Wednesday, July 1, 2009
உனக்கு மட்டும் ரகசியம் - 1
பேருக்குத்தான் அது டிடக்டிவ் ஆபீஸ் ஆனால் வருவதெல்லாம் கல்யாணத்துக்கு பையன் அல்லது பெண் பேக்ரவுண்ட் செக் பண்ற கேஸ்கள் தான். வருமானத்துக்கு அது போதும் என்றாலும் வேலையில் அவன் எதிர்பார்த்த த்ரில் இல்லாததால் தன்னை தானே அவன் நொந்து கொள்ளாத நாளில்லை.
இவனின் சோம்பலை மதிக்காமல் கடிகாரம் சுறுசுறுப்பாய் பத்து மணியை காட்டியது. கம்ப்யூட்டரில் முகம் புதைக்காத குறையாய் இருந்த சங்கரை டீக்கடை பையன் குரல் திருப்பியது.
"என்ன சார் வழக்கம் போல இன்னைக்கும் ஈயடிச்சிட்டு இருக்கீங்களா "
"வாய் ரொம்ப நீளுது உனக்கு" சங்கர் சற்று கோபமாக கூறியது அந்த டீக்கடை பையனை சற்று கூட பாதிக்காதது அவனுக்கு மனதிற்குள் சிர்ரிப்பை வரவழைத்தது .
"என்ன சார் டென்சன் ஆவுற சும்மா தமாசா தான் சொன்னேன்."
"டீ குடுதுட்டெல்ல நீ கெளம்பு. இரும்படிக்கிற எடத்துல ஈக்கென்ன வேல"
"சார் நீங்க எங்க இரும்படிசீங்க, ஈ தான் அடிக்கிறீங்க அப்ப நான் இருக்கிறது கரெக்ட் தான"
"நல்லா பேச கத்திருக்கடா சுரேசு " " எப்ப பாத்தாலும் கம்ப்யூட்டர்லயே இருக்கியே அப்படி என்ன தான் சார் பண்ணுவ நமக்கும் கொஞ்சம் சொல்லி கொடுத்த நானும் ஒரு டிடக்டிவ் ஏஜென்சி வச்சு பொழச்சுப்பேனே"
"நேரம் டா நேரம். ஒரு பெரிய கேஸ் புடிச்சு உங்க எல்லார் வாயையும் அடைக்கிறேன் பாரு" சங்கர் கூறிகொண்டிருக்கும்போதே ஒரு நமுட்டு சிரிப்புடன் சுரேஷ் காலி டம்ளருடன் வெளியேறினான்.
மீண்டும் கம்ப்யுட்டரில் மூழ்கலாம் என நினைத்த போது செல்போன் சிணுங்கியது. சங்கரின் அசிஸ்டன்ட் ராம் தான் அழைக்கிறான்.
"பாஸ் நான் அந்த மாப்பிள்ளை வெரிபிகேசன்காக வந்தேன். வேல சீக்கிரம் முடிஞ்சிடுச்சு நேரா ஆபீஸ் வந்திடவா இல்ல வேற எதாவது கேஸ் இருக்கா"
"இப்போதைக்கு ஒண்ணுமில்ல நீ ஆபீஸ்க்கு வா பாத்துக்கலாம் "
"சரி பாஸ்"
ராம். நல்ல துடிப்பான இளைஞன். எந்த வேலை என்றாலும் சலிக்காமல் செய்வான்.வேறு வேலை எதுவும் கிடைககாததால் சங்கரிடம் உதவியாளராய் சேர்ந்தான். பின்னர் சங்கரின் ஆர்வத்தை பார்த்து அவனுக்கும் இந்த துறையில் எதாவது பெரிதாய் சாதிக்க் வேண்டும் என்ற ஆர்வம் அவனை இதே பணியில் தொடர செய்தது.
