வானத்தை
மேகத்தை
பூக்களை
மொட்டுகளை
கடலை
அலையை
இரவை
நிலவை
நட்சத்திரத்தை
ஆதவனை
தாமரையை
மலையை
மழையை
கடவுளை
வானவில்லை
அதிகாலையை
அந்திமாலையை
பனித்துளியை
பட்டாம்பூச்சியை
தேனை
மானை
மீனை
மெல்லினத்தை
வல்லினத்தை
அமுதை
அமிர்தை
விட்டுவிடுங்கள் உங்கள் கவிதைகளிலிருந்து
அவை தோற்று துவண்டிருக்கின்றன
என்னவளிடம்
Wednesday, April 29, 2009
உவமானங்களின் தோல்வி
Tuesday, April 21, 2009
இன்று கற்பனை விடுமுறை
நீ இல்லாத காட்சிகளை என் கண்கள்
இமைகளோடு போராடி
விருப்பமின்றி பார்க்கிறது
கூடு விட்டு கூடு பாயத்துடிக்கும் என் இதயம்
காதல் மந்திரங்களை நீ மறந்ததால்
என் கூட்டுக்குள் விருப்பமின்றி துடிக்கிறது
உன் வாசம் தேடும் என் சுவாசம்
தோல்வியான தேடல்களுக்கு பின்
நீ இல்லாத காற்றை விருப்பமின்றி அனுமதிக்கிறது
உன் குரலின் ஓசையை தேடும் என் செவி
மௌனத்தின் சப்தத்திலும் உன்னை தேடி
நீ இல்லாத ஒலிகளை விருப்பமின்றி உள்வாங்குகிறது
காதலின் மறுப்பையே தாங்கிய என் மனம்
உன்னை காணாத சோகத்தை தாங்க முடியாமல்
இன்று விடுமுறை கேட்கிறது
நீ இல்லாத நாளை கவிதை எழுதியாவது
மறப்போம் என்று எழுத எத்தனித்து
அறியக்கண்டேன் நீ இல்லாததால்
இன்று கற்பனை விடுமுறை
Thursday, April 16, 2009
கெட்டு வாழ்ந்தவன் - சிறுகதை
எப்படியாவது அரசியல் கத்துக்கனும்ன்றது தான் என்னோட லட்சியம். அதுக்கு தான் என் அக்கா புருஷன் மூலமா எப்படியோ இந்த கட்சில சேந்துட்டேன். தெனமும் பத்து பேரோட சுமோல சுத்தறது தான் வேல. எதுக்கு சுத்றோம் எங்க போறோம்னுல்லாம் யாரும் கேக்கிறது இல்ல. கத்துகுட்டியான நான் மூச்சே விடறதில்லை. செல நேரம் போயிட்டு இருக்கும் போது அவசரமா ஒன்னுக்கு முட்டும் அப்ப கூட வெளில சொன்னதில்ல. சுத்தி இருக்றவனுங்கள பாத்தா எனக்கே பயமா இருக்கும், ஒவ்வொருத்தனும் ஒடம்ப கண்ணா பின்னானு ஏத்தி வச்சுக்கிட்டு அருவாகம்போட தான் சுத்துவானுங்க. என் கிட்டயும் ஒரு அருவா குடுத்தானுங்க ஆனா எதாவது பிரச்சனைனா எல்லாரையும் முன்னாடி வுட்டுட்டு நான் சுமோகுள்ளேயே பதுங்கிடுவேன். அந்த கூட்டத்திலையும் ஒரு நல்லவர் இருந்தாரு, அவரு பேரு பக்கிரி. ஆளு நெறைய பேர வேட்டிருக்காருனு பேசிகிட்டிருந்தோ சொல்லோ கேட்டேன். ஏதோ நம்ம மேல ஒரு சின்ன கரிசனம் அவருக்கு நானும் அத யூஸ் பண்ணி கொஞ்சம் க்ளோஸ் ஆயிட்டேன்.
