Saturday, July 17, 2010

கண் மணியே பேசு - 1


அகலமான அந்த சாலையின் இருபுறமும் வளர்ந்து நிறைந்து கிடந்தன விஸ்தாலமான பங்களாக்கள். பணம் காய்க்கும் மரங்கள் என்று சொல்லிவிடலாம் போல இருந்தன அவை. சைக்கிளில் அந்த ரோட்டில் பயணிப்பவன் ரோட்டை பார்த்து ஓட்டுவது கடினம்.

அத்தனை பங்களாக்களிலும் தனித்து தெரிவது அந்த பிரம்மாண்ட பங்களா. தொழிலதிபர் கணேஷிற்கு சொந்தமானது. ரகம் ரகமாக பத்துக்கும் மேற்பட்ட கார்கள் அணிவகுத்து நின்றன. வாசலில் முரட்டு மீசையுடன் தெருவில் போவோரை எல்லாம் மிரட்டும் தோரணையில் காவல்காரன். உள்ளே கணேஷ் பேப்பர் படித்து கொண்டிருந்தார். அவரின் அன்பு மனைவி சாவித்திரி அளவான புன்னகையுடன் காபி கொண்டு வந்துகொண்டிருந்தாள்.


"ஏம்மா நீயே எல்லா வேலையும் செஞ்சிட்டு இருக்கியே வேலைக்கு ஆள் வச்சுக்கண்ணு சொன்னாலும் கேக்க மாட்டேங்கிற "


"என்னங்க வீட்ல இருக்கிறது நாம ரெண்டு பேரு தான. இதுக்கு எதுக்கு வேலைக்காரங்க "


"என்னமோ இவளோ வசதி இருந்தும் நீ கஷ்டப்படுறத பாக்க முடியாம தான் சொன்னேன்"


"புருஷனுக்கு வேல செய்றது கஷ்டம்னு யாரு சொன்னா"


"ஏதோ நீ சந்தோஷமா இருந்தா போதும் "


"நீங்க என்ன பத்தி கவலைபடாம உங்க உடம்ப பாத்துக்கங்க. நேத்து நைட் முதுகுபிடிப்புன்னு சொன்னீங்களே. இப்ப எப்படி இருக்கு "


"இப்ப கொஞ்சம் பரவால்லம்மா "


"எதுக்கும் சாயந்திரம் டாக்டர் கிட்ட போவோம். எனக்கும் பாக்கணும் . ஒரு வாரமா நைட்ல தலைவலி அதிகமா இருக்கு "


"கண்டிப்பா போவோம் . சரியா ஆறு மணிக்கு ரெடியா இரு "


"சரிங்க" . அழுத்தமான முத்தம் வைத்து கணேஷ் அலுவலகத்துக்கு தயாராக சென்றான்.


அலுவலகத்துக்கு சென்று வழக்கமான குட் மார்னிங்களுக்கு பதில் கூறி அமர்ந்த பத்தாவது நிமிடம் தொலைபேசி அழைத்தது.


"பாஸ் நீங்க சொன்ன மாதிரியே அவள கொண்டு வந்துட்டோம்" கரகர குரலில் மறுமுனை ஒலித்துகொண்டிருந்தது.


"வெரி குட். அங்கேயே வெயிட் பண்ணுங்க இதோ கொஞ்ச நேரத்துல வந்திடுறேன்"


காற்றை கிழித்து அவசரமாக புறப்பட்ட கணேஷின் காரை முறைத்து பார்த்துக்கொண்டிருந்தன நான்கு கண்கள். கணேஷ் சத்தியமாய் அதை கவனித்திருக்கவில்லை. அவர் எண்ணம் எல்லாம் அந்த பெண் மேல் தான் இருந்தது. எப்படி இந்த பிரச்சனையை அணுகுவது, விஷயத்தை வெளியே சொல்லியிருப்பாளோ .