மதிய நேரம் நெருங்கி கொண்டிருந்தது. சங்கரின் மனதிற்குள் ஆயிரம் எண்ணங்கள் ஓடி கொண்டிருந்தது. முக்கியமாக டீக்கடை பையனிடம் பெரிய கேஸ் புடிச்சு காட்றேன் என நடக்க சாத்தியமில்லாத சபதம் அடிக்கடி ஓடியது. இவனின் ஆரம்ப காலங்கள் கொஞ்சம் சுவாரசியம் கலந்த சோகங்கள் தான்.
டிடக்டிவ் ஏஜென்சி ஆரம்பித்த காலத்தில், தானே எல்லா கிரைம்சீனிலும் வலிய சென்று துப்பறிந்தான். போலீசுக்கு துப்புகள் கொடுத்து விசாரணைக்கு மறைமுகமாக பல உதவிகள் செய்திருந்தான். ஆனால் வெளிச்சத்துக்கு இவன் நிழல் கூட வந்ததில்லை. அப்போது நண்பரானவர் தான் இன்ஸ்பெக்டர் இளமாறன்.
பல கேஸ்களில் இவன் உதவியை நாடி பதவி உயர்வுகளை அள்ளி கொண்டவர். இப்போது ஏ.சி.பியாக பொறுப்பு வகிக்கிறார். சங்கரின் உதவிகள் அவருக்கு தொந்தரவாக தெரிய ஆரம்பித்தது அவருக்கடுத்து அவரது இடத்தில வந்த இன்ஸ்பெக்டருக்கும் அவன் உதவிய பொழுது தான்.
சங்கரையே அந்த கேஸில் சிக்க வைக்க இளமாறன் முயன்ற போது தான் சங்கர் தான் மாட்டியிருப்பது சிலந்தி வலையென உணர்ந்தான். பிரச்சனையில்லாமல் அதிலிருந்து விடுபட இனிமேல் போலீஸ் கூப்பிட்டாலலேலொழிய அவன் எந்த க்ரைம்சீனுக்கும் வரக்கூடாது என இளமாறனிடம் உறுதிமொழி எடுக்க வேண்டியிருந்தது.
டிடக்டிவ் வேலையை வெறுக்க தொடங்கிய அவனுக்கு பின்னர் தான் தெரிந்தது பல டிடக்டிவ் ஏஜென்சிக்கள் கல்யாண வெரிபிகேசனும் கம்பெனி செக்யுரிடிகள் காண்ட்ராக்டையும் நம்பி தான் இயங்கிகொண்டிருந்தது.
உணவின் மேல் வெறுப்பிருந்தாலும் பசிக்கு சாப்பிட்டுத்தானே ஆக வேண்டும். சங்கரின் நிலையும் அது தான். விருப்பப்பட்டு தொடங்கிய தொழிலை விருப்பமில்லாமல் செய்து கொண்டிருக்கிறான். அவனது அசிஸ்டன்ட் ராம் தான் வெளி வேலைகள் எல்லாம் கவனிப்பது இவன் ஆபீஸில் மட்டுமே அமர்ந்து வரும் சொற்ப வாடிக்கையாளர்களை கவனித்து கொள்வான். மற்ற நேரங்களில் கம்ப்யூட்டர் தான் அவனது உலகம். நாட்டு நடப்புகளை விட வெளிநாடுகளில் நடக்கும் வழக்குகள் விசாரணை அனைத்தையும் படித்து ஆராய்வது தான் வேலை. அந்நேரங்களில் காலத்தை மறந்து நடுநிசி வரை மூழ்கிக்கிடந்தது பலமுறை.
"பாஸ் என்ன பண்றீங்க.. மறுபடியும் கம்ப்யூட்டரா" ராம் கூவிக்கொண்டே வந்தான்.
சங்கர் நினைவலைகளிலிருந்து விடுபட்டு அவனிடம் சற்று முன் படித்த கேஸை பற்றி பேசினான்.
