Sunday, July 25, 2010

கண் மணியே பேசு - 2


கணேஷ் அந்த நிலையில் இருந்து வெளிவர சற்று நேரம் ஆனது. நடந்ததை மனதிற்குள் எத்தனை முறை ஒட்டி பார்த்தாலும் குழப்பங்கள் மட்டுமே விடையாய் கிடைத்தது.

நேரம் பத்தை தொட்டு கொண்டிருந்தது.

அறையில் சாவித்திரி அமைதியாக ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.

ஜன்னல்களில் புகுந்து மெல்லிய காற்று அறையை நிரப்பி கொண்டிருந்தது. நிசப்தமான இரவில் அந்த காற்றும் ஒரு வித கிலியை உண்டு பண்ணி கொண்டிருந்தது.

அமைதியான வேளையில் திடீரென்று நாய்கள் குரைக்க துவங்கின. சாவித்திரி லேசாக அசைய துவங்கிய நேரம் கணேஷ் சட்டென சென்று ஜன்னல்களை அடைத்தார்.

வாசலுக்கு சென்று என்னவென பார்க்க வெளியே வந்த நிமிடம் நாய்களின் சப்ப்தங்கள் இல்லை. தெருவில் எட்டி பார்த்தல் அங்கு நாய்கள் இல்லை.

அமானுஷ்யத்தை கணேஷ் நம்பியதில்லை. ஆனால் அதன் வாதங்கள் கடந்த நான்கு மணி நேரமாக நடக்கும் நிகழ்வுகளை நினைவூட்டிக்கொண்டிருந்தன.

வழக்கத்திற்கு மாறாக தெரு மயான அமைதி பூண்டிருந்தது. கணேஷ் உள்ளே திரும்பி கதவை தாழிட்ட நேரம் தெருவில் ஆட்டோ ஒன்று அத்தனை அமைதியையும் குலைத்து கொண்டு சீறிசென்றது.

கணேஷிற்கு அனைத்தும் விசித்திரமாய் பட்டது. யோசித்து கொண்டிருந்த வேளையில் சாவித்திரியின் அறையில் அலறல். விருட்டென ஓடிய கணேஷ் சாவித்திரியின் கோலத்தை பார்த்து நிலைகுலைந்து போனார்.

கட்டிலின் மேல் தலைவிரி கோலமாய் ஏதோ மந்திரத்தை உச்சரித்து கொண்டிருந்தாள் அவள்.

கண்களில் கோபம் தாண்டவமாடியது. கண் மணிகள் மீண்டும் இடது வலது என கடிகார பெண்டுலம் போல ஆடிகொண்டிருந்தன.

ஜன்னலின் வழியே காற்று நுழைந்து அந்த அறையை இடைவெளி இல்லாமல் மீண்டும் நிரப்பிகொண்டிருந்தது.

சாவித்திரியின் சப்தம் குறைந்து கொண்டிருந்தது. கணேஷ் அவள் அருகில் அமர முதல் முறையாக பயந்தார். சற்று நேரம் அவளையே உற்று நோக்கி கொண்டிருந்தார். சாவித்திரி சத்தியமாக தன சுய உணர்வில் இல்லை என புரிந்தது. அவளை தொட எத்தனித்த வேளையில் அவள் மந்திரம் நின்றது. படுக்கையில் பொத்தென விழுந்தாள்.

கணேஷ் அவளை தட்டி எழுப்பிகொண்டிருகும் பொது அறை மீண்டும் நிசப்தமானது. ஜன்னல்கள் மெதுவாக மூடி கொண்டன. அறையில் இருந்து எதுவோ ஜன்னலின் வெளியில் சென்ற ஒரு உணர்வு கணேஷை ஆட்கொண்டது.

சிந்தனையில் இருந்த கணேஷை ஏதோ உலுக்கியது. ஒரு நிமிடம் தன்னை சுற்றி நடப்பதை மறந்து இது வரை நம்பாததை எல்லாம் யோசித்து கொண்டிருந்த வேளையில் அந்த உலுக்கல் அவரை அலற செய்ததது.