அவர் தான் எனக்கு அரசியல் குரு. என்னனே தெரியாத அரசியல எனக்கு கத்து கொடுத்தது அவரு தான். அதுனால அவர நான் குருன்னு தான் கூப்டுவேன். அதிலயும் தொண்டனாவும் குண்டனாவும் இருக்கிறது எப்படின்னு அவர் சொல்லும்போது எனக்கு ஏன்டா இங்க வந்தோம்னு இருந்துச்சு. உயிர் மேல ஆச இருந்தாலும் அத காட்டிக்ககூடாதுன்னு சொன்னாரு. எல்லாம் புரிஞ்ச மாதிரி மண்டைய மண்டைய ஆட்னேன். எங்க நெருக்கத்த பாத்து குரூப்குள்ள கசமுசனு பேசிகிட்டாங்க. ஆனா நான் அத பத்திலாம் கவலைப்படாத மாதிரி நடிச்சேன். பின்னே குரு சொல்லிருக்காருல்லா பயம் இருந்தாலும் காட்டிக்க கூடாதுன்னு. எனக்கு எங்க குரூப்ல இருக்கறவங்களே என்ன போட்டு தள்ளிடுவாங்கலோனு எப்பவுமே கொஞ்சம் பயம் இருந்துச்சு. காரணம் என் குருவுக்கு கட்சில ஏதோ பதவி தர போறதா கேள்வி. எங்க நேத்து வந்த பய நான் இந்த நெருக்கத்த யூஸ் பண்ணி கட்சில சீக்கிரம் முன்னுக்கு வந்துடுவனோனு பயபுள்ளங்களுக்கு ஒரு பயம்.
கொஞ்ச நாள் வெறும் பிர்யாணி சரக்கு தூக்கம் அப்படினே போச்சு. பெரிய சோலி எதுவும் தலிவருகிட்டேந்து வரல. எனக்கு குரு அவரோட கதைய சொல்ல சொல்ல யாரையாவது குத்தனும் போல இருந்துச்சு. இத குரு கிட்ட சொன்ன சொல்லோ சிரிச்சாரு. வேணும்னா என்ன குத்துனாரு. அவர் சொன்னவொடனே என் கண்ணுலே தண்ணி நின்னுடுச்சு. சும்மா தாண்ட சொன்னேன்னு சிரிச்சாரு. ஆனா அதுக்கப்புறம் குரு என்ன அவர் தம்பி மாதிரி நடத்தினாரு.
அன்னைக்கொருநாள் எல்லாரும் செம காண்டா சுமோல கிளம்பினாங்க . என்னனு போமோது தான் சொன்னனுங்க. தலிவர கூட்டதிலேர்ந்து எதிர்கட்சிகாரன் யாரோ திட்டிடானாம் அதுனால அவன தூக்க போரோம்னானுங்க. மனசுக்குள்ளே சந்தோசம் கலந்த பயம் இருந்துச்சு. அதுக்கென்ன தூக்கிடுவோம்னு சொல்லிட்டு சிரிச்சேன். ஏதோ கிறுக்குபயல பாக்றமாதிரியே பாத்தனுங்க.
ஒரு எடத்துல வண்டி திடீர்னு நின்னுச்சு. பாத்தா அவனுங்களும் தயாரா தான் இருந்திருக்கானுங்க. எல்லாரும் ஆளுகொரு அருவாவோட இறங்கினோம்.நான் குருவுக்கு பின்னாடியே போனேன். குரு பாக்றவன் கையிலே கழுதுலேல்லாம் வெட்டினாரு. நான் விழுந்தவனுங்கலல்லாம் வெட்டிட்டே போயிட்டுருந்தேன். திடீர்னு ஒருத்தன் சைட்ல இருந்து குருவ வெட்ட வந்தான். எனக்கு என்ன தோனுச்சுனே தெரில அருவாளோட அவன் மேல பாஞ்சு கழுத்துல வெட்னேன். இப்ப அந்த எதிர்கூட்டத்த காணோம். அப்புறம் தான் தெரிஞ்சுது நான் வெட்னவன் தான் அந்த கூட்டத்துக்கே தலிவனாம். குரு என்ன அப்படியே கட்டி பிடிச்சு நான் சீக்கிரம் முன்னுக்கு வந்துடுவேன்னு சொன்னாரு. எல்லார் முன்னாலையும் அத கேட்க ரொம்ப பெருமையா இருந்துச்சு.