அந்த பெண்ணின் பெயர் நிர்மலா. கணேஷின் முன்னாள் செக்ரட்டரி. கணேஷிடம் கருப்பாக வந்த பணம் வெள்ளையாக மாற்றப்பட்டு கொண்டிருந்த அந்த இரண்டு நாட்களுக்குள் வருமானவரி அதிகாரிகளிடம் தகவல் கூறி சன்மானதிற்காக முதலாளியை விற்றவள் என்ற பெயருடன் வெளியேற்றபட்டவள். பெரிய அளவில் கணேஷ் அவளை ஏதும் செய்யவில்லை. தலைப்பு செய்திகளில் தன் பெயர் வருவதை அவர் விரும்பியதில்லை. தொலைத்த பணமும் பெரிதாக இல்லாததால் அவரும் கண்டுகொள்ளவில்லை. நிர்மலா அவரை தொடர்பு கொண்டு மிரட்டும் வரை.

கார் நிர்மலா கட்டி வைத்த இடத்தை சென்றடைந்தது. நிர்மலா மயங்கி கிடந்தாள்.


"டேய் அவள எழுப்புங்கடா " அதிகார தொனியில் கணேஷின் குரல் ஒலித்தது.


"பாஸ் ரொம்ப நேரமா முயற்சி பண்ணோம். எழுந்திருக்கல. செத்துட்டானு நினைக்கிறன் "


"அட பாவிங்களா. விஷயத்த அவ கிட்ட கேக்கணும்னு தான கொண்டு வர சொன்னேன். அதுக்குள்ள கொன்னுட்டீங்களே"


"பாஸ் பாஸ் . நாங்க கொல்லல. கொண்டு வரும் போதே செத்துட்டான்னு நெனைக்றேன். நீங்க குடுத்த அந்த மயக்க மருந்துல கர்ச்சிப்ப நனைச்சு மட்டும் தான் மூக்கில வச்சோம். வேற எதுவும் செய்யல"


"சரி உடம்ப இங்க வச்சுக்க முடியாது. உங்க வண்டில கொண்டு போய் திண்டிவனம் தாண்டி போய் எதாவது எடத்துல புதைச்சிடுங்க. நகை எல்லாம் எடுத்துகோங்க. பொணத்த கனுபிடிச்ச கூட நகைக்காக கொன்ன மாதிரி இருக்கும். எதுக்கும் கொஞ்ச நாளைக்கு வெளியூர் எங்கயாவது போய்டுங்க"


"சரி பாஸ். ஆனா பிரச்சன எதாவது வந்த எங்கள கை விட்ராதீங்க "


"நிச்சயமா மாட்டேன். நம்புங்க" . கணேஷின் உதடு மட்டும் பதில் கூறியது.


அந்த நான்கு கண்கள் அவரை பின்தொடர்ந்து அங்கு நடந்தவைகளை தூரத்தில் இருந்து பார்த்துகொண்டிருந்தன.


கணேஷ் அலுவலகம் வந்து எதுவும் நடக்காதது போல் தன் குளுகுளு அறைக்கு சென்றார். ஒரு கொலை நடந்ததற்கான அறிகுறி அவரிடம் இல்லை.


சாயந்திரம் வீட்டுக்கு சென்று மனைவியுடன் டாக்டரை பார்த்து ஆசுவாசமாய் சோபாவில் அமர்ந்தார். உடை மாற்றி காபி கொண்டு வர சாவித்திரி கிளம்பினாள். சற்று நேரத்திற்கெல்லாம் வீல் என்ற அலறல் சத்தம் அத வீட்டை உலுக்கியது.


உடை மாற்ற சென்ற மனைவியின் அலறல் கேட்டு திடுக்கிட்டு எழுந்து போன கணேஷ் அங்கு கண்ட காட்சி அவரின் தொண்டை குழியை வற்ற செய்தது. தரையில் அசைவில்லாமல் கிடந்த சாவித்ரியின் கண்கள் திறந்திருந்தன கண் மணிகள் அங்கும் இங்கும் அசைந்து கொண்டிருந்தன. தண்ணீர் கொண்டு வந்து தெளிக்க முற்படும் பொது சாவித்திரி கட்டிலில் அமர்ந்திருந்தாள்.