"என்னங்க, என்னங்க நான் தான். ஏன் இப்படி பேய் அடிச்சா மாதிரி இருக்கீங்க" சாவித்திரி தெளிவாக பேசிகொண்டிருந்தாள் .

உலுக்கியது யார் என்று தெரிந்து நிம்மதி பெருமூச்சு விட்ட கணேஷின் மனதின் கேள்விகள் ஒலியாக வெளிப்பட்டன.

"இப்ப என்ன நடந்துச்சுன்னு உனக்கு தெரியுமா சாவித்திரி ?"

"இல்லங்க . லேசா தலைவலிக்குது .. அப்புறம் கனவு மாதிரி ஒண்ணு வந்துச்சு . அது முடிஞ்சா உடனே எழுந்திருச்சிட்டேன் "

"கனவா . சொல்லு சொல்லு . என்ன வந்துச்சு . சீக்கிரம் சொல்லு"

"ஏங்க இப்படி பதட்டப்படுறீங்க? ஏதோ நிஜத்துல நடக்கிறது கனவுல வர மாதிரி கேக்குறீங்க"

"சும்மா ஒரு ஆர்வம் தாமா . சொல்லு"

"அந்த பொண்ணு உடம்ப புதைச்ச இடத்துல போலீஸ் இருக்காங்க. அவ உடம்ப தோண்டி எடுக்குறாங்க"

"என்னது போலிஸா? "

"ஆமாங்க.. அவ பாக்கெட்ல ஒரு லெட்டர் கூட இருந்துச்சு"

"இரு.. இரு.. லெட்டரா.." கணேஷிற்கு போலீஸ் இருக்கும் பயம் போகும் முன் லெட்டர் என சாவித்திரி சொன்னது இன்னும் பயமுறுத்தியது.

"ஆமாங்க .."

"லெட்டர்ல என்னமா இருக்கு.. "

"அது தெரிலேங்க.."

"வேற எதாவது பாத்தியா"

"ம்ம்.. அந்த லெட்டெர ஒருத்தர் கைல வச்சுருக்கார். அவர் கைகடிகாரத்துல மணி ரெண்டுன்னு இருக்கு"

"என்ன வாட்சனு தெரியுதா"

"ஆமா டைட்டன்னு போட்ருக்கு"

"சரி விடு இத இத்தோட விட்ருவோம். நீ தூங்கு. ஆபீஸ்ல இருந்து போன் வந்துச்சு. ஏதோ சரக்கு ஏத்திட்டு போன லாரிய போலீஸ் பிடிசிருக்காங்கலாம். நான் போய் பாத்துட்டு வரேன் "

"ஏங்க சீக்கிரம் வந்துருங்க "

"கண்டிப்பாமா "

கணேஷ் அவசரமாக கடிகாரத்தை பார்த்தார்.

நேரம் பதினொன்றை நெருங்கி கொண்டிருந்தது. செல்போன் எண்கள் அவசரமாய் அழுத்தபட்டன.

"டேய்.. எங்கடா இருக்கீங்க"

"பாஸ் . பாண்டிச்சேரி அவுட்டர்ல ரூம்ல இருக்கோம். காலைல கண்டிப்பா வெளியூர் போய்டுவோம்"

"அது இல்லைடா . அந்த பொணத்த புதைச்ச எடத்துக்கு உடனே வாங்க. நானும் வந்துட்டு இருக்கேன்"

"பாஸ் . எதாவது பிரச்சனையா"

"வந்து சொல்றேன். சீக்கிரம் வாங்க"

கணேஷின் கார் கிழக்கு கடற்கரை சாலையில் சீறி பாய்ந்து கொண்டிருந்தது.

பாண்டிச்சேரி காவல் நிலையம்.

"ஏன்பா யாரோ ஒரு குரூப் கார்ல ஏதோ கொண்டு வந்து போட்டுட்டு போனதா போன் கால் வந்துசே, யாராவது போனீங்களா " ஹெட் கான்ஸ்டபல் கண்ணையன் கேள்விக்கு பதில் கூறாமல் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.

