Saturday, October 16, 2010

இரப்பு - சிறுகதை


தினமும் கடந்து போகும் அந்த சாலையில் அன்று மட்டும் புதிதாக ஒரு பிச்சைகாரர் முளைத்திருந்தார். அங்கிருந்த பிச்சைகாரர்களில் பத்தோடு பதினொன்றாக இருந்தாலும் அவர்களை விட இவர் சற்றே மாறுபட்டிருந்தார். கண்களில் இந்த நிலைக்கு தான் வந்துவிட்டோமே என்ற வருத்தம் நிறைந்து இருந்தது. ஆனாலும் அங்கிருந்த மற்ற பிச்சைகாரர்களின் செயல்களை நேரிடையாக பார்த்ததால் இவரின் மேல் உடனடியாக பரிதாபம் வந்துவிடவில்லை.


மற்ற பிச்சைகாரர்களை பற்றி முதலில் பாப்போம். அந்த சாலையில் வழியே நான் அடிக்கடி போவதுண்டு. அப்படி ஒரு நாள் அந்த வழியே போகும் போது தான் முதல் முறை அதை கண்டேன். அருகில் இருந்த ஒரு சந்தில் கஞ்சா புகைத்து கொண்டிருந்தனர் அதில் சிலர். மற்றொரு நாளை காலையில் டாஸ்மாக் திறக்க அங்கு காத்திருந்தனர். பசிக்கு பிச்சை எடுப்பதே தவறென நினைப்பவன் நான். இதில் தன் சுகத்திற்காக பிச்சை எடுக்கும் இந்த இழிவு மனிதர்களை பார்த்த மாத்திரத்தில் முடிவெடுத்தேன் இனி எக்காரணம் கொண்டும் யாருக்கும் பிச்சை போட கூடாதென.


அந்த அந்த புதியவரை கண்ட போது அவர் என்னை நோக்கி கை ஏந்தி பிச்சை கேட்டார். ஆயிரம் பேர் அவரை கடந்து சென்று கொண்டிருந்தாலும் அவர் நான் பார்க்கையில் முதல் முறையாய் என்னிடம் தான் கை ஏந்தினார். நான் அவரை பார்த்ததை அவர் நான் உதவ போகிறேன் என்று புரிந்திருக்க வேண்டும். ஆனால் மற்றவர்களை போல் நானும் முகத்தை மறுபக்கம் பார்த்து கொண்டு கடந்த போது அவர் முகம் சுருங்கியிருக்க வேண்டும்.


அன்றைய அலுவலக பொழுது மிக மெதுவாக நகர நினைவெல்லாம் அந்த பிச்சைகாரர் மேல் தான் இருந்தது. வெளியூரில் இருந்து வந்து பணமில்லாமல் பிச்சை எடுக்க துணிந்திருப்பாரோ இல்லை பிள்ளைகள் ஒதுக்கி வைத்து வேறு வழி இல்லாமல் வந்திருப்பாரோ. ச்சே ஒரு ரெண்டு ருபாய் கொடுத்திருக்கலாமோ? இப்படி மனவருத்தம் ஏற்பட்டிருக்காதே. மற்ற பிச்சைகாரர்கள் ஏதோ தொழில் செய்வதை போல அங்கு அமர்ந்திருக்க இவர் மட்டும் உடல் கூசி கூனி அமர்ந்திருந்தது மனதை பிசைந்தது. மற்றவர்களின் குரலில் இருந்த சோகம் முகத்தில் இல்லை. இவரிடமோ முகத்தில் இருந்த சோகம் குரலில் இல்லை.

சாயந்திரம் கண்டிப்பாக அவரிடம் ஒரு பத்து ருபாய் குடுக்க வேண்டும். முடிவு எடுத்ததே மனதிற்கு ஆறுதலாக இருந்தது.

அந்த ஆறுதல் நாளை வேகமாக ஓடியது. என்றுமில்லாத ஒரு விதமான புதிய மனநிலையில் இருந்தேன். அது வருத்தமா இல்ல சந்தோஷமா என்று சொல்ல தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக உதவிக்காக ஏங்கும் ஒரு பிச்சைகாரனின் தட்டில் விழும் பத்து ரூபாய்க்கு அவன் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சியில்லை. அதற்கு ஈடான ஒரு உணர்வு கையில் பணமிருக்கும் போது தோன்றது போலும்.