குரு தலிவர் கிட்ட கூட கூட்டிட்டு போய் இவன் தான் வெட்னான். ரொம்ப தைரியசாலி நமக்காக எத வேணாலும் செய்வான்னு என்ன கேட்காமலே என் உசிர உயில் எழுதி குடுத்தாரு. ஆனா இவளவு சீக்கிரம் இந்த அளவுக்கு பேரு கெடைக்கும்னு சத்தியமா நெனைக்கல. இந்த சம்பவத்துக்கப்புறம் எங்க குரூப்ல எனக்கு தனி மரியாதை. இப்ப யாரும் என்ன முன்ன விட்டு பின்னாடி பேசுறதில்ல. வணக்கம்லாம் கேக்காமலே கெடச்சுது. இந்த நேரத்துல தான் எனக்கு கட்சி யூனிபார்ம் கெடச்சுது. யூனிபார்ம்னா வெள்ள வேட்டி சட்டை தாங்க. அதுவரைக்கும் லுங்கியோட சுத்திட்டிருந்த எனக்கு இந்த வேஷ்டி கொஞ்சம் மண்டகனத்த குடுத்துச்சு .
அடுத்த வாரம் நடக்குற கட்சி மீடிங்க்ள குருவுக்கு ஏதோ பெரிய பதவி தர போறதா பேசிகிட்டாங்க. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. அன்னைக்கு தண்ணி அடிக்கும்போது குரு ரொம்ப பீல் பண்ணி சொன்னாரு. இந்த மாதிரி ஒரு பதவிக்கு தான் இத்தன வருஷமா காத்துகெடந்ததாவும் அதுக்காக எத்தனை பேர் கை கால் தலைய வெட்டினார்னும் சொல்லசொல்லோ நெஞ்சு அடச்சுது. குரு அழுது நான் மொத மொறயா பாக்குறேன். குருவ சமாதான படுத்தும்போது நான் தான் இனிமே இந்த குரூப்கு தலிவனு சொன்னாரு. சத்தியமா சரக்குனால இல்லீங்க நெஜமாலுமே வானத்துல பறக்குற மாதிரி இருந்துச்சு.
மீடிங்க்கு இன்னும் ஒருவாரம் இருந்துச்சு. நானும் குருவும் கடைக்கு போய் நல்ல வேட்டி சட்டைலாம் எடுத்துகிட்டோம். பின்ன இந்த கட்சி மீடிங்க்கு எல்லா பெரிய தலைங்களும் வரும். அவுனுங்களுக்கு நாம மனசுல நிக்கற மாதிரி தெரிஞ்சா தான் பின்னாடி எதாவது செய்வானுங்க . கட்சில எவளவு பெரிய ரவுடியா இருந்தாலும் அந்த மீடிங்க்கு வரவனுங்க கிட்ட ரொம்ப பவ்யமா நடந்துக்கணும். எல்லார் கிட்டயும் நம்மள மாதிரி ஒரு குரூப் இருக்கும் அதுனால எதாவது எகிறன உன்ன தூக்கிட்டு போய்ட்டே இருப்பானுங்க. அவர் பெரியாள வந்தா எனக்கு பாத்து எதாவது செய்றேன்னு சொன்னார். குரு அன்னைக்கு நெறைய கத்துகொடுத்தார். குருவ விட எனக்கு அவர் பொறுப்பேக்றத பாக்கணும்னு ரொம்ப ஆசையா இருந்துச்சு.
