கன்னாபின்னாவென்று ஏறி விட்டது. இதில் செல்போன் செலவுகளும் அடங்கும். அதற்காக தான் அப்பா மாதாமாதம் தரும் பணம் பத்தாமல் அவர் பாக்கெட்டிலேயே நேரடியாக கைவைக்க ஆரம்பித்தான்.  

அன்றும் அப்படிதான் ஈகா தியேட்டரில் பெயர் கூட தெரியாத ஏதோ ஒரு ஹிந்தி படத்திற்கு அவளை கூட்டிப்போயிருந்தான். படம் ஆரம்பித்ததை கவனிக்க விருப்பமில்லாமல் இருளில் சில்மிஷங்களில் ஆர்வாமாயிருந்தான். அவள் அதை எதிர்பார்த்தது போல் மறுப்பது போல் அதை அனுமதித்தாள். கணேஷின் செல்போன் அதற்கு இடையூறாக முகம் தெரியாத நம்பருக்காக சிணுங்கியது. இரு முறை அதை அணைத்து அவளை அணைத்தான். மூன்றாம் முறை . ..ங்கோத்... எவன்டா என அத்தனை காமத்தையும் கோபாமாய் மாற்றி அந்த அழைப்பை எடுத்தான்.

அந்த முனையில் .. "தம்பி.. இங்க குறளகம் பக்கத்துல ஹோட்டல்ல சாப்பிட வந்த ஒருத்தர் ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டார். அவர் பாக்கெட்ல இருந்த பேப்பர்ல உங்க நம்பர் இருந்துச்சு. அதனால போன் பண்ணேன். நீங்க வரீங்களா "
"இ... தோ... உ..ட..னே... வ.. ரே..ன் .. " . கணேஷ் உடைந்தான். இதயத்துடிப்பு ராக்கெட் வேகத்தில் ஏறிகொண்டிருந்தது. அந்த ஏசி குளிரிலும் தொப்பலாக வியர்க்க தொடங்கினான். காதலி அன்னியமானாள். பல ஆண்டுகளுக்கு பிறகு அவன் கண்ணில் எட்டி பார்த்தது. அனைவரும வேடிக்கை பார்க்க தன் வண்டியை நோக்கி ஓடினான். வண்டியை கிளப்பி வெளியில் வரும்போது தன் தந்தை தவிர அனைத்துமே மறந்து போயிருந்தான்.  

தன் தவறான நியாங்கள் எல்லாம் இப்போது தவறாக தெரிந்துகொண்டிருந்தன. தன் தந்தை தனக்காக செய்த தியாகங்கள் மனுதுக்குள் படமாக ஓடிகொண்டிருந்தது.  

எனக்கு வண்டி வேண்டும் என்பதற்காக உன் வண்டியை விற்று தினமும் பேருந்தில் கூட்டத்தில் நசுங்கி செல்வது, இஞ்சியனிரிங் காலேஜில் என்னை படிக்க வசதி இல்லையென அம்மாவிடம் நீ வருத்தப்பட்ட நாட்கள், உன் வாழ்நாளின் சாதனையாக வீட்டை கட்டிமுடித்த பின் பையனுக்காக வீடு ரெடி என நீ அம்மாவிடம் பெருமிதம் கொண்ட அந்த நாள், அன்று நான் வீடு ரொம்ப சிறியது என நய்யாண்டி செய்த போது உன் முகம் சுருங்கிய அந்த நிமிடம், என்னை பற்றி வருத்தப்பட்டு அம்மாவிடம் நீ அழுத நாட்கள். இது வரை நினைத்து பார்க்காத நிகழ்ச்சிகள் மனத்திரையில் ஓடி அவன் மனதை இன்னும் பாரமாக்கியது கண்களை இன்னும் ஈரமாக்கியது.  

இதோ கணேஷ் குறளகம் வந்தாயிற்று. அருகிலுருந்த ஹோட்டலில் கொஞ்சம் வேறுபட்ட சலசலப்புகளும் கூட்டமும் இருந்தது. கூட்டத்தை நோக்கி ஓடினான். மொத்த கூடத்தின் கவனமும் இவன் பக்கம் திரும்பியது. அதை பொருட்படுத்தாது ஓடினான். ஓட்டம் அங்கே கிடத்தி வைத்திருந்த உடலை பார்த்து நின்றது. அங்கே வேறொருவன் தனக்கு சுத்தமாக பரிச்சயமில்லாத ஒருவன் அந்த உடலை பார்த்து முகத்தை மறைத்துக்கொண்டு கதறிகொண்டிருந்தான். பின்னாலிருந்து ஒரு குரல் அவனை அழைத்தது.  