அவசரமாக அந்த பிச்சைகாரர்களை கடந்த அந்த பெரியவரை நெருங்கும் போது அவர் உறங்கி கொண்டிருந்தார். நின்று எழுப்பி காசு போட தோன்றவில்லை. அங்கு நடந்து பொய் கொண்டிருக்கும் அனைவரும் நான் அவரை எழுப்பி காசு கொடுப்பதை பார்ப்பார்கள் என தோன்றியது. அந்த பத்து பிச்சைகாரர்களை விட்டு அவருக்கு மட்டும் தேடி பிடித்து பிச்சை போடுவதை மற்ற பிச்சைகாரர்கள் எப்படி எடுத்து கொள்வார்கள். மன குழப்பத்தோடு நிற்காமலே சிந்தித்து கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். காலையில் கண்டிப்பாக அவருக்கு காசு போட வேண்டும். உறங்கி கொண்டிருந்தாலும் எழுப்பியாவது போட வேண்டும். முடிவெடுத்தேன்.

இரவு அன்று மட்டும் கழிவேணா என முரண்டு பிடித்தது. எப்போது உறங்கினேன் என தெரியாது ஆனால் விடிந்த உடன் மறக்க வாய்ப்பில்லாமல் முதலில் தோன்றியது அவருக்கு போட வேண்டிய அந்த பத்து ரூபாய் தான். மெதுவாக சாலையை அடைந்தேன். பத்து ருபாய் தாளை மேல் பையில் எடுத்து வைத்தேன். நிச்சயம் அவர் நான் பத்து ருபாய் கொடுத்தவுடன் வாழ்த்துவார். இன்றைய நாள் ஒரு நல்ல காரியத்துடன் துவங்க போகிறது. மனது பெருமிதப்பட்டது.

ஆனால். காணவில்லை. அந்த பெரியவரை காணவில்லை. அவசரமாக பக்கத்தில் இருந்த பிச்சைகாரரை விசாரித்தேன். அவரின் பதில் அத்தனை சப்தத்தையும் மௌனமாகியது அத்தனை கூட்டத்திலும் என்னை தனிமையாக்கியது .

"அவரா தம்பி. நேத்து முழுக்க இங்க இருந்தாரு. கெஞ்சி கேட்டாலே பிச்சை கெடைக்க மாட்டேங்குது. அவரு கேக்றதுக்கு யோசிச்சிட்டு இருந்தா எங்க பிச்சை விழும். பசியோடவே படுத்தாரு. நாங்க குடுத்தாலும் வாங்கிக்காம அழுதிட்டே கெடந்தாரு. அப்புறம் ரவைக்கு உசிரு போய்டுச்சு. போலீஸ் வந்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய்ட்டாங்க. கொஞ்சம் சாப்பிடிருந்தா உசிராவது தங்கியிருக்கும் "

Sunday, September 5, 2010

கண் மணியே பேசு - 7 ( நிறைவு பகுதி)

"என்னது சாவித்திரியா? "

"யெஸ் மிஸ்டர் கணேஷ். அன்னைக்கு உங்க கூட பாத்தேனே அந்த ஆளுங்க கிட்ட விசாரிச்சதுல எல்லா உண்மையும் தெரிய வந்துச்சு "

"வாட் நான்சென்ஸ் மிஸ்டர் இளமாறன்"

"நடந்தத நான் சொல்றேன். நிர்மலாவ மயக்க நீங்க கொண்டு போன கர்சீப்ல க்ளோரோபார்ம்கு பதிலா விஷத்த கலந்தது, அப்புறம் பிணத்த பாண்டிசேரி கொண்டு போனது எல்லாம் உங்க மனைவி சாவித்திரியோட வேலை "

"வாட். என் சாவித்திரியா "

"யெஸ். அரெஸ்ட் பண்ணி விசாரிக்க இப்ப இருக்க சாட்சியங்கள் போதுமானதாக இருக்கு ஆனா இன்னும் நிர்மலாவோட பிணத்த கண்டுபிடிக்க முடில. அது இருந்த இடத்துல இருந்து நம்ம அங்க வரதுக்கு கொஞ்சம் முன்னாடி யாரோ தோண்டி எடுத்துட்டு போயிருக்காங்க "

சாவித்திரி அதற்கு மேல் பொறுக்க முடியாமல் பொங்கினாள்.