"ஏம்மா என்னமா ஆச்சு "


"தெரியலீங்க. இத்தனை நாள் வர தலைவலின்னு நெனச்சேன். ஆனா தலைக்குள்ள என்னென்னமோ ஒடுச்சுங்க.ஒண்ணுமே புரில "


"என்னம்மா சொல்ற"


"ஆமாங்க. யாரோ நாலு பேரு வண்டில ஒரு பொண்ண கூட்டிட்டு போய்ட்டு இருகாங்க. பொண்ணு அசைவில்லாம கெடக்குறா. வண்டி பாண்டிச்சேரினு ஒரு போர்டு தாண்டி போய் நிக்குது. அப்புறம் அவள கீழ எறக்கி ஒரு எடத்துல மண்ணு தோண்டி புதைக்றாங்க. புதைச்சிட்டு போன அஞ்சாவது நிமிஷத்துல அந்த பொண்ணு முழிப்பு வந்து அங்கேயே மூச்சு தெணறி சாவுறா. "


"இது மயக்கத்துல இருக்கும் போது நீயே எதோ நெனச்ச மாதிரி இருக்கு . ரெஸ்ட் எடு சரியாய்டும் "


"இல்லைங்க எனக்கு பயமா இருக்கு"


"காலைல பேசிக்கலாம் நீ ரெஸ்ட் எடும்மா" . சொல்லி முடிக்க கணேஷ் முழுவதுமாக வேர்த்திருந்தார். அவசரமாக செல்போனை தேடினார்.


"பாஸ் சொல்லுங்க பாஸ் .. வேல முடிஞ்சிடுச்சு "


"டேய் எங்க இருக்கீங்க" . கணேஷின் குரலில் கலக்கம் மேலோங்கி இருந்தது.


"திண்டிவனத்துல எடம் சரியா அமையல. எனக்கு தெரிஞ்சு இன்னொரு எடம் இருந்துச்சு. அதான் அங்க போய் புதைச்சிட்டோம் "


"எந்த ஏரியால டா .."


"பாண்டிச்சேரில "


"பா..ண்..டி..ச்..சே..ரி.. லயா " .


கணேஷின் மனதில் திகில் பரவ ஆரம்பித்தது.


(திகில் தொடரும்.. )



Thursday, April 29, 2010

வாக்குமூலம் - சிறுகதை


" இன்ஸ்பெக்டர்! இன்ஸ்பெக்டர்! "

"பதட்டப்படாம சொல்லுங்க. என்ன விஷயம்"

"என் பெயர் சுந்தர். என் மனைவிய ஒருத்தன் கொலை பண்ணிட்டான். இப்ப என்ன கொல்ல துரத்திட்டு வரான். நீங்க தான் என்ன காப்பாத்தணும்"

"பயப்படாதீங்க மிஸ்டர் சுந்தர். அதான் என்கிட்டே வந்துடீங்கல்ல. நடந்தத சொல்லுங்க. நான் ரிப்போர்ட் எழுதிக்கிறேன்"

"அது இன்ஸ்பெக்டர் என் மனைவி பேரு காவ்யா. சாப்டுட்டு ரெண்டு பெரும் தூங்க போனோம். திடீர்னு கதவு தட்டுற சத்தம் கேக்குதுன்னு எந்திருச்சு போனா. ரொம்ப நேரம் ஆகியும் வரல. என்னனு நான் போய் பாத்தா ரத்தவெள்ளத்துல கிடந்தா. நான் பயந்து போய் சுத்திமுத்தி பாத்தேன் அப்ப ஒரு உருவம் கத்தியோட என் பின்னாடி வந்துச்சு. நான் உடனே ஓடி வெளில வந்து நேரா இங்க தான் வரேன்"

"சுந்தர், செத்துப்போனது உங்க மனைவி தான"

"ஆமா இன்ஸ்பெக்டர்"