"ஆமாண்டா இங்க பாரு வெரி இன்டரஸ்டிங் கேஸ் ப்ளோரிடால நடந்திருக்கு. அப்பன கோவத்துல கொலை பண்ணி பசங்க ஒரு மாசம் பாடிய ப்ரீசர் பாக்ஸ்ல வச்சுருக்காணுங்க. அப்புறம் இன்சூரன்ஸ் பணம் கெடைக்கணும்னு அத ஆக்சிடண்டா மாத்த அவனுங்களே கார்ல கொண்டு போய் ஒரு மரத்துல மோதி பெட்ரோல் டேங்ல நெருப்பை கொளுத்தி விட்டு எஸ்கேப் ஆயிட்டாணுங்க. பசங்க தப்பிசோம்னு நெனைக்கும் போது போலீஸ் அவனுங்கள அரஸ்ட் பண்ணிச்சு. "
"எப்படி பாஸ். கேஸே வித்தியாசமா இருக்கே"
"அன்னைக்கு கார்ல ஆக்சிடன்ட் பண்ண போகும் போது ஒரு எடத்துல ஓவர் ஸ்பீடிங் அதுனால சிக்னல்ல கேமராவுல அந்த கார் பதிவாகிருக்கு அதுல கார்ல மூணு பேர் இருக்கிறது தெரிஞ்சிடுச்சு. தடயம் இல்லாம கொலை. ஆனா அதையும் சாமர்த்தியமா போலீஸ் கண்டு பிடிச்சுட்டாங்க "
"அது தான் என்ன தான் தடயம் இல்லாம பண்ணாலும் நம்மளையும் அறியாம தடயம் எதையாவது விட்டுடறது நடக்க கூடியது தான். பாஸ் இன்னைக்கு பேப்பர் படிச்சீங்களா? "
"எனிதிங் இன்ட்ரஸ்டிங்?"
" நம்மூர்ல ஒரு ரெட்டை கொலை. ஒரே மாதிரி ரெண்டு பேர கொன்னுருக்காங்க. கிட்டதட்ட ஒரே நேரத்துல ரெண்டு கொலையும் நடந்திருக்கு..ஆனா ரெண்டும் வேறவேற எடத்துல நடந்திருக்கு"
"வாட்.. ஷோ மீ தி பேப்பர்" சங்கரின் முகத்தில் திடீர் பிரகாசம். கொலையை பத்தி அதிகம் விபரங்கள் பேப்பரில் இல்லை. ஆனால் இந்த இரண்டு கொலையும் லிங்க் பண்ண போலீசுக்கு இரண்டு வாரங்கள் ஆயிருந்தன.வேறு எந்த தகவல்களும் இப்போது கூற முடியாதென்றும் கூறினால் கொலைகாரர்கள் உஷாராகக்கூடும் என்று செய்தி முடிக்கப்பட்டிருந்தது.
சங்கர் அதை படித்து முடிக்கவும் செல்போன் சிணுங்கவும் சரியாய் இருந்தது. அழைப்பை பார்த்தவனுக்கு குழப்பம் கலந்த ஆச்சர்ய ரேகைகள் முகமெங்கும் ஓடி படர்ந்தன. அழைத்தது ஏ.சி.பி இளமாறன்.
"ஹலோ சங்கர் எப்படி இருக்கீங்க. நான் இளமாறன் பேசறேன் "
"அதான் கைய கட்டி போட்டுட்டீங்கலே சார்"
"பழைய விஷயம் இப்ப வேண்டாம். உங்க ஹெல்ப் இப்ப அவசரமா வேணும்"
"சொல்லுங்க சார். இப்பல்லாம் நான் போலீஸ் விஷயத்துல தலையிடரதே இல்லயே "
"இந்த வாட்டி நானே உங்கள ரிக்வஸ்ட்ட் பண்றேன் பழச மனசுல வச்சிகிட்டு மாட்டேனு சொல்லிடாதீங்க"
"சரி சொல்லுங்க சார்"
"ரெண்டு வாரம் முன்னாடி நடந்த ரெட்டை கொலை பத்தி தெரியுமா"
"ம்.. இன்னைக்கு தான் பேப்பர்ல படிச்சேன் "
"அந்த இன்வெஸ்டிகேஷனுக்கு உங்க உதவி தேவைப்படுது.கொஞ்சம் என் ஆபீஸ் வரைக்கும் வர முடியுமா"
"நாளைக்கு காலைல வரேன் ஸார்" சங்கருக்கு தேவை இல்லமால் இதில் மாட்ட வேண்டுமா என்ற எண்ணங்கள் மேலோங்கி இருந்தது. அதை அவன் குரல் தெளிவாக இளமாறனுக்கு காட்டி கொடுத்திருக்கும்.