"ஏங்க நான் அப்பாவி . இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. நீங்க சொல்ற அடியாட்கள நான் பாத்தது கூட கெடையாது. ஏங்க நீங்க சொல்லுங்க" கணேஷை ஏறிட்டாள் சாவித்திரி. கணேஷ் அவளை நம்புவதாக தெரியவில்லை .

இளமாறன் தொடர்ந்தார். "மேடம் உங்களுக்கு எதிரா எல்லா விட்னசும் ஸ்ட்ராங்கா இருக்கு. நீங்க விசாரணைக்கு ஒத்துழைச்சு தான் ஆகணும் "

அதற்கு மேல் முரண்டு பிடிக்க சாவித்திரி விரும்பவில்லை. "நான் வரேன் ஆனா என் வக்கீலும் என்னோட வருவார்"

வரலாம் என தலையசைத்த இளமாறனை இருவரும் பின் தொடர்ந்து சென்றனர்.

கணேஷ் நடந்தவைகளில் இருந்து விலகி சுதாரிக்கும் முன் செல்போன் ஒலித்தது .

"மிஸ்டர் கணேஷ் நாங்க அந்த பிணத்த அப்புறபடுத்திட்டோம். மேற்கொண்டு பேச வேண்டியது பேசலாமா"

"பிணத்த என்ன பண்ணீங்க? "

"ஒரு டுப்ளிகேட் டெத் சர்டிபிகேட் ரெடி பண்ணி ஊருக்கு வெளிய இருக்க ஒரு எலெக்ட்ரிக் சுடுகாட்ல எரிச்சிடோம். கண்டு பிடிக்க வாய்ப்பே இல்ல"

"பென்டாஸ்டிக் "

"நாங்க இப்ப உங்கள சந்திக்கணுமே "

"மேற்கொண்டு என்ன பேசணும்"

"உங்களுக்கு தெரியாது. உங்க மனைவி எங்க கிட்ட பேசிருக்காங்க. உங்கள பாலோ பண்ணி உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராம இருந்தா பத்து லட்சம் தரதா சொன்னாங்க "

"வாட் "

"ஆமா. நீங்க எதோ பிரச்சனைல மாட்டிருக்கதா அவுங்களுக்கு தோணுச்சு. நாங்க உங்களுக்கு தெரியாம உங்கள பின் தொடர்ந்த போது தான் எல்லாம் தெரிஞ்சது"

கணேஷிற்கு தலை சுற்றியது. சாவித்திரி எத்தனை நல்லவளாக இருந்திருக்கிறாள். சாவித்திரியின் நினைவுகள் கணேஷை மேலும் சோகமாக்கி சில மணிகளை உள் வாங்கியது .

"ஏங்க! ஏங்க! . " சாவித்திரியின் குரல் கனவுகளில் ரீங்காரமிட்டு கொண்டே நிஜத்திலும் ஒலித்தது.

ஆயிரம் மின்மினி பூச்சிகள் ஒருசேர கும்மிரிட்டில் வெளிவந்தது போன்ற பிரகாசம் கலந்த ஆச்சர்யம் கணேஷின் முகத்தில் .

"ஏம்மா வந்திட்டியா .. நான் பயந்தே போய்ட்டேன்"

"ஒண்ணும் பிரச்சன இல்லைங்க . அந்த அடியாளுங்க யாரோ ஒரு பொண்ணு என் பேர சொல்லி பேசுனதா சொல்லிருகாங்க. இந்த இளமாறன் என்ன விசாரிச்சு கேள்வி கேட்ட உண்மை தெரிஞ்சிடும்னு
நினைச்சாரு . நல்ல வேல வக்கீல் ராமநாதன் இருந்தது நால பிரச்சன இல்லாம முடிஞ்சது "

"அப்ப அந்த அடியாளுங்க "

"இனி அவுங்க என்ன சொன்னாலும் எடுபடாது. பிணம் கெடைக்ற வரைக்கும் அவனுங்க கொலை பண்ணத ஒத்துக்க போறது இல்ல. பிணமும் கிடைக்க போறது இல்ல" சாவித்திரி சிரித்தாள்.