அடுத்த ஒரு வாரம் தண்ணி அடிச்சே கழிஞ்சுச்சு. குருவும் நானும் இன்னும் நெருக்கமானோம். அன்னைக்கும் தண்ணி அடிச்சிட்டு பீச் பக்கம் போலாம்னு கெளம்பினோம். இன்னும் ரெண்டு நாள்ல கட்சி மீட்டிங். குரு ரொம்ப சந்தோஷமா இருந்தார்.
நான் தான் வண்டிய ஓட்டினேன். நேரா நான் மொத மொத குருவ காப்பாத்துன அந்த எடத்துக்கே போனேன். பின்ன என் அரசியல் வாழ்க்க தொடங்குன எடமாச்சே. எங்கடா வந்த்ருகோம்னு குரு கேட்டார். அவர கைத்தாங்கலா எறக்கி கீழ கூட்டியாந்து அருவாளால ஒரே போடா போட்டேன். மன்னிச்சுருங்க குரு உங்களுக்கடுத்து அந்த பதவி எனக்கு தாணு நிச்சயமா தெரியும். ஆனா அதுக்காக இன்னும் வருசக்கணக்கா கஷ்டப்ற அளவுக்கு எனக்கு பொறுமை இல்ல. என் தோள்பட்டை பக்கத்துல அருவாவால கீரிவுட்டேன். சட்டை மொத்தமும் ரத்தம்.
உள்ளயும் வெள்ளயும் பயம் இல்லாம தலிவர் கிட்ட சொல்லவேண்டியத ஒரு தடவை சொல்லிபாத்துகிட்டேன்.
Saturday, April 4, 2009
ஒரு சாக்கடை நீரோடையாகிறது
Thursday, April 2, 2009
தார்மீக காதல்
காலை நேரத்தில் அந்த 23C பிடித்து தேனாம்பேட்டை வருவதற்குள் எல்லாவிதமான மயக்கங்களும் வந்துவிடும். பல கல்லூரிகளை கடக்கும் பேருந்து ஆயிற்றே. சொல்லவே வேண்டாம். அப்படிதான் ஒருநாள் அதில் மேரியை பார்த்தேன். தினமும் பிரயாணிக்கும் அந்த பேருந்து அன்று மட்டும் வித்தியாசப்பட்டது. கூட்டத்தை நானும் கூட்டம் என்னையும் பொருட்படுத்தாது போல் இருந்தது. அவள் கண்களில் மயங்கி இருந்த நான் அவளுடன் SIET பஸ் ஸ்டாப்பில் இறங்கினேன். வசியம் செய்தது போல கல்லூரிவாசல் வரை பின்தொடர்ந்தேன். பின் அவளை சிந்தித்து கொண்டே என் ஆபீசுக்கு நடந்து சென்றேன். அவள் அழகு என்று சொல்லமாட்டேன். ஆனால் அவளிடம் ஏதோ ஒன்று என்னை ஈர்த்தது. பார்த்து முழுதாக ஒரு மணி நேரம் கூட ஆகாத பொண்ணுக்காக இப்படி உருகுகிறோமே என நினைக்கும் போது என் பலவீனம் மீது பயம் வந்தது. அவளை நினைக்க கூடாதென தீர்மானித்து ஒரு வழியாக ஆபீஸில் நுழையும் போது மணி 9:15. மக்கள் சிதறல்களாய் உள்ளே நுழைந்து கொண்டிருந்தனர். இருக்கையில் அமர்ந்து மின்விசரியை ஓட விட்ட பிறகு தான் ஜீவனே வந்தது. முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருந்ததால் நான் பைல்களுக்குள் மூழ்கினேன். அவ்வப்போது அருகில் வந்து அரட்டையை ஆரம்பிக்க துடிக்கும் நண்பர்களை பைலை பார்த்தபடியே தவிர்த்து இடையில் மேசைக்கு வந்த காப்பியை குடித்துவிட்டு தொடர்ந்தேன். பசி வயிற்றை கிள்ளியது, நிமிர்ந்து பார்த்தால் நான் மட்டுமே யாருமில்லாத சுடுகாட்டில் காவல்காக்கும் வெட்டியான் போல் இருந்தேன் .