வாசலில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீப் வேகமாக வந்து நின்றது. அலாரம் வைத்தது போல் அனைவரும் எழுந்தனர். பார்ப்பவரை எல்லாம் பயம்முறுத்தும் தோற்றம். பணியில் நேர்மை. நண்பர்கள் குறைவு. எதிரிகள் ஏராளம். இதுதான் சப்-இன்ஸ்பெக்டர் இளமாறனின் சுய குறிப்பு.

"என்னயா எதாவது கேஸ் வந்துச்சா? "

"சார் ஒரு போன் வந்துச்சு" கண்ணையன் எல்லாவற்றையம் சொல்லி முடிக்க இளமாறனின் கண்ணில் கோபம் பீறிட்டது.

"போன் வந்து இவளோ நேரம் ஆச்சு இன்னும் யாரும் போகலையா. முதல்ல வண்டி எடுங்க"

ஜீப் புழுதியை கிளப்பி கொண்டு புறப்பட்டது.

"சார் வாட்ச் புதுசா சார்" ஜீப்பின் உள்ளிருந்த அமைதியை கண்ணையனின் குரல் விரட்டியது.

"ஆமா இன்னைக்கு தான் வாங்குனேன். நல்லாருக்கா? "

"டைட்டன் வாட்ச். ஆனா டைம் கரெக்டா இல்லையே சார். ஒரு மணி நேரம் பாஸ்டா இருக்கே"

"நான் தான் அப்படி செட் பண்ணி வச்சுருக்கேன். ஸ்டேஷனுக்கு நேரத்துக்கு வர தேவைப்படும்ல அதான்"

மூன்று வாகனங்களும் ஒரே இடத்தை நோக்கி சென்று கொண்டிருந்தன.

நேரம். நடுநிசி கடந்து அரை மணிகள்.

(திகில் தொடரும் ..)

Saturday, July 17, 2010

கண் மணியே பேசு - 1


அகலமான அந்த சாலையின் இருபுறமும் வளர்ந்து நிறைந்து கிடந்தன விஸ்தாலமான பங்களாக்கள். பணம் காய்க்கும் மரங்கள் என்று சொல்லிவிடலாம் போல இருந்தன அவை. சைக்கிளில் அந்த ரோட்டில் பயணிப்பவன் ரோட்டை பார்த்து ஓட்டுவது கடினம்.

அத்தனை பங்களாக்களிலும் தனித்து தெரிவது அந்த பிரம்மாண்ட பங்களா. தொழிலதிபர் கணேஷிற்கு சொந்தமானது. ரகம் ரகமாக பத்துக்கும் மேற்பட்ட கார்கள் அணிவகுத்து நின்றன. வாசலில் முரட்டு மீசையுடன் தெருவில் போவோரை எல்லாம் மிரட்டும் தோரணையில் காவல்காரன். உள்ளே கணேஷ் பேப்பர் படித்து கொண்டிருந்தார். அவரின் அன்பு மனைவி சாவித்திரி அளவான புன்னகையுடன் காபி கொண்டு வந்துகொண்டிருந்தாள்.


"ஏம்மா நீயே எல்லா வேலையும் செஞ்சிட்டு இருக்கியே வேலைக்கு ஆள் வச்சுக்கண்ணு சொன்னாலும் கேக்க மாட்டேங்கிற "


"என்னங்க வீட்ல இருக்கிறது நாம ரெண்டு பேரு தான. இதுக்கு எதுக்கு வேலைக்காரங்க "


"என்னமோ இவளோ வசதி இருந்தும் நீ கஷ்டப்படுறத பாக்க முடியாம தான் சொன்னேன்"


"புருஷனுக்கு வேல செய்றது கஷ்டம்னு யாரு சொன்னா"


"ஏதோ நீ சந்தோஷமா இருந்தா போதும் "


"நீங்க என்ன பத்தி கவலைபடாம உங்க உடம்ப பாத்துக்கங்க. நேத்து நைட் முதுகுபிடிப்புன்னு சொன்னீங்களே. இப்ப எப்படி இருக்கு "


"இப்ப கொஞ்சம் பரவால்லம்மா "


"எதுக்கும் சாயந்திரம் டாக்டர் கிட்ட போவோம். எனக்கும் பாக்கணும் . ஒரு வாரமா நைட்ல தலைவலி அதிகமா இருக்கு "


"கண்டிப்பா போவோம் . சரியா ஆறு மணிக்கு ரெடியா இரு "


"சரிங்க" . அழுத்தமான முத்தம் வைத்து கணேஷ் அலுவலகத்துக்கு தயாராக சென்றான்.