"அப்ப வக்கீல் வந்தது, நீ பேய் வந்த மாதிரி கிடந்தது எல்லாம் "

"மன்னிக்கணும் கணேஷ் . நடந்தது எல்லாம் உங்க நல்லதுக்கு தான். உங்க செல்போன் உரையாடல்களை நான் ஒட்டுகேட்டேன். நீங்க பெரிய பிரச்சனைல மாட்ட போறத உணர்ந்தேன். அதோட விளைவு தான் அந்த பேய் நாடகமும் சரியான நேரத்துல வக்கீல் வந்ததற்கான காரணமும்"

"சத்தியமா எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீ தான் என் பொண்டாட்டி" கணேஷ் மனமார்ந்து கூறினான்.

எரியூட்டப்பட்ட நிர்மலாவுடன் சேர்த்து இரண்டு உயிர்களுக்கும் கணேஷும் சாவித்திரியும் இரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

அந்த வீட்டின் ஏதோ ஒரு மூலையில் க்ளோரோபார்ம் பாட்டிலில் விஷமும் , கணேஷின் கல்லூரியின் பல குரல்களில் பேசி வென்ற சான்றிதழ்களும் அமைதியாய் இருந்தன.

(முற்றும்)

கதையின் முடிவின் குழப்பங்களுக்கு விடை:

சாவித்திரியின் பார்வையில்
---------------------------------------------------------------
கணேஷ் நிர்மலா தொடர்பு மறைமுகமாக கதையில் உள்ளது. சாவித்திரி அதை அறிந்து நிர்மலாவை கணேஷ் மூலமாகவே கொலை செய்து அவரை அவளிடம் இருந்து பிரித்தாள். கணேஷிற்கு தன் மீது மனபூர்வமான நம்பிக்கை வர வேண்டுமென்று அந்த கொலை பழியில் இருந்து அவரை விடுவிக்க முயற்சி எடுத்தாள். அது அவரே உணர்ந்து தன்னிடம் திரும்பி வருமாறு செய்தாள்

கணேஷின் பார்வையில்
------------------------------------------
கணேஷ் தன் அடியாட்களுக்கு பெண் குரலில் பேசி அது சாவித்திரி தான் என்ற சந்தேகத்தை அவர்களுக்கும், பின் போலீசிற்கும் ஏற்பட செய்தார். தான் இதில் இருந்து தப்பிக்க சாவித்திரியை காட்டிகுடுக்க தயங்காத கணேஷ் , சாவித்திரியின் தேர்ந்த திட்டத்தால் தன் திட்டம் தோற்று சாவித்திரியிடம் தஞ்சமடைந்தார்.

பி. கு : கதையில் பல விஷயங்களை நேரடியாக சொல்லாமல் விட்டதால் சற்று குழப்பமாகிவிட்டது. மன்னிக்கவும். படிப்பவர்களும் எழுதுபவர்களும் ஒரே மனநிலையில் இருப்பதில்லை என்ற என் தவறை இந்த கதை உணர்த்தியது. அடுத்த கதைகளில் தவறுகளை தவிர்க்க முயல்கிறேன். நன்றி.

Saturday, August 28, 2010

கண் மணியே பேசு - 6


சாவித்திரி ஒரு வித குழப்பத்துடன் காத்திருந்தாள் .

ஆனால் அந்த குழப்பத்தில் ஒரு தெளிவு இருந்தது .

கணேஷை எதிர்பார்த்து காத்துக்கொண்டே இருந்தாள். அவளின் எதிர்பார்ப்பை வீணாக்காமல் கணேஷ் வந்து சேர்ந்தார்.

"என்னங்க ரொம்ப சோர்வா இருக்கீங்க. எதாவது பிரச்சனையா? "

"இல்ல அந்த சரக்கு கொண்டு போன லாரி சம்பந்தமா தான் பேசிட்டு இருந்தேன் "

"ஆமா மறந்துட்டேன். அந்த பிரச்சனை எல்லாம் சுமுகமா முடிஞ்சுதா ? "

"அது எல்லாம் ஓவர். ஆமா அந்த தலைசுத்தி கண் மணி உருட்டி மறுபடி கனவு எதாவது வந்துச்சா "

"இல்லங்க. அதுக்கப்புறம் எதுவும் வரல"

"நல்லது. சரி நீ சாப்பிட எதாவது எடுத்து வைம்மா "

"நீங்க டைனிங் டேபிளுக்கு வாங்க. நான் எல்லாத்தையும் எடுத்து ரெடியா தான் வச்சுருக்கேன்"

கணேஷ் முகம் கழுவி டைனிங் டேபிள் வந்தபோது உணவுடன் சொத்து பத்திரங்கள் அவரை வரவேற்றன .