ஒரு பேப்பரை நீட்டி "தம்பி இந்த நம்பர் உங்களுதா" "ஆமா" இது கணேஷ். "சாரி தம்பி பதட்டத்துல தப்பான நம்பருக்கு பண்ணிட்டேன். அப்புறம் உங்க நம்பர இந்த பேப்பர்ல எழுது வச்சு ரொம்ப நேரமா உண்மைய சொல்லனும்னு முயற்சி பண்ணேன் தம்பி. ஆனா நீங்க போஃனை எடுக்கவே இல்ல. "  

"பரவயில்லைங்க. வண்டில வந்துட்டு இருந்ததால எடுக்க முடியல"  

சொல்லிவிட்டு குறலகத்துக்குள் ஓடினான்.  

ராகவன் அவனை பார்த்து ஒரு ஆச்சர்ய பார்வையுடன் " என்னடா எதாவது அவசரமா பணம் வேணுமா" "அப்பா என்ன மன்னிச்சுருங்கப்பா. இனிமே நீங்க சொல்றபடி கேட்கிறேன்பா. எப்பாடு பட்டாவது இந்த வாட்டி எல்லா அரியர்சையும் க்ளியர் பண்ணிடுறேன். அப்புறம் ஒரு நல்ல வேலைக்கு முயற்சி பண்றேன்" .  

ராகவனுக்கு கணேஷின் முகத்தில் ஒரு அசாத்திய தெளிவு இருப்பது தெரிந்தது. ஆபீசென்றும் பாராமல் அவனை அப்படியே கட்டி தழுவினார்.  

கணேஷின் கண்ணில் இருந்த கண்ணீர் இப்பொழுது ராகவனின் கண்களுக்கு மாறிவிட்டிருந்தது.

Thursday, April 2, 2009

தார்மீக காதல்

நான் இளமாறன்.வயது 30. பார்ப்பதற்கு சுமாரை விட சற்று அழகான தோற்றம். புரசைவாக்கத்தில் நண்பர்களோடு வாடகை குடித்தனம். தேனாம்பேட்டை AGS ஆபீசில் கிளார்க் வேலை. சம்பளம் சொற்பம் தான். ஆனால் அதை வைத்து வாழக்கற்றுக்கொண்ட நிறைவான வாழ்க்கை. சொந்த ஊர் திருச்சிக்கு பக்கத்தில் டால்மியாபுரம். வறண்ட பூமியை பார்த்து கொண்டே நான் அனுப்பும் பணத்தில் சொந்த வீட்டில் என் பெற்றோர். இந்த சென்னை நகரில் அவர்களை கூட்டி வந்து குடியிருக்க என் சம்பளம் போதாது, தவிர அவர்களுக்கும் இந்த நகர வாழ்க்கை பிடிக்காது. இப்போது நான் அலுவலகத்துக்கு தயாராகி கொண்டிருக்கிறேன் .