அலுவலகத்துக்கு சென்று வழக்கமான குட் மார்னிங்களுக்கு பதில் கூறி அமர்ந்த பத்தாவது நிமிடம் தொலைபேசி அழைத்தது.


"பாஸ் நீங்க சொன்ன மாதிரியே அவள கொண்டு வந்துட்டோம்" கரகர குரலில் மறுமுனை ஒலித்துகொண்டிருந்தது.


"வெரி குட். அங்கேயே வெயிட் பண்ணுங்க இதோ கொஞ்ச நேரத்துல வந்திடுறேன்"


காற்றை கிழித்து அவசரமாக புறப்பட்ட கணேஷின் காரை முறைத்து பார்த்துக்கொண்டிருந்தன நான்கு கண்கள். கணேஷ் சத்தியமாய் அதை கவனித்திருக்கவில்லை. அவர் எண்ணம் எல்லாம் அந்த பெண் மேல் தான் இருந்தது. எப்படி இந்த பிரச்சனையை அணுகுவது, விஷயத்தை வெளியே சொல்லியிருப்பாளோ .


அந்த பெண்ணின் பெயர் நிர்மலா. கணேஷின் முன்னாள் செக்ரட்டரி. கணேஷிடம் கருப்பாக வந்த பணம் வெள்ளையாக மாற்றப்பட்டு கொண்டிருந்த அந்த இரண்டு நாட்களுக்குள் வருமானவரி அதிகாரிகளிடம் தகவல் கூறி சன்மானதிற்காக முதலாளியை விற்றவள் என்ற பெயருடன் வெளியேற்றபட்டவள். பெரிய அளவில் கணேஷ் அவளை ஏதும் செய்யவில்லை. தலைப்பு செய்திகளில் தன் பெயர் வருவதை அவர் விரும்பியதில்லை. தொலைத்த பணமும் பெரிதாக இல்லாததால் அவரும் கண்டுகொள்ளவில்லை. நிர்மலா அவரை தொடர்பு கொண்டு மிரட்டும் வரை.

கார் நிர்மலா கட்டி வைத்த இடத்தை சென்றடைந்தது. நிர்மலா மயங்கி கிடந்தாள்.


"டேய் அவள எழுப்புங்கடா " அதிகார தொனியில் கணேஷின் குரல் ஒலித்தது.


"பாஸ் ரொம்ப நேரமா முயற்சி பண்ணோம். எழுந்திருக்கல. செத்துட்டானு நினைக்கிறன் "


"அட பாவிங்களா. விஷயத்த அவ கிட்ட கேக்கணும்னு தான கொண்டு வர சொன்னேன். அதுக்குள்ள கொன்னுட்டீங்களே"


"பாஸ் பாஸ் . நாங்க கொல்லல. கொண்டு வரும் போதே செத்துட்டான்னு நெனைக்றேன். நீங்க குடுத்த அந்த மயக்க மருந்துல கர்ச்சிப்ப நனைச்சு மட்டும் தான் மூக்கில வச்சோம். வேற எதுவும் செய்யல"


"சரி உடம்ப இங்க வச்சுக்க முடியாது. உங்க வண்டில கொண்டு போய் திண்டிவனம் தாண்டி போய் எதாவது எடத்துல புதைச்சிடுங்க. நகை எல்லாம் எடுத்துகோங்க. பொணத்த கனுபிடிச்ச கூட நகைக்காக கொன்ன மாதிரி இருக்கும். எதுக்கும் கொஞ்ச நாளைக்கு வெளியூர் எங்கயாவது போய்டுங்க"


"சரி பாஸ். ஆனா பிரச்சன எதாவது வந்த எங்கள கை விட்ராதீங்க "


"நிச்சயமா மாட்டேன். நம்புங்க" . கணேஷின் உதடு மட்டும் பதில் கூறியது.