"சாவித்திரி.. இது என்ன பத்திரம் எல்லாம் இங்க இருக்கு "

"என்னங்க மறந்துட்டீங்களா.. நீங்க தான இத எல்லாம் எடுத்து வைக்க சொன்னீங்க நான் எதுக்குனு கேட்டாலும்
நீங்க சரியா பதில் சொல்லல"

"வாட். நான் ரெடி பண்ண சொன்னேனா? "

"ஆமாங்க. வக்கீல் ராமநாதன கூட வர சொன்னீங்களே "

"என்னம்மா குழப்புற "

குழம்பிய நிலையில் ராமநாதனை தொடர்பு கொண்ட போது அங்கு தான் வந்து கொண்டிருப்பதாக கூறி துண்டித்தார். துண்டித்து கணேஷின் நிலையை மேலும் குழப்பமாக்கினார்.

கணேஷுக்கு இது துளி கூட விளங்கவில்லை. சொத்து சம்பந்தமாக கடந்த இரண்டு நாட்களில் பேசியதாக நினைவில்லை. ஆனால் அன்று காலை அலுவலகத்தின் ரகசிய அறையில் நடந்தது மட்டும் உண்மை என புரிந்தது . அவர்களை மீண்டும் சந்தித்தால் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்று தெரிந்தது.

"மிஸ்டர் கணேஷ் நிர்மலா செத்தது உங்க விஷத்துனால தான்னு எங்களுக்கு தெரியும் "

"சத்தியமா நான் க்ளோரோபார்ம் தான் குடுத்தேன். அவ அதுல சாக சான்ஸ் இல்ல"

"நீங்க யூஸ் பண்ணது க்ளோரோபார்ம் பாட்டில் தான். ஆனா அதுக்குள்ள இருந்தது க்ளோரோபார்ம்னு உங்களுக்கு நிச்சயமா தெரியுமா"

"அது .. வந்து.. "

"மிஸ்டர் கணேஷ் நீங்க ஒண்ணு புரிஞ்சுகோங்க. நீங்க எங்கள கண்டு பயப்பட வேண்டிய அவசியம் இல்ல. உண்மையா சொல்ல போனா உங்கள பெரிய ஆபத்துல இருந்து காப்பாத்த தான் இங்க வந்தோம்"

"என்ன ஆபத்து . அப்புறம் என்னை காப்பாத்துறதுல உங்களுக்கு என்ன லாபம்"

"லாபம் இருக்கு, ஆனா அது என்ன. நாங்க யாருன்னு கேக்காதீங்க. இந்த நேரத்துல அத நீங்க தெரிஞ்சுகறது உங்களுக்கும் நல்லது இல்ல எங்களுக்கும் நல்லது இல்ல"

"சரி. எனக்கு தெரிஞ்சதெல்லாம் இது தான். நிர்மலாவ மிரட்டி இன்னும் எங்களுக்கு எதிரா எதாவது ஆதாரம் இருந்தா வாங்க தான் வர சொன்னேன் . ஆனா விஷயம் கை மீறி போய்டுச்சு "

"இல்ல கணேஷ்.. கை மீறி போல. கை மீறி போக வைக்கப்பட்டிருக்கு. உங்களுக்கு எதிரா ஒரு கூட்டம் செயல்பட்டுட்டு இருக்கு. அத பத்தி நாங்க விலாவரியா அப்புறம் சொல்றேன். நீங்க ஒடனே வீட்டுக்கு போங்க"

"ஏன் .. எதுக்கு . அப்ப இந்த பிணம் "

"அத நாங்க பாத்துக்றோம். உங்கள காப்பாத்த பாண்டிச்சேரில இருந்து இத கொண்டு வந்தோம் , இங்க இருந்து அப்புறபடுத்துறதா கஷ்டம். நீங்க உடனே வீட்டுக்கு போங்க. அங்க நடக்க போற விஷயங்கள் உங்களுக்கு கொஞ்சம் தெளிவ ஏற்படுத்தும் "

அவர்கள் கூறியது கணேஷ் மனதில் ஓடி கொண்டிருந்தது. அந்த காலிங் பெல் ஓசை அந்நினைவை கலைக்கும் வரை.