"உங்க முகத்த பாத்தா நீங்க அழுத மாதிரியே தெரியலையே"

"அது.. அது.. பதட்டத்துல என்ன பண்றதுனே புரியல .. அதுனால .. அதுனால... அழ தோணல "

" கரெக்ட் தான். அந்த ஷாக்ல நீங்க அழல "

"ஆமா இன்ஸ்பெக்டர் அப்படி தான் "

"உங்க டிரஸ் பாத்தா நீங்க ஓடி வந்த மாதிரி தெரிலையே. வேர்வையே இல்ல. உங்க முகமும் வேர்க்கல"

"இன்ஸ்பெக்டர் நீங்க என்ன சந்தேகப்படற மாதிரி தெரியுது. என் ட்ரெஸ்ல ரத்தம் இருந்துச்சு அதுனால நான் இந்த டிரஸ் மாத்திட்டேன்"

"நல்லாருக்கு சுந்தர். இப்ப தான் ஒரு உருவம் கத்தியோட என் பின்னாடி வந்துச்சு. நான் உடனே ஓடி வெளில வந்து நேரா இங்க தான் வரேன்னு சொன்னீங்க. ஆனா இப்ப டிரஸ் மாத்தினேனு சொல்றீங்க. "

"அது.. வந்து.. நான் என் பொண்டாட்டிய கட்டி பிடிச்சு அழுதபோது ரத்தம் என்மேல பட்டுச்சு. எங்க வெளில வரும்போது எல்லாரும் என்ன கொலைகாரனு சொல்லிடுவாங்களோனு மாத்திட்டேன்."

" நீங்க சொல்றது எல்லாமே முன்னுக்கு பின் முரணா இருக்கே சுந்தர். கவனிச்சீங்களா? "

"நீங்க இன்னும் என்ன சந்தேகப்படுறீங்கனு நினைக்கிறேன்" .

"இல்ல சுந்தர். நீங்க சொல்லுங்க "

"நானும் என் மனைவியும் என்னல்லாமோ திட்டம் போட்டுருந்தோம். ஆனா இப்படி ஆய்டுச்சு. ஆனா இன்ஸ்பெக்டர் கொலை பண்ணுனவன் கதவ உடைச்சிட்டு உள்ள வரல. அதுனால கண்டிப்பா தெரிஞ்சவனா தான் இருக்கணும்"

"உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா "

"இருக்கு. நிச்சயமா இருக்கு. காவ்யவோட காலேஜ்ல கூட படிச்ச ஒருத்தன் இருக்கான். அடிக்கடி வீட்டுக்கு வருவான். நான் பிரெண்ட்ஸ் தான அப்படின்னு கண்டுக்காம விட்டுட்டேன். ஆனா மனசுக்குள்ள உறுத்தல் இருந்துட்டே இருந்துச்சு. ஒரு நாள் காவ்யா கிட்ட நேராவே கேட்டுட்டேன். அவ ஒண்ணும் இல்லன்னு சொன்னா. அவன் வரது எனக்கு பிடிக்கலன்னு சொன்னேன்"

"இதுனால வீட்டுல சண்டை எதாவது போட்டீங்களா"

"இல்ல. காவ்யாவே உங்களுக்கு பிடிக்கலனா அவன வர வேணாம்னு சொல்லிடறேனு சொல்லிட்டா. அப்புறம் ஒரு வாரம் அவன் வரல. எனக்கு சந்தோஷமா இருந்துச்சு. ஆனா ஒரு நாள் மத்தியானம் வீட்டுக்கு வந்து பாத்தா அவன் கூட பேசிட்டு இருந்தா. எனக்கு கோபம் வந்துச்சு ஆனா எதுவும் பேசாம நான் உள்ள போகாம வந்துட்டேன். நான் இவளோ சொல்லியும் என்ன மதிக்காம அவன் கூட பேசிட்டு இருந்தான்னு உள்ளுக்குள்ள அடக்க முடியாத கோபம் வந்துச்சு"