"இல்ல இது அவசரம். நீங்க உடனே வர முடியுமா?"
"சார் கொலை நடந்து ரெண்டு வாரம் ஆச்சு இப்ப தான் போலீஸ் ரெண்டு கொலையையும் லிங் பண்ணிருக்கு. நீங்க இவளோ நிதானமா விசாரணை பண்ணும்பொது என்ன மட்டும் ஏன் அவசரப்படுத்துறீங்க " சற்று கோபத்துடன் சொன்னான்.
"நீங்க இன்னும் பழச நெனச்சுகிட்டெ பேசறீங்க. இது அவசரம் தான். நேத்து நைட் இன்னொரு ரெட்டை கொலை நடந்திருச்சு"
"வாட்!!" கேட்டு கொண்டே சங்கர் வேட்டைக்கு தயாரானான்.
(தொடரும்)
Saturday, June 13, 2009
தேடுதல் வேட்டை - சிறுகதை
Wednesday, May 27, 2009
எம்மனசு புரியலையா - கவிதை
தென்னங்கீத்து கட்டி வச்சு
குளிப்பாட்டி நான் இருக்க
நீ இடுக்கு வழி பாத்தபடி
என் மனசுக்குள்ள நுழஞ்சியே
புத்தம் புது சீலையிலே
தண்ணி கொண்டு போகயிலே
குறுக்காலே நீ மறிக்க
கொடமெல்லாம் உருண்டோடும்
மனசெல்லாம் தடம் மாறும்
மொத்தமா வேணுமுன்னு
நீ கேட்ட நேரமெல்லாம்
முத்தத்தோட நான் போனேன்
இப்ப மொத்தமா வந்திருக்கேன்
எடுத்துக்கன்னு நான் சொல்ல
எடுத்துக்கிற நீ இல்ல
நடக்காத கல்யாணத்துக்கு
நூறு தேதி குறிச்சோமே
பொறக்காத பிள்ளைக்கு
பேரு நூறு வச்சோமே
திருவிழா கூட்டத்திலே
மாமா நீ என் பக்கத்திலே
புள்ளையோடு போவோமுன்னு
கனவெல்லாம் கண்டோமே
வெறும் கனவாக போச்சுதே
மனசார உன்ன நெனச்சு
வேறொருத்தன் கை பிடிச்சு
காணாம போவேன்னு
காலனோட போயிட்டியா
கட்டான காவல் ஒடச்சு
காட்டுவழி ஓடிவந்தேன்
கனவோட ஓடிவந்தேன்
இப்ப கனவெல்லாம் மண்ணாச்சே
நெனப்பெல்லாம் வீணாச்சே
என் மனசு புரியாம
தப்புன்னு தெரியாம
சடுதியிலே செத்துட்டியே
அடங்காத ஆசையோட
அழியாத காதலோட
மண்ணுக்குள்ளே கெடக்கியே
இந்த பொண்ணுகுள்ளே நீயிருக்க
இந்த பொண்ணுக்கினி யாரிருக்கா
வத்தாத காதலோட
வக்கனயா வாழ்வோமுன்னு
கதை பேசி சிரிச்ச மச்சான்
ஆவியா நீ வந்து
பாவி என்ன தேடாத
உன் பக்கத்துக்கு குழியிலே தான்
பொணமாக கெடப்பேன் நான் .