காலை நேரத்தில் அந்த 23C பிடித்து தேனாம்பேட்டை வருவதற்குள் எல்லாவிதமான மயக்கங்களும் வந்துவிடும். பல கல்லூரிகளை கடக்கும் பேருந்து ஆயிற்றே. சொல்லவே வேண்டாம். அப்படிதான் ஒருநாள் அதில் மேரியை பார்த்தேன். தினமும் பிரயாணிக்கும் அந்த பேருந்து அன்று மட்டும் வித்தியாசப்பட்டது. கூட்டத்தை நானும் கூட்டம் என்னையும் பொருட்படுத்தாது போல் இருந்தது. அவள் கண்களில் மயங்கி இருந்த நான் அவளுடன் SIET பஸ் ஸ்டாப்பில் இறங்கினேன். வசியம் செய்தது போல கல்லூரிவாசல் வரை பின்தொடர்ந்தேன். பின் அவளை சிந்தித்து கொண்டே என் ஆபீசுக்கு நடந்து சென்றேன். அவள் அழகு என்று சொல்லமாட்டேன். ஆனால் அவளிடம் ஏதோ ஒன்று என்னை ஈர்த்தது. பார்த்து முழுதாக ஒரு மணி நேரம் கூட ஆகாத பொண்ணுக்காக இப்படி உருகுகிறோமே என நினைக்கும் போது என் பலவீனம் மீது பயம் வந்தது. அவளை நினைக்க கூடாதென தீர்மானித்து ஒரு வழியாக ஆபீஸில் நுழையும் போது மணி 9:15. மக்கள் சிதறல்களாய் உள்ளே நுழைந்து கொண்டிருந்தனர். இருக்கையில் அமர்ந்து மின்விசரியை ஓட விட்ட பிறகு தான் ஜீவனே வந்தது. முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருந்ததால் நான் பைல்களுக்குள் மூழ்கினேன். அவ்வப்போது அருகில் வந்து அரட்டையை ஆரம்பிக்க துடிக்கும் நண்பர்களை பைலை பார்த்தபடியே தவிர்த்து இடையில் மேசைக்கு வந்த காப்பியை குடித்துவிட்டு தொடர்ந்தேன். பசி வயிற்றை கிள்ளியது, நிமிர்ந்து பார்த்தால் நான் மட்டுமே யாருமில்லாத சுடுகாட்டில் காவல்காக்கும் வெட்டியான் போல் இருந்தேன் .

கேன்டீனுக்கு சென்று என் டிபன் பாக்சை திறந்தேன். எல்லாரையும் சகட்டுமேனிக்கு கிண்டல் பண்ணி புறம்பேசி கொண்டிருந்தனர் என் ஆபீஸ் மேதாவிகள். என் எண்ணமெல்லாம் காலையில் பேருந்தில் கண்டவளை பற்றியே. தினமும் கதயடிப்பதற்கு இவர்களுக்கு மட்டும் எப்படி தான் செய்தி கிடைக்கிறதோ. உள்ளூர் அரசியலிலிருந்து அமெரிக்காகாரன் தாக்குதல் நடத்துவது வரைக்கும் இந்த கேன்டீனில் தான் முடிவு செய்யபடுவதை போல் இருந்தது அவர்கள் பேச்சு. மத்த நாட்களென்றால் காதை மூடிக்கொண்டு சாப்பிட்டுவிட்டு போயிருப்பேன் இன்று அவளை நினைத்துகொண்டிருக்கும் வேளையில் இவர்களது சத்தம் எரிச்சலூட்டியது. வெளியில் சென்று காற்றோட்டமாக அமர்ந்து சாப்பிட்டுவிட்டு சீட்டுக்கு வரும்போது இரண்டு மணி. எல்லோருக்கும் கண்கள் சொருகி கொண்டிருந்தது மிகவும் பிரயத்தனப்பட்டு விழித்து கொண்டிருந்தார்கள். நான் பைல்களை பார்ப்பது போல ஒரு குட்டி தூக்கம் போட முயற்சித்து அதில் வெற்றியும்..கொர்ர்ர்..கொர்ர் ..

கனவில் என் பலவீனம் வெற்றி கண்டது. விழித்து பார்த்த போது நேரம் 3. நேரே SIET பஸ் ஸ்டாப்புக்கு நடந்தேன். அங்கு கண்களால் காத்திருந்தேன். அவள் வந்தாள். அருகிலேயே நின்றாள். சுற்றும் முற்றும் பார்ப்பதுபோல அவள் கையிலிருந்த புத்தகத்தில் அவள் பெயரை பார்த்தேன். மேரி.

காலையில் அவளை தொடர்வது, மாலையில் பேருந்து நிறுத்தத்தில் நிற்பதும் கிட்ட தட்ட ஒரு வாரம் தொடர்ந்தது. அவளும் நான் தொடர்வதை கவனிக்க தொடங்கினாள். ஆனால் இப்போது பேருந்தில் என்னை பார்ப்பதை தவிர்ப்பதை நிறுத்திவிட்டாள். புன்னகையால் பேச தொடங்கிவிட்டோம். அன்று அவளிடம் பேச தீர்மானித்து பேருந்தில் இருந்து இறங்கியவுடன் அவளை நிறுத்தி என் காதலை சொன்னேன். சலனமில்லாமல் மாலை இதே இடத்தில சந்திப்போம் என கூறிவிட்டு சென்றுவிட்டாள். பெண்களால் மட்டும் எப்படி உள்ளுக்குள் ஆயிரம் போராட்டம் நடந்தாலும் சாந்தமான முகத்துடன் நடமாட முடிகிறது. என் மனம் மாலையை எண்ணி சிந்திக்க தொடங்கியது.

