Wednesday, April 7, 2010

நிலையில்லா நிதர்சனங்கள் - சிறுகதை


மதிய நேரம். ராயப்பேட்டை. மணிகூண்டு. சென்னை வெயில் சுட்டெரித்து கொண்டிருந்தது. இதில் டிராபிக் ஜாம் வேறு. வெயிலில் பேருந்தில் அமர்ந்திருப்பதே எரிச்சல் இதில் ஒரே இடத்தில பதினைந்து நிமிடமாக நிற்பது மகா எரிச்சல். பேருந்தில் ஒரு நோட்டம் விட்டால் கூட்டம்மில்லாத பேருந்தில் இருக்கும் சொற்பமானவர்களும் செல்போனில் ஐக்கியமாயிருந்தார்கள்.

வெளியில் எட்டிப்பார்த்தால் அனைவருமே கிட்டத்தட்ட என் மனநிலையிலேயே இருந்தார்கள். பேருந்துக்கு அருகில் பைக்கில் இருந்தவரிடம் என்ன பிரச்சனை என வினவிய போது தான் தெரிந்தது ஏதோ காலேஜ் பையன் பைக் ஆக்சிடென்ட். பையன் அங்கேயே இறந்துவிட்டான் என்று. மேற்கொண்டு அவரே தொடர்ந்தார்

"இந்த காலத்து பசங்க பைக் எடுத்துகிட்டு வேகமா போறதுல தான் குறியா இருக்காங்க. பொறுப்பா வண்டி ஓட்றத பத்தி எல்லாம் எங்க யோசிக்கிறாங்க. அவுங்க பெத்தவங்கள சொல்லணும். கேட்ட உடனே வண்டி வாங்கி கொடுத்துடறது. அவன் அத ஒழுங்கா ஓட்டுறானா இல்லையானு அப்புறம் கேட்டுக்றதே இல்ல" . அவர் இன்னும் தொடரும் முன் நான் ஆமாம் போட்டு விட்டு இருக்கை மாறி அமர்ந்தேன் .

பேருந்து லேசாக நகர தொடங்கியது. இறந்த உடலின் மேல் துணி போத்தி விட்டிருந்தார்கள். அதை கடந்து பேருந்து கிளம்பும் போது ராமன் கல்லூரியில் சேர்ந்த உடன் வண்டி வாங்க வேண்டுமென்று கேட்டது நினைவுக்கு வந்தது.

ராமன் என் மகன். இப்போது ஈரோட்டில் ஒரு கல்லூரியில் இரண்டாமாண்டு படித்துகொண்டு இருக்கிறான். கல்லூரியில் சேர்ந்த உடன் வெளியில் செல்ல ரொம்ப தூரம் நடக்க வேண்டியிருக்கிறது என கூறி வண்டி வேண்டுமென்று நின்றான். அவன் கேட்டு இது வரை நான் எதையும் மறுத்ததில்லை அதனால் உடனே வாங்கி கொடுத்துவிட்டேன். அந்த நிமிடத்தில் அவன் முகத்தில் இருந்த மகிழ்ச்சியில் என் மனது நிறைந்து போனது. ஒரே மகன் கேட்டதை வாங்கி குடுக்க மாட்டேன் என்று சொல்ல எந்த அப்பாவிற்கு தான் மனமிருக்கும்.

மனதில் பைக் ஆக்சிடென்ட் நிழாடிக்கொண்டே இருந்தது. வீட்டுக்கு சென்று முதல் வேலையாக ராமனுக்கு போன் செய்து கவனமாக வண்டி ஓட்ட சொல்ல வேண்டும். முக்கியமாக ஹெல்மெட் இல்லாம ஓட்ட கூடாது என்று சொல்ல வேண்டும். யோசித்து கொண்டிருக்கும் போதே கண்டக்டர் விசில் இறங்க வேண்டிய இடத்தை நினைவூட்டியது.

வீட்டிற்குள் மனைவியை கூப்பிட்டு கொண்டே நுழைந்த போது சோபாவில் இருந்த பைகள் கவனத்தை ஈர்த்தன. அவை ராமனின் பைகள்.

"என்னங்க பைய பாத்துட்டு இருக்கீங்க? " மனதின் ஓட்டத்தை மனைவியின் குரல் நிறுத்தியது.

"ராமன் வந்திருக்கானா? "

"ஆமாங்க வந்திருக்கான். ஏதோ ஹாஸ்டல் பிரச்சனைனு ஒரு வாரம் லீவ் விட்டுட்டாங்களாம்"

"இப்ப எங்க உள்ள தூங்குறானா? "

"இல்ல ஏதோ பிரெண்ட் கூட ராயபேட்டை வரைக்கும் போயிட்டு வரேன்னு போனான். உடனே வரேன்னு சொன்னான் ஆனா இன்னும் காணும் "

எனக்கு வியர்க்க தொடங்கியிருந்தது. கைகள் செல்போனை தேடியது. படபடப்பின் காரணம் அவளிடம் விளக்க திராணியில்லை. கண்முன்னே பார்த்த அந்த போத்தி வைக்க பட்டிருந்த உடல் மனதிற்குள் வலியை உண்டாகியது. குழப்பங்கள் மட்டும் விடைகளாய் வெளிப்பட்டு கொண்டிருந்தது. ஒரே மகன் வேறு. உடலை எங்கு கொண்டு சென்றிருப்பார்கள். பெரும்பாலும் ஜி. எச் தான். அடுத்து என்ன செய்ய வேண்டும். இவளிடம் இதை எப்படி சொல்வது. அவள் இதை தாங்கி கொள்வாளா.

காபியுடன் கண்முன்னே மனைவி வந்தாள். சொல்லி விட வேண்டியது தான் என நினைத்த பொது அவளே பேசினாள்.

"இதோ ராமனே வந்துட்டானே"

திரும்பி கூட பார்க்கவில்லை ஆனால் கண்களில் கண்ணீர் வழிந்தது. பேச வார்த்தை எழவில்லை.

"என்னடா சட்டையில இரத்தம்" மனைவியின் குரலில் இருந்த நடுக்கம் திரும்ப வைத்தது.

"இல்லம்மா . பிரெண்ட் ஒருத்தன் பைக் ஆக்சிடெண்ட்ல செத்துட்டான். நான் போற வரைக்கும் உயிரோட தான் இருந்தான். என் கண் முன்னாடியே உயிரை விட்டுட்டான்" ராமன் பேச முடியாமல் உடைந்தான்.

என் தோள்களில் அவனை தாங்கினேன். இருவரும் அழுது கொண்டிருந்தோம். அவன் சோகத்திலும் நான் சந்தோஷத்திலும்.

3 comments:

VISA said...

Nice narration. Apt one

நிலாமதி said...

கதையும் கற்பனையும் அருமை....நிஜங்களை விட எண்ணங்களுக்கு வேகம் மிகவும் கூட.
இந்த பாழாய் போன மனது எத்தனை வேகமாக் பயணம் செய்கிறது.

மனுநீதி said...

பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி விசா மற்றும் நிலாமதி

Post a Comment

நல்லதோ கெட்டதோ ஏதாவது சொல்லிட்டு போங்க :)