கேன்டீனுக்கு சென்று என் டிபன் பாக்சை திறந்தேன். எல்லாரையும் சகட்டுமேனிக்கு கிண்டல் பண்ணி புறம்பேசி கொண்டிருந்தனர் என் ஆபீஸ் மேதாவிகள். என் எண்ணமெல்லாம் காலையில் பேருந்தில் கண்டவளை பற்றியே. தினமும் கதயடிப்பதற்கு இவர்களுக்கு மட்டும் எப்படி தான் செய்தி கிடைக்கிறதோ. உள்ளூர் அரசியலிலிருந்து அமெரிக்காகாரன் தாக்குதல் நடத்துவது வரைக்கும் இந்த கேன்டீனில் தான் முடிவு செய்யபடுவதை போல் இருந்தது அவர்கள் பேச்சு. மத்த நாட்களென்றால் காதை மூடிக்கொண்டு சாப்பிட்டுவிட்டு போயிருப்பேன் இன்று அவளை நினைத்துகொண்டிருக்கும் வேளையில் இவர்களது சத்தம் எரிச்சலூட்டியது. வெளியில் சென்று காற்றோட்டமாக அமர்ந்து சாப்பிட்டுவிட்டு சீட்டுக்கு வரும்போது இரண்டு மணி. எல்லோருக்கும் கண்கள் சொருகி கொண்டிருந்தது மிகவும் பிரயத்தனப்பட்டு விழித்து கொண்டிருந்தார்கள். நான் பைல்களை பார்ப்பது போல ஒரு குட்டி தூக்கம் போட முயற்சித்து அதில் வெற்றியும்..கொர்ர்ர்..கொர்ர் ..
கனவில் என் பலவீனம் வெற்றி கண்டது. விழித்து பார்த்த போது நேரம் 3. நேரே SIET பஸ் ஸ்டாப்புக்கு நடந்தேன். அங்கு கண்களால் காத்திருந்தேன். அவள் வந்தாள். அருகிலேயே நின்றாள். சுற்றும் முற்றும் பார்ப்பதுபோல அவள் கையிலிருந்த புத்தகத்தில் அவள் பெயரை பார்த்தேன். மேரி.
காலையில் அவளை தொடர்வது, மாலையில் பேருந்து நிறுத்தத்தில் நிற்பதும் கிட்ட தட்ட ஒரு வாரம் தொடர்ந்தது. அவளும் நான் தொடர்வதை கவனிக்க தொடங்கினாள். ஆனால் இப்போது பேருந்தில் என்னை பார்ப்பதை தவிர்ப்பதை நிறுத்திவிட்டாள். புன்னகையால் பேச தொடங்கிவிட்டோம். அன்று அவளிடம் பேச தீர்மானித்து பேருந்தில் இருந்து இறங்கியவுடன் அவளை நிறுத்தி என் காதலை சொன்னேன். சலனமில்லாமல் மாலை இதே இடத்தில சந்திப்போம் என கூறிவிட்டு சென்றுவிட்டாள். பெண்களால் மட்டும் எப்படி உள்ளுக்குள் ஆயிரம் போராட்டம் நடந்தாலும் சாந்தமான முகத்துடன் நடமாட முடிகிறது. என் மனம் மாலையை எண்ணி சிந்திக்க தொடங்கியது.