"இது என்னைக்கு நடந்துச்சு சுந்தர் "

"இன்னிக்கு தான். என்ன மதிக்காதவ இனி உயிரோட இருக்கா கூடாதுன்னு முடிவு பண்ணுனேன். அதுனால கத்திய எடுத்து குத்தி கொன்னுட்டேன்"

"அப்ப கொலையா நீங்க தான் செஞ்சீங்கனு ஒத்துக்கறீங்களா"

"இல்ல இல்ல. நான் பண்ணல. அவள கொன்னது அவளோட காலேஜ் பிரெண்ட்ணு சொல்லிட்டு வந்தவன் தான்"

"அது தான் நடந்துச்சா இல்ல அப்படி நடந்ததா நான் நம்பணுமா"

"இன்ஸ்பெக்டர்........ எனக்கு ஒரே குழப்பமா இருக்கு இன்ஸ்பெக்டர். கொஞ்சம் தண்ணி கெடைக்குமா"

"இதோ கொண்டு வர சொல்றேன்"

"இன்ஸ்பெக்டர்.. நீங்க ஏன் வெள்ளை கோட் போட்டுருக்கீங்க?" . சுந்தரின் கேள்வியில் பதில் இருந்தது.

Tuesday, April 13, 2010

பள்ளிக்கூட பயணங்கள் - சிறுகதை

"அம்மா சீக்கிரம்மா பள்ளியோடத்துக்கு நேரம் ஆச்சு. அங்க பாரு பக்கத்துக்கு வீட்டு ராமு எனக்காக ரொம்ப நேரமா காத்துட்டு இருக்கான். " செல்வத்தின் குரலில் பசியை விட அவசரம் மேலோங்கி இருந்தது.

"இருப்பா ராசா இதோ ரெண்டு நிமிஷம்"

"அம்மா இன்னிக்கு ஒரு நாள் சாப்பிடாம போறேன்மா. ராமு ரொம்ப நேரமா நிக்கிறான்மா . பள்ளியோடதுக்கு வேற நேரமாச்சு"

"இதோ ஆச்சு பாரு. அவனையும் கூப்பிடு ரெண்டு பேரும் சேந்து சாப்டுட்டு கெளம்புங்க"

"ஏலே ராமு வாடா. சாப்டு கெளம்புவோம். அம்புட்டு தூரம் நடக்க தெம்பு வேணும்ல"

பத்து நிமிடத்தில் சாப்பிட்டு விட்டு இருவரும் நடக்க தொடங்கியிருந்தார்கள். தினமும் இருவரும் ஒன்றாக சென்றுகொண்டிருந்தாலும் ஒவ்வொரு நாளும் பேசுவதற்கு புதிதாக ஏதாவது கிடைத்து கொண்டே இருக்கும்.

"டேய் செல்வம் என்னடா கை எல்லாம் காச்சு கெடக்கு"

"பை ரொம்ப கணம்டா. பிடி கைல அறுத்து அறுத்து கை காச்சு போயிடுச்சு"

"நீயும் என்ன மாதிரி முதுகுல மாட்ற பை வச்சுக்கிட்டா வசதியா இருக்கும்ல "

"அது சரி. இவளவையும் அந்த பைல வைக்க முடியுமா"

"சரி விடு.ஒரு பைய எங்கிட்ட குடு நான் செத்த தூரம் தூக்கிட்டு வரேன்"

"பரவால்லடா. நானே தூக்கறேன். அப்புறம் உன் கை காச்சு போன உங்க ஆத்தா என்ன வையும்"

"அதுவும் சரி தான். அப்புறம் கேக்கணும்னு நெனச்சேன். நாளைக்கு என்ன உங்க வீட்ல விசேசமா. உங்க ஆத்தா ரவைக்கு சாப்பிட
வர சொன்னுச்சு "

"அதாடா ராமு. என் அப்பன் செத்து ஒரு வருஷம் ஆச்சாம் அதுக்கு எதோ பலகாரம் எல்லாம் செய்வாங்களாம். அதுக்கு வர சொல்லிருக்கும்"