"என்னங்க வக்கீல் வந்துட்டாரு போல"

"சரி இரு நான் போய் பாக்றேன் "

கதவை திறந்த கணேஷ் இளமாறனை கண்டு திகைத்தார் .

"இது யாரு? அதோ கேட் பக்கத்துல வக்கீல் வந்துட்டார் பாருங்க" இளமாறனை கண்டு திகைத்த சாவித்திரி வக்கீல் ராமநாதனை கண்டதும் சாந்தமடைந்தாள் .

"ஹலோ.. மிஸ்டர் கணேஷ். எப்படி இருக்கீங்க.. போலீஸ் இங்க என்ன பண்றாங்க" இரு கேள்விகளை கேட்டு கணேஷை பார்த்த ராமநாதனை சாவித்திரி வரவேற்று உள்ளே கொண்டு போனாள் .

கணேஷ் ஏற்கனவே இருந்த குழப்பத்தில் ராமநாதன் சாவித்திரியிடம் ஒரு வித அன்னியோன்யம் இருப்பதை கவனிக்கவில்லை.

இளமாறன் நடந்தவைகளை உள்வாங்கி கொண்டு தன் கம்பீர குரலில் வந்த வேலையை பார்க்க துவங்கினார்.

"யு ஆர் அண்டர் அரெஸ்ட்" கர்ஜித்தார்.

"சார்.. நான் என்ன பண்ணேன்" கணேஷ் முகத்தில் அப்பாவித்தனத்தை காட்டிகொண்டிருந்தார் .

"உங்கள இல்ல மிஸ்டர் கணேஷ். அவங்கள " இளமாறனனின் பார்வை கணேஷை கடந்து சென்றது.

(திகில் தொடரும்)

Saturday, August 21, 2010

கண் மணியே பேசு - 5


கணேஷை வரவேற்க அந்த ரகசிய அறைக்குள் பிணத்துடன் காத்திருந்தனர் அந்த நான்கு கண்களுக்கு சொந்தகாரர்கள்.

"என்ன மிஸ்டர் கணேஷ் எங்கள இங்க எதிர்பார்கலல?"

"நீங்க..நீங்க... யாரு? நான் இதுக்கு முன்னாடி பாத்ததே இல்லையே "

"பயப்படாதீங்க கணேஷ். நாங்க உங்களுக்கு வேண்டியவங்க தான்"

"வேண்டியவங்களா? "

"பின்ன. போலீஸ் கிட்ட நீங்க கொலை செஞ்ச நிர்மலாவோட பிணம் சிக்காம இருக்க நாங்க தோண்டி எடுத்துட்டு வந்து உங்கள காப்பாத்துணோமே. அப்ப நாங்க உங்களுக்கு வேண்டியவங்க தான? "

"நிர்மலாவ நான் கொலை பண்ணேனா?"

"போதும் மிஸ்டர் கணேஷ். நிர்மலாவ மயக்குறதுக்கு யூஸ் பண்ண க்ளோரோபார்ம்ல விஷம் கலந்து அவள நீங்க கொலை பண்ணது எங்களுக்கு தெரியும்"

"வாட் நான்சென்ஸ்"

"நீங்க அந்த பழிய உங்க ஆட்கள் மேல போட முயற்சி செஞ்சது கூட எங்களுக்கு தெரியும் "

"நீங்க நல்லா கற்பனை பண்றீங்கன்னு நினைக்றேன். உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம். உங்களுக்கு இப்ப என்ன வேணும் "

"மிஸ்டர் கணேஷ் எங்களுக்கு என்ன வேணும்னு நாங்க அப்புறம் சொல்றோம். ஆனா நீங்க தப்பு செய்யலன்னு மட்டும் சொல்லாதீங்க. நிர்மலா பிணத்த போலீஸ் பிடிச்சு போஸ்ட் மார்டம் செஞ்சா எல்லாம் தெரிஞ்சிடும்"

"தாராளமா செய்ங்க. நிர்மலா மூச்சு திணறி செத்தானு தான் வரும் "

"கணேஷ், உங்களுக்கு இன்னும் பல விஷயங்கள் புரியலன்னு நினைக்றேன்"

---------------------------

பாண்டிச்சேரி .