அந்த நான்கு கண்கள் அவரை பின்தொடர்ந்து அங்கு நடந்தவைகளை தூரத்தில் இருந்து பார்த்துகொண்டிருந்தன.


கணேஷ் அலுவலகம் வந்து எதுவும் நடக்காதது போல் தன் குளுகுளு அறைக்கு சென்றார். ஒரு கொலை நடந்ததற்கான அறிகுறி அவரிடம் இல்லை.


சாயந்திரம் வீட்டுக்கு சென்று மனைவியுடன் டாக்டரை பார்த்து ஆசுவாசமாய் சோபாவில் அமர்ந்தார். உடை மாற்றி காபி கொண்டு வர சாவித்திரி கிளம்பினாள். சற்று நேரத்திற்கெல்லாம் வீல் என்ற அலறல் சத்தம் அத வீட்டை உலுக்கியது.


உடை மாற்ற சென்ற மனைவியின் அலறல் கேட்டு திடுக்கிட்டு எழுந்து போன கணேஷ் அங்கு கண்ட காட்சி அவரின் தொண்டை குழியை வற்ற செய்தது. தரையில் அசைவில்லாமல் கிடந்த சாவித்ரியின் கண்கள் திறந்திருந்தன கண் மணிகள் அங்கும் இங்கும் அசைந்து கொண்டிருந்தன. தண்ணீர் கொண்டு வந்து தெளிக்க முற்படும் பொது சாவித்திரி கட்டிலில் அமர்ந்திருந்தாள்.


"ஏம்மா என்னமா ஆச்சு "


"தெரியலீங்க. இத்தனை நாள் வர தலைவலின்னு நெனச்சேன். ஆனா தலைக்குள்ள என்னென்னமோ ஒடுச்சுங்க.ஒண்ணுமே புரில "


"என்னம்மா சொல்ற"


"ஆமாங்க. யாரோ நாலு பேரு வண்டில ஒரு பொண்ண கூட்டிட்டு போய்ட்டு இருகாங்க. பொண்ணு அசைவில்லாம கெடக்குறா. வண்டி பாண்டிச்சேரினு ஒரு போர்டு தாண்டி போய் நிக்குது. அப்புறம் அவள கீழ எறக்கி ஒரு எடத்துல மண்ணு தோண்டி புதைக்றாங்க. புதைச்சிட்டு போன அஞ்சாவது நிமிஷத்துல அந்த பொண்ணு முழிப்பு வந்து அங்கேயே மூச்சு தெணறி சாவுறா. "


"இது மயக்கத்துல இருக்கும் போது நீயே எதோ நெனச்ச மாதிரி இருக்கு . ரெஸ்ட் எடு சரியாய்டும் "


"இல்லைங்க எனக்கு பயமா இருக்கு"


"காலைல பேசிக்கலாம் நீ ரெஸ்ட் எடும்மா" . சொல்லி முடிக்க கணேஷ் முழுவதுமாக வேர்த்திருந்தார். அவசரமாக செல்போனை தேடினார்.


"பாஸ் சொல்லுங்க பாஸ் .. வேல முடிஞ்சிடுச்சு "


"டேய் எங்க இருக்கீங்க" . கணேஷின் குரலில் கலக்கம் மேலோங்கி இருந்தது.


"திண்டிவனத்துல எடம் சரியா அமையல. எனக்கு தெரிஞ்சு இன்னொரு எடம் இருந்துச்சு. அதான் அங்க போய் புதைச்சிட்டோம் "


"எந்த ஏரியால டா .."


"பாண்டிச்சேரில "


"பா..ண்..டி..ச்..சே..ரி.. லயா " .


கணேஷின் மனதில் திகில் பரவ ஆரம்பித்தது.


(திகில் தொடரும்.. )