"அப்படியா. கேட்டதுமே எச்சி ஊருது டா. நீ பள்ளியோடத்துக்கு கொண்டு வருவியே முறுக்கு, அதிரசம் எல்லாம். அது மாதிரி செஞ்சு குடுன்னு என் ஆத்தா கிட்ட கேட்டேன்டா , செஞ்சே தர மாட்டேங்குறாங்க. நீ கொண்டு வர பலகாரம் எல்லாம் அவளவு ருசிடா. தெனமும் அத வீட்ல சாப்ட நீ குடுத்து வச்சுருக்கணும்டா "

"அட போடா. நான் எங்க தெனமும் சாப்டறேன். நீ நாளைக்கு வா எல்லா பலகாரமும் இருக்கும். வயறு முட்ட சாப்டலாம்"

" சரிடா. இதோ பள்ளியோடம் வந்திடுச்சு பாரு. சாயந்திரம் இங்கயே இருடா நான் வந்திர்றேன்"

"சரிடா ராமு. நான் என் வேலைய பாக்றேன். முறுக்கு முறுக்கே! முறுக்கு முறுக்கே! முறுக்கு முறுக்கே"

Wednesday, April 7, 2010

நிலையில்லா நிதர்சனங்கள் - சிறுகதை


மதிய நேரம். ராயப்பேட்டை. மணிகூண்டு. சென்னை வெயில் சுட்டெரித்து கொண்டிருந்தது. இதில் டிராபிக் ஜாம் வேறு. வெயிலில் பேருந்தில் அமர்ந்திருப்பதே எரிச்சல் இதில் ஒரே இடத்தில பதினைந்து நிமிடமாக நிற்பது மகா எரிச்சல். பேருந்தில் ஒரு நோட்டம் விட்டால் கூட்டம்மில்லாத பேருந்தில் இருக்கும் சொற்பமானவர்களும் செல்போனில் ஐக்கியமாயிருந்தார்கள்.

வெளியில் எட்டிப்பார்த்தால் அனைவருமே கிட்டத்தட்ட என் மனநிலையிலேயே இருந்தார்கள். பேருந்துக்கு அருகில் பைக்கில் இருந்தவரிடம் என்ன பிரச்சனை என வினவிய போது தான் தெரிந்தது ஏதோ காலேஜ் பையன் பைக் ஆக்சிடென்ட். பையன் அங்கேயே இறந்துவிட்டான் என்று. மேற்கொண்டு அவரே தொடர்ந்தார்

"இந்த காலத்து பசங்க பைக் எடுத்துகிட்டு வேகமா போறதுல தான் குறியா இருக்காங்க. பொறுப்பா வண்டி ஓட்றத பத்தி எல்லாம் எங்க யோசிக்கிறாங்க. அவுங்க பெத்தவங்கள சொல்லணும். கேட்ட உடனே வண்டி வாங்கி கொடுத்துடறது. அவன் அத ஒழுங்கா ஓட்டுறானா இல்லையானு அப்புறம் கேட்டுக்றதே இல்ல" . அவர் இன்னும் தொடரும் முன் நான் ஆமாம் போட்டு விட்டு இருக்கை மாறி அமர்ந்தேன் .

பேருந்து லேசாக நகர தொடங்கியது. இறந்த உடலின் மேல் துணி போத்தி விட்டிருந்தார்கள். அதை கடந்து பேருந்து கிளம்பும் போது ராமன் கல்லூரியில் சேர்ந்த உடன் வண்டி வாங்க வேண்டுமென்று கேட்டது நினைவுக்கு வந்தது.