Friday, May 22, 2009
பிரிதலை புரிதல் - சிறுகதை
சந்தோஷ் அந்த பள்ளிக்கு ஆறாம் வகுப்பில் சேர்ந்திருந்தான். தந்தையின் பணி மாற்றல்களால் பல பள்ளிகளில் படிக்க நேர்ந்தாலும் பல நண்பர்களை சம்பாதித்ததில் அவனுக்கு மகிழ்ச்சியே. அப்படி தான் அவன் புதிதாக சேர்ந்த அந்த பள்ளியை நினைத்து பலவித கனவுகளோடும் எதிர்பார்ப்புகளோடும் வந்திருந்தான்
முதல்நாள் வகுப்பில் இவன் நுழையும் முன்னமே மாணவர்கள் அவர்களின் தோழர்களுக்கு அருகில் இடம் பிடித்து கதை பேச தொடங்கியிருந்தார்கள். சந்தோஷிற்கு முதல் பெஞ்சில் தான் இடம் கிடைத்தது. ஆசிரியர் வந்து அனைவரின் பெயரையும் கேட்டு பின் அவரவரை பற்றி சொல்ல சொன்னார். சந்தோஷ் எல்லோருடய பெயரையும் நோட்புக்கில் குறித்து வைத்து கொண்டான். இன்டெர்வெல்லில் வலிய போய் பேச தொடங்கினான்.
இப்படியாக ஒரே வாரத்தில் எல்லோருடனும் பேசி நண்பன் ஆனான். பள்ளி நேரம் தவிர அருகில் இருக்கும் மைதானத்தில் விளையாடியும் எல்லா மாணவர்களுக்கும்மிக நெருக்கமானான். வகுப்பில் பெண்கள் மாணவர்களிடம் அதிகம் பேசுவதை தவிர்த்து கொண்டிருந்ததும் இவன் வந்த பிறகு மாறியது. காலாண்டு தேர்வு நெருங்கி கொண்டிருந்த்தது. விளையாட்டுகளுக்கு ஒய்வு கொடுத்து விட்டு அனைவரும் படிப்பதில் தீவிரமாயினர். சந்தோஷ் முதல் முறையாக அவன் வகுப்பு மாணவர்களுக்கு குரூப் ஸ்டடியை பழக்கினான். பெரும்பாலான நேரங்களில் சந்தோஷின் வீட்டிலேயே அது நிகழ்ந்தது. அப்போது அவனின் தாயார் தரும் பலகாரங்களும், பழரசமும் மேலும் பல மாணவர்களை குரூப் ஸ்டடிக்கு ஈர்த்தது.
தேர்வு தொடங்கியது.தேர்வில் இவனிடம் பென்சில் கடன் கேட நண்பனை காபி அடித்தானென ஆசிரியர் அடிக்க போக இவன் அதை தெளிவு படுத்தி அவனை விடுவிக்க பிரயத்தனபட்டது அனைவருக்கும் பிடித்திருந்தது. விடுமுறையின் எண்ணங்கள் தேர்வுகளை வேகமாக துரத்தியது. சந்தோஷ் தன் சொந்த ஊருக்கு ஒரு வாரம் போய் வருவதாக கூறி கிளம்பினான். மற்றவர்கள் ஒரு வார விடுமுறையில் எங்கே வெளியூர் செல்வது என்று உள்ளூரிலிலேயே விளையாடி பொழுதை கழிக்க தீர்மானித்தனர்.