சொன்ன நேரத்தில் அங்கு வந்தாள் மேரி. அவள் விருப்பப்படி அருகில் இருந்த ஹோட்டலில் தேநீர் சாப்பிட சென்றோம். அவளுக்கும் என்னை பிடித்திருக்கிறதென்றும் ஆனால் காதல் தோணவில்லை என்றும் குழப்பினாள். தேநீர் ஆறி கொண்டிருந்தது. நாம் பழகுவோம் பிடித்திருந்தால் தொடருவோம் இல்லையென்றால் விட்டுவிடுவோம் என வழக்கமான சினிமா டயலாக்கை சொன்னேன்.எப்படியும் அவளை காதலிக்க வைத்துவிடலாம் என ஒரு நம்பிக்கை.அவளும் சம்மதித்தாள்.
செல்போனில் பேசுவதும் அவ்வபோது சந்திப்பதும் ரெண்டு மாதங்களுக்கு தொடர்ந்தது. ஒவ்வொரு நாள் இரவும் அன்று நடந்ததை அலசுவோம். அவள் என் டயரியாகவும் நான் அவள் டயரியாகவும் மாறிப்போனோம். இதற்கிடையில் காதல் பற்றி நாங்கள் பேசிக்கொள்ளவே இல்லை. ஆனால் மனதில் காதல் நிறைந்து இருந்தது.
Feb 14 2007.அந்த நாளின் முக்கியத்துவம் தெரியாதது போல் இருவரும் சந்திப்பதாய் முடிவெடுத்தோம். பரிசு கொடுத்தால் எங்கே என்னை தவறாக நினைப்பாளோ என வாங்காமல் சென்ற எனக்கு அவள் கையிலிருந்த அந்த பரிசு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஒரு அழாகன வாழ்த்துஅட்டை.
"காதல் இல்லையென்ற நாடகத்தை இன்றோடு முடிக்கிறேன். என் உள்ளம்கவர்ந்த கள்வனுக்கு இந்த காதலர் தினத்தில் என் காதலே பரிசாய் - மேரி"
பூரித்து போனேன். அவளை அள்ளி அணைத்து முத்தமிட வேண்டும் போல் இருந்தது. சபை நாகரீகம் கருதி அதை மனதிற்குள் நிகழ்த்திகொண்டேன் .
அதன் பின் உரிமையோடு அவளை அழைத்து எல்லா இடங்களும் சுற்றினேன். எங்கள் காதல் தீவிரமடைந்து கொண்டிருந்தது. திருமணம் பற்றி விவாதிக்க ஆரம்பித்திருந்தோம் .
April 3 2007. அவள் தன் பெற்றோர்களிடம் அன்று காதலை சொல்லி சம்மதம் கேட்பதாய் கூறினாள். மறுக்கபடாது என தைரியமூட்டிவிட்டு சென்றாள் .
5 மணிக்கு ஆபீசை விட்டு கிளம்பினேன். மனசெல்லாம் மேரி நிறைந்திருந்தாள்.
அவளிடம் ஒரு நாள் பேசாவிட்டாலும் கூட மனசு பாரமாயிருக்கும். மேரி வழக்கம் போல் எனக்காக காத்திருந்தாள். ஒற்றை ரோஜாவை மறக்காமல் வாங்கி வந்திருந்தேன்.
ரோஜாவை அவளிடம் தந்தேன். வாடிய ரோஜாக்களுடன் அதையும் பெற்று கொண்டாள் என் மேரி . தோற்றம் 4-10-1984. மறைவு 3-4-2007.
"மேரி உனக்கு தெரியுமா இன்று ஆபீசில் என்ன நடந்ததென்று ........... "
அந்த சாலை விபத்தில் மேரி இறக்காமல் இருந்திருந்தால் இன்று Mrs.இளமாறன் ஆக இருந்திருப்பாள். காதலி இறந்தாலும் என் காதலை நான் இறக்க விடபோவதில்லை .
"நாளை வருகிறேன் மேரி " விடைபெற்றேன்.