ராமன் என் மகன். இப்போது ஈரோட்டில் ஒரு கல்லூரியில் இரண்டாமாண்டு படித்துகொண்டு இருக்கிறான். கல்லூரியில் சேர்ந்த உடன் வெளியில் செல்ல ரொம்ப தூரம் நடக்க வேண்டியிருக்கிறது என கூறி வண்டி வேண்டுமென்று நின்றான். அவன் கேட்டு இது வரை நான் எதையும் மறுத்ததில்லை அதனால் உடனே வாங்கி கொடுத்துவிட்டேன். அந்த நிமிடத்தில் அவன் முகத்தில் இருந்த மகிழ்ச்சியில் என் மனது நிறைந்து போனது. ஒரே மகன் கேட்டதை வாங்கி குடுக்க மாட்டேன் என்று சொல்ல எந்த அப்பாவிற்கு தான் மனமிருக்கும்.

மனதில் பைக் ஆக்சிடென்ட் நிழாடிக்கொண்டே இருந்தது. வீட்டுக்கு சென்று முதல் வேலையாக ராமனுக்கு போன் செய்து கவனமாக வண்டி ஓட்ட சொல்ல வேண்டும். முக்கியமாக ஹெல்மெட் இல்லாம ஓட்ட கூடாது என்று சொல்ல வேண்டும். யோசித்து கொண்டிருக்கும் போதே கண்டக்டர் விசில் இறங்க வேண்டிய இடத்தை நினைவூட்டியது.

வீட்டிற்குள் மனைவியை கூப்பிட்டு கொண்டே நுழைந்த போது சோபாவில் இருந்த பைகள் கவனத்தை ஈர்த்தன. அவை ராமனின் பைகள்.

"என்னங்க பைய பாத்துட்டு இருக்கீங்க? " மனதின் ஓட்டத்தை மனைவியின் குரல் நிறுத்தியது.

"ராமன் வந்திருக்கானா? "

"ஆமாங்க வந்திருக்கான். ஏதோ ஹாஸ்டல் பிரச்சனைனு ஒரு வாரம் லீவ் விட்டுட்டாங்களாம்"

"இப்ப எங்க உள்ள தூங்குறானா? "

"இல்ல ஏதோ பிரெண்ட் கூட ராயபேட்டை வரைக்கும் போயிட்டு வரேன்னு போனான். உடனே வரேன்னு சொன்னான் ஆனா இன்னும் காணும் "

எனக்கு வியர்க்க தொடங்கியிருந்தது. கைகள் செல்போனை தேடியது. படபடப்பின் காரணம் அவளிடம் விளக்க திராணியில்லை. கண்முன்னே பார்த்த அந்த போத்தி வைக்க பட்டிருந்த உடல் மனதிற்குள் வலியை உண்டாகியது. குழப்பங்கள் மட்டும் விடைகளாய் வெளிப்பட்டு கொண்டிருந்தது. ஒரே மகன் வேறு. உடலை எங்கு கொண்டு சென்றிருப்பார்கள். பெரும்பாலும் ஜி. எச் தான். அடுத்து என்ன செய்ய வேண்டும். இவளிடம் இதை எப்படி சொல்வது. அவள் இதை தாங்கி கொள்வாளா.

காபியுடன் கண்முன்னே மனைவி வந்தாள். சொல்லி விட வேண்டியது தான் என நினைத்த பொது அவளே பேசினாள்.

"இதோ ராமனே வந்துட்டானே"

திரும்பி கூட பார்க்கவில்லை ஆனால் கண்களில் கண்ணீர் வழிந்தது. பேச வார்த்தை எழவில்லை.

"என்னடா சட்டையில இரத்தம்" மனைவியின் குரலில் இருந்த நடுக்கம் திரும்ப வைத்தது.

"இல்லம்மா . பிரெண்ட் ஒருத்தன் பைக் ஆக்சிடெண்ட்ல செத்துட்டான். நான் போற வரைக்கும் உயிரோட தான் இருந்தான். என் கண் முன்னாடியே உயிரை விட்டுட்டான்" ராமன் பேச முடியாமல் உடைந்தான்.

என் தோள்களில் அவனை தாங்கினேன். இருவரும் அழுது கொண்டிருந்தோம். அவன் சோகத்திலும் நான் சந்தோஷத்திலும்.