விடுமுறை முடிந்து மறுபடியும் பள்ளிக்கூடம் திறந்த போது எல்லோர் மனதிலும் மற்றவர் விடுமுறையை கழித்த விதம் பற்றி கேட்கும் ஆர்வம் தளும்பியிருந்தது. குறிப்பாக வெளியூர் சென்ற சந்தோஷின் கதைகளை கேட்பதில் குறியாய் இருந்தார்கள். சந்தோஷ் கொஞ்சம் தாமதமாக தான் வந்தான். இம்முறை வலிய வந்து பேசியவர்களிடம் கூட அவன் பேசவில்லை. நண்பர்களின் ஆர்வம் இப்போது குழப்பமாக மாறியிருந்தது. அதற்குள் வகுப்பாசிரியர் வந்து பாடத்தை துவங்கியதால் மேற்கொண்டு எதுவும் பேச முடியாமல் பாடத்தில் லயிக்க தொடங்கினர். மதிய உணவு இடைவேளையின் போது சந்தோஷ் நெருங்கி வந்தவர்களிடம் எரிந்து விழுந்தது எல்லோரின் குழப்பத்தையும் வெறுப்பாக மாற்றிகொண்டிருந்தது. காரணமில்லாமல் சண்டை போடும் அளவுக்கு என்ன நடந்தது. குரூப்பாக சென்று அவனிடம் கேட்க சென்றவர்களுக்கு சந்தோஷின் நடவடிக்கைகள் வியப்பு கலந்த ஆத்திரத்தை வரவைத்தன. என்ன தான் பிரச்சனை என அவனிடம் கேட்க வகுப்பில் ஒரு பெண்ணை தேர்வு செய்து கேட்டு வா என அனுப்பினர். அடி வாங்காத குறையாக அழுது கொண்டே திரும்ப வந்தாள் அவள்.
சந்தோஷின் இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் இவன் ஏன் இந்த பள்ளிக்கு வந்தான் என அந்த வகுப்பு முழுவதும் மனதுக்குள் கேள்வி கேட்டு கொண்டிருந்தது. அரையாண்டு தேர்வு வந்து கொண்டிருந்த நேரத்தில் சந்தோஷ் மொட்டை தலையோடு வந்தான். என்னடா மொட்டை என நக்கல் செய்தவனுக்கு கன்னத்தில் விழுந்தது. குரூப் ஸ்டடி செய்த கூட்டம் இப்போது சந்தோஷை எதிர்பார்க்காமல் வேறொர் இடத்தில் படித்தனர்.
தேர்வு நேரத்தில் சந்தோஷ் தன் அருகில் யாரவது அசைந்தால் கூட ஆசிரியரை கூப்பிட்டு இவன் காபி அடிக்கிறான் என கூறினான். ஆரம்பத்தில் இவன் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து அவன் கைகாட்டியவர்களை அடித்த ஆசிர்யர்கள் தினமும் இவன் அதை செய்யவே அவனை கண்டித்தனர். தேர்வு முடிவதற்குள் அங்கு அநேகமானவர்களின் எதிரியாக மாறிவிட்டிருந்தான் அவன். மறுபடியும் விடுமுறை நாட்கள். இப்போது சற்று நீளமான விடுமுறை. சந்தோஷ் இம்முறை சென்னைக்கு போவதாக செய்தி வந்தது. மற்றவர்கள் அவனை பற்றி அக்கரையின்றி விளையாட்டையும் விடுமுறையையும் எண்ணி இருந்தனர்.
நாட்கள் நகர்ந்து பள்ளிக்கூடம் தொடங்கியது. இம்முறை சந்தோஷ் ஒரு வாரம் ஆகியும் வரவில்லை. பள்ளியை விட்டு சென்றுவிட்டதாக ஆசிரியர் கூற அனைவர் முகத்திலும் ஆச்சர்யம் கலந்த ஒரு மகிழ்ச்சி.
மொட்டை தலை சந்தோஷ் சென்னை கேன்சர் இன்ஸ்டியூடுட்டில் ஒரு நர்ஸிடம் உரையாடிகொண்டிருந்தான்.
"உன் ஃப்ரெண்ட்ஸ்லாம் நீ ஸ்கூலுக்கு வரலனு தேட மாட்டாங்களா"
"தேட மாட்டாங்க.. கண்டிப்பா தேட மட்டாங்க " .
நர்ஸுக்கு அதன் அர்த்தம் புரியவில்லை. சந்தோஷின் கண்களில் நீர் வடிந்து கொண்டிருந்தது.