"சார், அவங்கள அப்பவே பிடிச்சிருக்கலாமே ஏன் விட்டுட்டு இப்ப அந்த பசங்கள பிடிக்க போறோம் "

"எல்லாம் ஒரு காரணமா தான் கண்ணையன். அங்கேயே அவங்கள பிடிச்சிருந்தா நமக்கு அவங்க அங்க வந்ததுக்கான உண்மையான கரணம் தெரியாம போயிருக்கும்" இளமாறன் பதிலில் ஒரு திட்டம் உருவாகியிருந்தது தெரிந்தது.

"அப்ப அவங்க வந்தது அவங்க சொன்ன காரணத்துக்காக இல்லையா? "

"நிச்சயமா இல்ல. அந்த டெலிபோன்ல வந்த தகவல் படி எதோ புதைக்க தான் தோண்டிருக்காங்க. ஆனா இவுங்க சொன்ன சுண்டக்கஞ்சி கதை நம்பும்படியா இல்லை"

"அப்ப அவரோட ஆட்கள புடிச்சு உண்மைய விசாரிச்சிடலாமா? "

"அது ரொம்ப ஈஸி இல்ல. இத லத்தியால செய்றத விட புத்தியால செஞ்சா தான் உண்மை தெரியும் "

"சார்! சார்!. அவனுங்க வண்டி அங்க நிக்குது பாருங்க"

"கண்ணையன், நீங்க போய் அவனுங்கள கூட்டிட்டு வாங்க. நான் இங்க நிக்றேன் "

"சரி சார்"

அந்த கும்பல் போலிசை சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. சாமர்த்தியமாக ஒரு பெரும் சிக்கலில் இருந்து நழுவியதாக நினைத்து கொண்டிருந்தார்கள். அந்த நினைப்பில் மூழ்கி இருந்தவர்களை கண்ணையனின் குரல் சற்றே பயமுறுத்தியது.

"டேய் . எல்லாரும் வெளிய வாங்க. சப்-இன்ஸ்பெக்டர் சார் கூப்டுறாரு"

"ஏன்? எதுக்கு? .. நாங்க என்ன செஞ்சோம்"

"பதில் சொன்னா தான் வருவீங்களா. வாங்கடா" கண்ணையனின் உருட்டலில் சப்தம் மொத்தமாக அடங்கியது.

"சார், எதுக்கு சார் எங்கள கூப்டீங்க" கும்பலின் தலைவன் பாண்டி தான் முதலில் பேசினான்.

"எதுக்கா.. தெரியாத மாதிரி கேக்றீங்க. ஒரு பொண்ண புதைச்சிட்டு அப்புறம் ஏதும் தெரியாத மாதிரி என் கிட்டே கதை சொல்லிட்டு போனீங்க" இளமாறன் போட்டு வாங்க முயன்றார்.

"என்ன சார் சொல்றீங்க. நாங்க புதைச்சோமா? . நீங்க அங்க தான் செக் பண்ணீங்களே சார். பிணம் ஏதும் கிடைக்கலையே "

"சமாளிக்கிறதா நெனச்சுட்டு பொய் சொல்லிட்டே போகாத. மாட்னா அப்புறம் வெளிய வர முடியாத அளவுக்கு ஆய்டும்"

"சார் சும்மா மிரட்டாதீங்க. நீங்க என்ன கேட்டாலும் இது தான் என் பதில்"

"நிச்சயமா?"

"நிச்சயமா சார்"

"எங்க ஆளுங்க கணேஷ பிணத்தோட புடிச்சிருகாங்கனு சொன்னா கூடவா "

இளமாறனின் சற்றும் எதிர்பாராத அந்த பதிலில் அனைவருமே திகைத்தனர்.

கண்ணையன் ஆச்சர்யத்தில். மற்றவர்கள் அதிர்ச்சியில்.

அடுத்து வரும் வார்த்தைகள் தங்கள் வாழ்கையையே தீர்மானிக்கும் என பாண்டிக்கு புரிந்தது.

(திகில் தொடரும்)