சொன்ன நேரத்தில் அங்கு வந்தாள் மேரி. அவள் விருப்பப்படி அருகில் இருந்த ஹோட்டலில் தேநீர் சாப்பிட சென்றோம். அவளுக்கும் என்னை பிடித்திருக்கிறதென்றும் ஆனால் காதல் தோணவில்லை என்றும் குழப்பினாள். தேநீர் ஆறி கொண்டிருந்தது. நாம் பழகுவோம் பிடித்திருந்தால் தொடருவோம் இல்லையென்றால் விட்டுவிடுவோம் என வழக்கமான சினிமா டயலாக்கை சொன்னேன்.எப்படியும் அவளை காதலிக்க வைத்துவிடலாம் என ஒரு நம்பிக்கை.அவளும் சம்மதித்தாள்.

செல்போனில் பேசுவதும் அவ்வபோது சந்திப்பதும் ரெண்டு மாதங்களுக்கு தொடர்ந்தது. ஒவ்வொரு நாள் இரவும் அன்று நடந்ததை அலசுவோம். அவள் என் டயரியாகவும் நான் அவள் டயரியாகவும் மாறிப்போனோம். இதற்கிடையில் காதல் பற்றி நாங்கள் பேசிக்கொள்ளவே இல்லை. ஆனால் மனதில் காதல் நிறைந்து இருந்தது.

Feb 14 2007.அந்த நாளின் முக்கியத்துவம் தெரியாதது போல் இருவரும் சந்திப்பதாய் முடிவெடுத்தோம். பரிசு கொடுத்தால் எங்கே என்னை தவறாக நினைப்பாளோ என வாங்காமல் சென்ற எனக்கு அவள் கையிலிருந்த அந்த பரிசு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஒரு அழாகன வாழ்த்துஅட்டை.
"காதல் இல்லையென்ற நாடகத்தை இன்றோடு முடிக்கிறேன். என் உள்ளம்கவர்ந்த கள்வனுக்கு இந்த காதலர் தினத்தில் என் காதலே பரிசாய் - மேரி"

பூரித்து போனேன். அவளை அள்ளி அணைத்து முத்தமிட வேண்டும் போல் இருந்தது. சபை நாகரீகம் கருதி அதை மனதிற்குள் நிகழ்த்திகொண்டேன் .
அதன் பின் உரிமையோடு அவளை அழைத்து எல்லா இடங்களும் சுற்றினேன். எங்கள் காதல் தீவிரமடைந்து கொண்டிருந்தது. திருமணம் பற்றி விவாதிக்க ஆரம்பித்திருந்தோம் .

April 3 2007. அவள் தன் பெற்றோர்களிடம் அன்று காதலை சொல்லி சம்மதம் கேட்பதாய் கூறினாள். மறுக்கபடாது என தைரியமூட்டிவிட்டு சென்றாள் .

5 மணிக்கு ஆபீசை விட்டு கிளம்பினேன். மனசெல்லாம் மேரி நிறைந்திருந்தாள்.

அவளிடம் ஒரு நாள் பேசாவிட்டாலும் கூட மனசு பாரமாயிருக்கும். மேரி வழக்கம் போல் எனக்காக காத்திருந்தாள். ஒற்றை ரோஜாவை மறக்காமல் வாங்கி வந்திருந்தேன்.

ரோஜாவை அவளிடம் தந்தேன். வாடிய ரோஜாக்களுடன் அதையும் பெற்று கொண்டாள் என் மேரி . தோற்றம் 4-10-1984. மறைவு 3-4-2007.

"மேரி உனக்கு தெரியுமா இன்று ஆபீசில் என்ன நடந்ததென்று ........... "

அந்த சாலை விபத்தில் மேரி இறக்காமல் இருந்திருந்தால் இன்று Mrs.இளமாறன் ஆக இருந்திருப்பாள். காதலி இறந்தாலும் என் காதலை நான் இறக்க விடபோவதில்லை .

"நாளை வருகிறேன் மேரி " விடைபெற்றேன்.